இந்திய தீபகற்பத்தின் தென்கோடி முனையில் அரேபிய, இந்திய மற்றும் வங்காள விரிகுடா ஆகிய மூன்று கடல்களின் எல்லையில் அமைந்துள்ள கன்னியாகுமரி இந்தியாவின் தென் மகுடமாகும்! மூன்று நீர்நிலைகள் சந்திக்கும் இடம் மட்டுமல்ல, பல நூற்றாண்டுகளாக வளர்ந்த பல்வேறு கலாச்சாரங்கள், மதங்கள் மற்றும் சிந்தனைகளின் கலவையாக நிற்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள இந்த அழகான நகரத்தின் வசீகரம் ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. அழகான கோயில்கள், வரலாற்று நினைவுச்சின்னங்கள், கோட்டைகள், அருங்காட்சியகங்கள் மற்றும் அமைதியான கடற்கரைகள் ஆகியவற்றால் ஆசீர்வதிக்கப்பட்ட கன்னியாகுமரியில் நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்களின் பட்டியல் இதோ இங்கே!
கன்னியாகுமரி கடற்கரை
இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள இந்த அழகிய கடற்கரை கன்னியாகுமரியில் பார்க்க வேண்டிய முதன்மையான சுற்றுலாத் தலமாகும்.
இந்தியாவில் ஒரே கடற்கரையில் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தை பார்க்கக்கூடிய ஒரே இடம் கன்னியாகுமரி மட்டுமே! அதிசயமாக, மூன்று கடல்களின் நீரும் ஒன்றோடு ஒன்று சேராததை இங்கே காணலாம், டர்க்கைஸ் நீலம், அடர் நீலம் மற்றும் கடல் பச்சை என நீரை நீங்கள் வேறுபடுத்தி அறியலாம்.
சுவாமி விவேகானந்தர் மண்டபம்
அற்புதமான கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக ஒரு சிறிய தீவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை நினைவகம் கன்னியாகுமரியில் உள்ள ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாகும். சுவாமி விவேகானந்தர் 1892 இல் மூன்று நாட்கள் தியானத்திற்குப் பிறகு இங்கு ஞானம் பெற்றார் எனவும், தேவி கன்னியாகுமரி இந்த பாறையில் கடுமையான துறவறம் மேற்கொண்டதாகவும் நம்பப்படுகிறது.
அமைதியான தியான் மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்வது மற்றும் மூன்று வலிமைமிக்க பெருங்கடல்கள் சந்திக்கும் இடத்தை ஆச்சரியத்துடன் பார்ப்பது ஒரு ஆனந்தமான அனுபவமாக இருக்கும்.
திருவள்ளுவர் சிலை
133 அடி உயரத்தில் 38 அடி உயர பீடத்தில் பெருமையுடன் நிற்கும் இந்த சிலை முக்கிய தமிழ் கவிஞரும் தத்துவஞானியுமான திருவள்ளுவரின் சிலையாகும். விவேகானந்தர் பாறை நினைவகத்தை ஒட்டியிருக்கும் இந்த பிரம்மாண்டமான சிலை வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் கட்டிடக்கலை ஆர்வலர்கள் மத்தியில் பிரபலமான ஈர்ப்பாகும். இது விவேகானந்தர் மண்டபத்தை ஒட்டியே அமைந்துள்ளதால் ஒரே கட்டணத்தில் இந்த இரண்டு இடங்களுக்கும் சென்று வந்து விடலாம்.
பத்மநாபபுரம் அரண்மனை
திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தின் கட்டிடக்கலையின் செழுமையான பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் இந்த அரண்மனை கட்டப்பட்டுள்ளது. ஆசியாவின் மிகப் பெரிய மர அரண்மனையாக அறியப்படும் இந்த அரண்மனை சுவரோவியங்கள், அழகான தளபாடங்கள், தரை சிற்பங்கள் முதல் கண்ணைக் கவரும் பழங்கால பொருட்கள் மற்றும் தனித்துவமான கலைப்பொருட்கள் வரை அனைத்தையும் கொண்டுள்ளது.
கன்னியாகுமரி மையத்திலிருந்து 34 கிமீ தொலைவில் உள்ளதால் பேருந்துகள் மற்றும் டாக்சிகள் மூலம் அரண்மனைக்கு செல்லலாம்.
அவர் லேடி ஆஃப் ரேன்சம் சர்ச்
அன்னை மரியாளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புகழ்பெற்ற கத்தோலிக்க தேவாலயமான அவர் லேடி ஆஃப் ரேன்சம் சர்ச் கோதிக் கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக பெருமையுடன் நிற்கிறது. தேவாலயத்தின் சுவர்கள் மற்றும் கூரைகளின் மேல் இருக்கின்ற கண்ணைக் கவரும் வேலைப்பாடுகள் கண்டு நீங்கள் வியப்பில் ஆழ்வீர்கள்.
தேவாலயம் கன்னியாகுமரி மையத்திலிருந்து 3 கிமீ தொலைவில் உள்ளதால். டாக்சிகள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்கள் மூலம் எளிதாக அடையலாம்.
பகவதி அம்மன் கோயில்
தேவி கன்னியாகுமரி கோவில் என்றும் அழைக்கப்படும் இந்த பகவதி அம்மன் கோயில் கன்னியாகுமரியின் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இந்தியாவில் உள்ள 108 சக்திபீடங்களில் ஒன்றாக இருப்பதால், இது 3000 ஆண்டுகளுக்கு முந்தைய மத முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறப்படுகிறது. கேரளாவின் பாரம்பரிய கோயில் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட இந்தக் கோயில் 'பெண்களின் சபரிமலை' என்று போற்றப்படுகிறது.
ஆன்மிக ஒளியைத் தவிர, கோவில் அதன் ஈர்க்கக்கூடிய பழங்கால கட்டிடக்கலை மற்றும் வசீகரிக்கும் இயற்கை அழகுக்காகவும் அறியப்படுகிறது. நகரத்தின் எந்தப் பகுதியிலிருந்தும் கோயிலுக்கு செல்ல டாக்ஸி அல்லது ஆட்டோ ரிக்ஷாக்கள் எளிதில் கிடைக்கும்.
திற்பரப்பு அருவி
50 அடி உயரத்தில் இருந்து விழும் திற்பரப்பு நீர்வீழ்ச்சி, மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட அருவியாகும். இயற்கை ஆர்வலர்களின் விருப்பமாக இருக்கும் இந்த நீர்வீழ்ச்சி பல்வேறு விலங்கினங்கள் மற்றும் பசுமையால் சூழப்பட்டுள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் படகு சவாரி செய்யவும், குளிக்கவும் அனுமதி உண்டு. நீர்வீழ்ச்சி கன்னியாகுமரியில் இருந்து சுமார் 55 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளதால் டாக்ஸி அல்லது பேருந்து மூலம் நீர்வீழ்ச்சியை அடையலாம்.
மேலும் காந்தி மண்டபம், தாணுமாலயன் கோயில், வட்டக்கோட்டை, மாத்தூர் ஆழ்குழாய், மெழுகு அருங்காட்சியகம், சொத்தவிளை கடற்கரை, சுனாமி நினைவுச் சின்னம், புனித சேவியர் தேவாலயம், சுப்ரமணியர் கோயில், கன்னியாகுமரி வியூபாயின்ட், சாய்பாபா கோயில், சித்தரால் ஜெயின் நினைவுச் சின்னங்கள் மற்றும் ஆதிகேசவப் பெருமாள் கோயில் ஆகியவை கன்னியாகுமரியில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும்.
கன்னியாகுமரிக்கு எப்படி அடைவது?
கன்னியாகுமரி விமானம், ரயில் மற்றும் சாலை வழியாக நாட்டின் பிற பகுதிகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. நீங்கள் விமானம் மூலம் செல்கிறீர்கள் என்றால், கன்னியாகுமரிக்கு 89 கிமீ தொலைவில் அமைந்துள்ள திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையமத்திற்கு செல்லுங்கள். அங்கிருந்து நீங்கள் பேருந்து அல்லது டாக்ஸியில் கன்னியாகுமரி நகரை அடையலாம். கன்னியாகுமரியில் இரயில் நிலையமும் உள்ளது, டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் போன்ற பல முக்கிய நகரங்களில் இருந்து ரயில்கள் இங்கு வழக்கமாக இயக்கப்படுகின்றன. கோயம்புத்தூர், மதுரை, பாண்டிச்சேரி மற்றும் தெற்கில் உள்ள பிற முக்கிய நகரங்களிலிருந்து பல பேருந்துகள் இயக்கப்படுவதால், இந்த நகரம் நல்ல சாலை இணைப்பையும் கொண்டுள்ளது.