சுமார் 600 க்கும் மேற்பட்ட கப்பல் விபத்துக்கள் கோவாவின் கடற்பரப்பில் அரங்கேறியிருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. ஆனால் நிபுணர்களோ இது இரண்டு மடங்காக இருக்கும் என்று சொல்லுகின்றனர்.
1400 இல் இருந்து 1950 வரை பல நூறு கப்பல்கள் புயல்கள், இயற்கை சீற்றங்கள், மோசமான வானிலை, கடலில் மறைந்திருக்கும் திட்டுகள் மற்றும் மணல் திட்டுகள் காரணமாக கோவாவின் கடலில் கவிழ்ந்தன என்று சொல்லப்படுகிறது.
அதுவும் புதிதாக 1960 களில் மூழ்கிய ஒரு கப்பல் இப்போது கோவாவின் புதிய சுற்றுலா அம்சமாக மாறியுள்ளது.
அதனைப் பற்றிய கூடுதல் விவரங்களை இங்கே காண்போம்!
விபத்துக்குள்ளான எஸ்.எஸ். ரீட்டா
தெற்கு கோவா மாவட்டத்தில் உள்ள வாஸ்கோ துறைமுகம் அருகே அரை நூற்றாண்டுக்கு முன்பு மூழ்கிய கப்பல் இப்போது நாடு முழுவதும் இருந்து டைவிங் ஆர்வலர்களை ஈர்க்கிறது.
1960 களில், எஸ்.எஸ். ரீட்டா, குஜராத்தில் இருந்து ரயில் தண்டவாளத்தை கோவாவுக்கு ஏற்றிச் சென்றபோது, கிராண்ட் ஐலண்ட் அருகே கரையில் விபத்துக்குள்ளானது.
பாறைகளில் மோதிய கப்பல் சிறிது சிறிதாக நாளடைவில் மூழ்கி கடலின் ஆழத்துக்கு சென்றுவிட்டது. அந்த இடிபாடுகளின் மிச்சங்களை சுவாரி ஆற்றில் நாம் காணலாம்.
ஊடக அறிக்கையின்படி, பாறைகளில் மோதி கப்பல் சேதமடைந்ததாக நம்பப்படுகிறது. இருப்பினும், இந்த சம்பவத்தை கூறும் பதிவுகள் எதுவும் இல்லை.
மூழ்கிய கப்பல்களைக் காண ஆர்வம் காட்டும் சுற்றுலாப் பயணிகள்
விபத்துக்குள்ளான பழையக் கப்பல்களை காண பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். அதற்கு காரணமும் உண்டு!
ஏனென்றால் கடலுக்கு அடியே மூழ்கி போகும் கப்பல்கள் நாளடைவில் பாசி பிடித்து, பல கடல் வாழ் உயிரினங்களின் இருப்பிடமாகவும், பவளப்பாறைகளின் புகலிடமாகவும் மாறுகின்றன.
கரையில் இருந்து கொஞ்ச தூரத்திலேயே நம் ஆராயக்கூடிய அழகு இருப்பதை அறிந்துவிட்டு யாராலும் சும்மா இருக்க முடியாது இல்லையா! அதை காண வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் எழுவது நியாயம் தான்.
தீவுக்கு அருகிலுள்ள ஏழு டைவிங் தளங்களில் இதுவும் ஒன்றாகும் என்று ஸ்கூபா டைவிங் பயிற்சி நிறுவனத்தை நடத்தும் முன்னாள் கடற்படை வீரர் ஸ்கந்தன் வாரியர் கூறினார்.
ஸ்னோர்கெலிங் தளமாக மாறிய எஸ்.எஸ். ரீட்டா
1960 களில் விபத்துக்குள்ளான எஸ்.எஸ். ரீட்டா 7 முதல் 14 மீட்டர் ஆழத்தில் மூழ்கி உள்ளது. கப்பலின் மிச்சங்கள் அனைத்தும் செயற்கை பாறைகளாக மாற்றப்பட்டு உள்ளன.
மூழ்கிய கப்பல் முழுவதும் மீன்களுக்கும், பல கடல் வாழ் உயிரினங்களுக்கும் வாழ்விடமாக மாறி விட்டது.
இந்த இடத்திற்கு வருகை தரும் பயணிகள் இது மிகவும் அழகான மற்றும் அற்புதமான தளங்களில் ஒன்றாகும் என்று கூறுகிறார்கள்.
கப்பலின் வின்ச்கள், வில், டேவிட், போர்ட்ஹோல்கள், ஏணி மற்றும் பிற விஷயங்கள் போன்ற பல்வேறு விஷயங்களை கண்டு சுற்றுலாப் பயணிகள் வியக்கிறார்கள்.
இந்த தனித்துவமான சுற்றுலாத் தலம் கோவாவிற்கு மேலும் மெருகு சேர்த்து உள்ளது. பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இதனைக் காண ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் இதே பகுதியில் இன்னும் இரண்டு கப்பல்கள் இருப்பதாக மூழ்கி உள்ளன என்று கூறுகின்றனர். இருப்பினும், அவை கடற்பரப்பின் ஆழமான பகுதிகளில் மூழ்கியுள்ளன, அவற்றை நாம் அடைவது கடினமாம்.
ஆகவே அடுத்த முறை நீங்கள் கோவா செல்லும் போது, இதனையும் உங்களது பக்கெட் லிஸ்டில் சேர்த்து வைத்து விசிட் அடித்து விட்டு வாருங்கள்!