கேரளாவின் காசர்கோட் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறிய நகரமான பேக்கல், அமைதியின் இருப்பிடமாய் பள்ளிக்கரா பகுதியில், அரபிக் கடலின் கரையோரத்தில் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. இந்த நகரில் வலியகுளம் என்ற பெயரில் முன்னொரு காலத்தில் மிகப்பெரிய அரண்மனை ஒன்று இருந்தது. இதன் காரணமாகவே பெரிய அரண்மனை என்ற பொருளில் இந்த நகருக்கு பேக்கல் என்று பெயர் வந்தது.
பேக்கல் சுற்றுலா
பேக்கல் நகரம் அதன் விருந்தோம்பல் பண்புக்காக பயணிகளிடையே மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது. அதுவும் இங்கு உள்ளூர்வாசிகளால் தயார் செய்யப்படும் 'பாயசம்' என்றும் நம் அடி நாக்கில் தித்தித்துக்கொண்டே இருக்கும். பேக்கல் நகரில் உள்ள கோயில்கள் பல்வேறு குடும்பங்களுக்கு சொந்தமானவை.
இந்தக் கோயில்களுக்கு நீங்கள் ஆண்டின் தொடக்கத்திலேயே வந்தால் இப்பகுதிகளில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் தெய்யம் திருவிழாவில் கலந்து கொள்ளலாம். பேக்கல் நகரின் வரலாற்றுப் பெருமைக்கு மூல முதல் காரணமாக பேக்கல் கோட்டை விளங்கி வருகிறது. அதுவும் பிரம்மாண்ட அரபிக் கடலின் நீல நீர் பிரவாகத்தின் பின்னணியில் காண்போரை மயக்கும் கொள்ள செய்யும் பேரழகு படைத்தது இந்தக் கோட்டை.
இந்த சரித்திரச் சிறப்பு வாய்ந்த கோட்டை இந்திய தொல்பொருள் துறையினரால் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதோடு பேக்கல் கோட்டையின் உள்ளேயே அமைந்திருக்கும் விருந்தினர் மாளிகை கேரள பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் ஹனுமான் கோயிலும், திப்பு சுல்தான் கட்டிய பழைய மசூதியும் பேக்கல் நகரின் இதர முக்கிய சுற்றுலா அம்சங்களாக அறியப்படுகின்றன.
அனந்தபுரா கோயில்
கேரளாவின் புகழ்பெற்ற புனித ஸ்தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் அனந்தபுரா கோயில், அனந்த பத்பநாப சுவாமியின் மூலஸ்தானமாக கருதப்படுகிறது. இந்தக் கோயிலின் ஏரியில் உள்ள முதலை கோயிலின் பாதுகாவலாக கருதப்படுவதோடு, பக்தர்களால் மிகவும் மரியாதைக்குரிய பிராணியாகவும் மதிக்கப்படுகிறது. அதோடு இந்த முதலை இறந்து போனாலும், அதன் இடத்தில் கோயிலை பாதுகாக்க மற்றொரு முதலை இந்த ஏரிக்கு வரும் என்றும் நம்பப்படுகிறது. பேக்கல் நகரிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் அனந்தபுரா கோயில் 9-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அதோடு பிராதான கோயிலை சுற்றி தலைவாயில் ஒன்றும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.
சந்திரகிரி கோட்டை
சந்திரகிரி கோட்டை தனக்கு ஒரு புறத்தில் தென்னை மரங்கள் எல்லையமைத்த சந்திரகிரி நதியையும், மறுபுறம் பிரம்மாண்ட அரபிக் கடலையும் கொண்டு மனதை மயக்கும் சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இந்தக் கோட்டையின் மேற்கு பாதுகாப்பு அரண் அமைந்துள்ள பகுதியிலிருந்து நீங்கள் கண்ணை கவரும் சூரிய அஸ்த்தமன காட்சியை கண்டு ரசிக்கலாம். சந்திரகிரி கோட்டை 17-ஆம் நூற்றாண்டில் பெடானூரை சேர்ந்த சிவப்ப நாயக் மன்னரால் கட்டப்பட்டது. அப்போது கொளத்துநாடுக்கும், துளுநாடுக்கும் சந்திரகிரி நதிதான் எல்லையாக இருந்து வந்தது. இந்த இரு சாம்ராஜ்யங்களும் அந்த காலத்தில் மிகவும் சக்தி வாய்ந்தவைகளாக விளங்கி வந்தன.
பேக்கல் பீச்
பேக்கல் நகருக்கு நீங்கள் சுற்றுலா வரும்போது கண்டிப்பாக பேக்கல் பீச்சுக்கு சென்று வர வேண்டும். இங்கு நீங்கள் அமைதியான காயல் நீர்ப்பரப்பில் நீந்தித் திளைக்கலாம், வரிசையாக அமைந்திருக்கும் தென்னை மரங்களின் நிழல்களில் சிறு உலா செல்லலாம், அதோடு குன்றுகளின் மீது ஏறி விளையாடி சாகசத்தின் சிலிர்ப்பூட்டும் அனுபவத்தை சுகிக்கலாம். அதுமட்டுமல்லாமல் பேக்கல் கடற்கரையிலிருந்து சூரிய அஸ்த்தமனத்தை பார்த்து ரசிக்கும் அனுபவம் மிகவும் அலாதியானது. மேலும் பேக்கல் கடற்கரைக்கு வெகு அருகில் உள்ள கோட்டை ஒன்றில் திரைப்படங்கள் அதிகமாக படம் பிடிக்கப்பட்டு வருகின்றன. இது தவிர நேரமிருந்தால் கடற்கரைக்கு அருகாமையில் அமைந்திருக்கும் சிறிய மீனவ கிராமத்துக்கும் நீங்கள் சென்று வரலாம்.