உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஃபைஸாபாத் மண்டலத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் ஒன்று இந்த பாராபங்கி. இந்த பெயரிலேயே இதன் தலைநகரமும் அழைக்கப்படுகிறது. பூர்வாஞ்சல் பகுதிக்கான நுழைவாயிலாக இந்த பாராபங்கி அமைந்திருக்கிறது. முற்காலத்தில் பல யோகிகளும் ரிஷிகளும் தவம் புரிந்த இடமாக இது அறியப்படுகிறது. கி.பி 1000 த்தில் இந்த பகுதி கண்டறியப்பட்டதாக நம்பப்படுகிறது. பின்னாளில் முஸ்லிம்களின் ஆளுகைக்குள் இருந்தபோது இந்த பிரதேசம் 12பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. எனவேதான் இதற்கு பாரா என்ற அடைமொழி வந்திருக்கிறது. பன் என்பது வனத்தைக்குறிக்கும் எனவே 12 துண்டங்களை கொண்ட காடு என்றும் வேறொரு பெயர்க்காரணம் சொல்லப்படுகிறது.
சுற்றுலா அம்சங்கள்
பாராபங்கி பகுதியில் பார்ப்பதற்கும் ரசிப்பதற்கு ஏராளமான அம்சங்கள் நிறைந்துள்ளன. பாரிஜாத மரம் எனப்படும் அரிய வகை இருபால் தாவரம் இப்பகுதியில் காணப்படுகிறது. பாராபங்கி கண்டாகர் அல்லது மணிக்கூண்டு இந்த நகரத்தின் நுழைவாயிலாக அமைந்திருக்கிறது. இங்குள்ள மஹாதேவா கோயில் மாவட்டத்திலேயே பழமையான கோயிலாக அமைந்துள்ளது. பாராபங்கி மாவட்டத்தில் பல வரலாற்றுக்கிராமங்களும் நகரங்களும் நிரம்பியுள்ளன. அரசகுடும்பத்திற்கான ராஜ குருவின் சொந்த ஊரான சத்ரிக், ஹாஜி வாரிஸ் அலி ஷா எனும் தர்க்கா சன்னதி அமைந்துள்ள தீவா, முக்கிய யாத்ரீக படோசராய், குந்தி பிறந்த இடமாக சொல்லப்படும் கிண்டூர் ஆகியவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.
பயணத்திற்கு ஏற்ற பருவம்
நவம்பர் முதல் மார்ச் வரையுள்ள பருவம் இப்பகுதிக்கு சுற்றுலா விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது. இதர மாதங்களில் இங்கு அதிக உஷ்ணம் காணப்படும்.
விமான மார்க்கம், ரயில் மார்க்கம் மற்றும் சாலை மார்க்கமாக இந்த பாராபங்கி மாவட்டத்துக்கு பயணம் மேற்கொள்ளலாம்.
பாராபங்கி கண்டாகர்
பாராபங்கி கண்டாகர் எனப்படும் இந்த மணிக்கூண்டு நகரின் மையப்பகுதியிலேயே அமைந்திருக்கிறது. மேலும் நகரத்திற்குள் வாகனங்கள் நுழைவாயிலாகவும் பயன்படுகிறது. கல்லால் அமைக்கப்பட்டிருக்கும் இந்த அலங்கார வளைவு வாயிலில் உள்ள கோபுரம் இந்திய நேரத்தை காண்பிக்கிறது. நகரின் முக்கிய அடையாளமாக அமைந்திருக்கும் இந்த மணிக்கூண்டு அமைப்பில் கலையம்சம் நிரம்பிய சித்திரப்பொறிப்புகள் நிரம்பியுள்ளன. சுற்றுலாப்பயணிகள் விரும்பி ரசிக்கும் ஒரு அம்சமாக இது பிரசித்தி பெற்றுள்ளது.
சொர்க்கத்தின் மரம்
பாரிஜாத் மரம் எனப்படும் இது உலகத்திலேயே இது போன்ற ஒரே வகை என்பதாக புகழ் பெற்றிருக்கிறது. இருபால் தாவர இயல்பை கொண்டிருக்கும் இது மகரந்த சேர்க்கை இல்லாமலேயே சுய இனப்பெருக்கம் செய்துகொள்கிறது. மேலும் இந்த மரம் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. இந்த மரத்தின் இலைகள் ஐந்து முனைகளை கொண்டதாக மனிதக்கையின் வடிவத்தில் காட்சியளிக்கிறது. இதன் மலர்கள் மிக அழகான தோற்றத்தை கொண்டிருப்பதோடு அற்புதமான சுகந்தத்தையும் வீசுகிறது. இதுபோன்ற வேறொரு மரத்தை சொர்க்கத்தில் மட்டுமே பார்க்க முடியும் என்பதாக உள்ளூர் கதைகள் கூறுகின்றன.
மஹாதேவா கோயில்
பாராபங்கி நகரத்தில் உள்ள பழமையான சிவன் கோயில்களில் ஒன்றான இந்த மஹாதேவா கோயில் ஒரு அபூர்வமான சிவலிங்கத்தை கொண்டுள்ளது. தீவிர சிவபக்தர்கள் விரும்பி இந்த கோயிலுக்கு விஜயம் செய்கின்றனர். தலபுராணக்கதைகளின்படி ஒரு எளிய பிராம்மண வேதியரான லோதேராம் அவஸ்தி என்பவர் தனது வயலில் இந்த சிவனின் சிலையை கண்டுபிடித்து இந்த கோயிலை எழுப்பியதாக சொல்லப்படுகிறது. மஹாபாரத காவியத்தின் பல இடங்களில் இந்த கோயில் பற்றிய குறிப்பு இடம் பெற்றிருக்கிறது. மஹாசிவராத்திரி தினத்தில் இந்த கோயில் அலங்கரிக்கப்பட்டு ராப்பூஜை நடத்தப்படுகிறது.
சத்ரிக்
சத்ரிக் எனும் வரலாற்று நகரம் பாராபங்கி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. அரச குடும்பத்தினரின் ராஜகுரு வசித்த இடமான இந்த ஊரில்தான் அவர் ராஜகுடும்ப இளவரசர்களுக்கு சிறப்புக்கல்வி பயிற்சியை அளித்துள்ளார். ஏராளமான முனிவர்கள் மற்றும் யோகிகள் தவம் புரிந்த ஸ்தலமாகவும் இது அறியப்படுகிறது. மேலும், சலார் ஷா என்பவரின் தந்தைக்காக கட்டப்பட்டுள்ள கல்லறை ஒன்றும் இங்குள்ளது.
தீவா ஷெரிஃப்
ஹாஜி வாரிஸ் அலி ஷா எனும் சுஃபி ஞானியின் கல்லறைக்காக இந்த தீவா அல்லது தீவா ஷெரிஃப் எனும் இடம் பிரசித்தி பெற்றிருக்கிறது. இவர் ‘மனித குலம் யாவற்றிற்கும் பொதுவான அன்பு' எனும் கருத்தை வலியுறுத்தியவர் ஆவார். கலையம்சம் நிரம்பிய நினைவுச்சின்னமாக அவரது கல்லறை வளாகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த நினைவுச்சின்னம் அமைந்திருக்கும் இதே இடத்தில் அந்த யோகி மரணமடைந்ததாக சொல்லப்படுகிறது. எனவே இந்த இடத்திலேயே அவரது உடல் புதைக்கப்பட்டு அவரது சீடர்களால் நினைவு சின்னமும் எழுப்பப்பட்டிருக்கிறது. நடமாட்டம் அதிகம் இல்லாத இந்த அமைதிப்பிரதேசம் பயணிகளால் விரும்பி ரசிக்கப்படுகிறது.