சாகசப் பயணம் செல்வதை உயிர்மூச்சென கொண்டிருக்கும் வீரர்களுக்கு அந்தர்கங்கே கண்டிப்பாக ஒரு மறக்கமுடியாத பயணமாக அமையும். அந்தர்கங்கே என்ற பெயர் கர்நாடகாவின் கோலார் மாவட்டத்திற்கு கிழக்கே அமைந்திருக்கும் குன்றுகளில் எந்த காலத்திலும் வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஓடை நீரை குறிக்கிறது. அந்தர்கங்கே அமைந்திருக்கும் குன்றுகளின் அடிவாரத்தில் அடர்ந்த காடு ஒன்று இருக்கிறது. இந்தக் காட்டின் தாவரங்கள் குன்றின் உச்சியை நெருங்க நெருங்க குறைந்துகொண்டே செல்லும்.
அழகிய அந்தர்கங்கே பயணம்
இறுதியாக குன்றின் உச்சியில் கிரீடம் வைத்தது போல் முற்புதர்கள் அடர்த்தியாக மண்டிக் கிடக்கும் காட்சியை பயணிகள் காணலாம். அந்தர்கங்கேயின் எழில்மிகு தோற்றத்திற்கு குன்றுகளில் உள்ள குகைகளும், பாறைகளின் வடிவமுமே காரணம். அந்தர்கங்கே சாகசப் பயணம் செல்ல துடிப்புள்ளவர்களுக்கும், மலை ஏறும் ஆர்வம் உள்ளவர்களுக்கும் நிச்சயமாக சிறந்த அனுபவமாக இருக்கும். குன்றின் உச்சிக்கு செல்ல குறைந்தது 2 அல்லது 1 மணி நேரமாவது ஆகும். எனினும் இறங்கி வர குறைந்த காலமே பிடிக்கும். கயிறு மூலமாக ஏறி குன்றின் உச்சிக்கு செல்வது இங்கு வரும் சாகசப் பிரியர்களுக்கு பிடித்த செயலாகும். அந்தர்கங்கேவுக்கு அதன் வற்றாத நீர் வரத்தை காணவும், அங்கு அமைந்திருக்கும் கோயிலை தேடியும் புனித யாத்ரிகர்கள் அடிக்கடி வந்து செல்வதால் அப்பகுதியின் பிரசித்தி பெற்ற ஆன்மிக ஸ்தலமாகவும் அந்தர்கங்கே அறியப்படுகிறது.
அழகிய அந்தர்கங்கே பயணம்
கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில், அந்தர்கங்கே குன்றுகளில் மீது அந்தர்கங்கே குகைகள் அமைந்திருக்கின்றன. அந்தர்கங்கேயின் குகைகள் எரிமலை சீற்றத்தால் வெடித்து சிதறிய சிறிய சிறிய பாறைகளால் உருவானது. பல ஆண்டுகளுக்கு முன்னால் பெரிய மற்றும் சிறிய பாறைகள் ஒன்றோடு ஒன்று இணைந்து குகை போன்ற வடிவமாய் உருவாகின. அந்தர்கங்கேயின் சில குகைகள் சிறியதாகவும், குறுகியும் காணப்படுவதால் பயணிகள் அதனுள்ளே ஊர்ந்துதான் செல்ல முடியும். இந்த காரணத்துக்காகவே சாகசத்தின் மீது தீராத தாகம் கொண்ட பயணிகள் இங்கு படை எடுத்து வருவது போல் கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.
அழகிய அந்தர்கங்கே பயணம்
அந்தர்கங்கேயில் குகைகளை தவிர பழமையான கோயில்களுக்கும்,வேறு சில ஆன்மீக ஸ்தலங்களுக்கும் பயணிகள் செல்லலாம். அந்தர்கங்கே பெங்களூரிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நடைபயணம் செல்வது, குன்றுகளிலிருந்து கயிறு மூலமாக கீழிறங்குவது, கயிறுகளில் தொங்கிக் கொண்டு செல்வது போன்ற சாகசங்களில் ஈடுபட்டு பொழுதை களிக்கலாம். அந்தர்கங்கேயில் உள்ள இயற்கை நீரூற்றுகளை காணவும், இதமான வெப்பநிலைக்காகவுமே எண்ணற்ற சுற்றுலாப் பயணிகள் ஆண்டு தோறும் அந்தர்கங்கேயை தேடி வருகின்றனர்.