சரித்திர புகழ் வாய்ந்த பனவாசி நகரம் உத்தர கன்னடா மாவட்டத்தில், வரதா நதியின் கரையோரத்தில் அமைந்திருக்கும் ஆன்மீக ஸ்தலமாகும். மகாபாரத காலத்திலிருந்தே பனவாசி புகழ் பெற்ற நகரமாக விளங்கி வருகிறது. வியாசர் எழுதிய மகாபாரதத்தில் பனவாசி நகரம், வனவாசகம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. பின்னர் 1552-ஆம் ஆண்டின் விஜயநகர கல்வெட்டுகளில் கனகவதி என்றும், இரண்டாம் புலிகேசி காலத்திய கல்வெட்டுகளில் ஜலதுர்கா என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. இதை தவிர கொங்கனபுரா என்றும் பனவாசி அழைக்கப்படுகிறது.
Cover: Shashidhara halady
பனவாசியின் புகழுக்கு முக்கிய காரணமாக விளங்குவது மதுகேஸ்வரா ஆலயமே ஆகும். இந்த கோயில் 9-ஆம் நூற்றாண்டில் கடம்ப மன்னர்களால் கட்டப்பட்டது. இதன் கட்டிடக் கலை சிறப்புக்காகவும், கோயிலை சுற்றி உள்ள சிற்ப வேலைப்பாடுகளின் தனித்துவமான அழகுக்காகவும் இது உலகப் புகழ் பெற்றது. மதுகேஸ்வரா கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் கடம்போஸ்தவா என்ற கலாச்சார திருவிழா நடைபெறும். இதில் யக்ஷ்கானா உள்ளிட்ட பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள் , கர்நாடக மாநில அரசால் வெகு விமரிசையாக நடத்தப்படும்.
மதுகேஸ்வரா கோயில் பல சிறப்புகளுக்கு சொந்தமானது . இங்குள்ள ஒரே கல்லாலான நந்தி மற்ற கோயில்களை போல் அல்லாமல், அதனுடைய தலை சற்று திரும்பிய நிலையில் காணப்படும். அது தன்னுடைய இடக் கண்ணால் சிவலிங்கத்தையும், வலக் கண்ணால் பார்வதி தேவி சந்நிதானத்தையும் பார்த்துக் கொண்டிருக்கும். மேலும் இந்த கோயிலின் நரசிம்ம மூர்த்தி சிலையும் மற்ற கோயில்களில் இருப்பது போல் இல்லாமல் இரண்டு கைகளுடன் காட்சியளித்துக் கொண்டிருக்கும். அதேபோல் பாதி சிலையுடன் அமைந்திருக்கும் அந்தார கணபதி சன்னதி மிகவும் வித்யாசமானது.
அந்த சிலையின் மறு பாதி வாரணாசியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் படமெடுத்து ஆடுவது போல் 2-ஆம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட ஐந்து தலை நாகத்தின் சிற்பம் பயணிகளின் கவனத்தை வெகுவாக கவரும். அந்த சிற்பத்தை உன்னிப்பாக கவனித்தால் அதில் சில கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டிருப்பதை பயணிகள் காணலாம். இந்த கல்வெட்டு இளவரசர் சிவஸ்கந்த நாகஸ்ரீ காலத்தை சேர்ந்தது. அதோடு ஒரே கல்லாலான கல் மஞ்சமும், திரிலோக மண்டபமும் இக்கோயிலின் தனிச்சிறப்பு