வந்தாரை வாழ வைக்கும் சென்னை என வந்தோர் வாழ்ந்தோரெல்லாம் புகழும் சென்னைக்கு தனியே அறிமுகம் தேவையில்லைதான். சென்னையைப் பற்றி சொல்ல புதிதாக என்ன இருக்கிறது என்று எண்ணும்போதுதான் புரிய வந்தது சென்னையில் ஒவ்வொரு பகுதியும் தினந்தோறும் அசுர வளர்ச்சியடையும் என்ற உண்மை. மதராஸ் சென்னையாக மாறிய போதும் சரி, சென்னை சிங்காரச் சென்னையாக மாற்றப்பட்டபோதும் சரி உலகின் கவனம் சென்னையின் மீது விழ பல்வேறு இடங்கள் மக்கள் கூடும் மன மகிழ் தளங்களாக மாறிப்போனது.
தடுக்கி விழுந்த இடங்களெல்லாம் பன்னாட்டு நிறுவனங்கள் முளைக்க இன்று சென்னை உலகின் டாப் 50 பெரிய நகரங்களில் ஒன்றாக வளர்ந்துவிட்டது என்றே சொல்லலாம்.
சரி அப்படிப்பட்ட சென்னையில் சுற்றிப்பார்க்க என்ன இருக்கிறது என்று கேட்டால் அதிகபட்சம் மெரினா கடற்கரையும், அண்ணா எம்ஜியார் கருணாநிதி சமாதியும் கண்முன் வந்து போகும். சிலருக்கு பெசன்ட் நகர் பீச், சாந்தோம் அதையும் தாண்டி யோசித்தால் கபாலீசுவரர், பார்த்தசாரதி கோவில் நினைவுக்கு வரும். சரி இவ்ளோதான் சென்னையா என்றால் நம்மில் பலருக்கு தெரியவில்லை இங்கு நூற்றுக்கணக்கில் சுற்றுலா அம்சங்கள் நிறைந்து காணப்படுகிறது என்று. சரி சென்னையின் ஒட்டு மொத்த சுற்றுலாத் தளங்களையும் இந்த பதிவில் காண்போம் வாருங்கள்.
சும்மா ஒரு இன்ட்ரோ
சென்னையில் இதெல்லாம் இருக்கா என்று நம்மை ஒரு நிமிடம் யோசிக்க செய்யும் சில இடங்களைப் பற்றி முதலில் காண்போம். சென்னை கோட்டை முதல் பட்டினப்பாக்கம் வரை சென்னை மாநகரம் சாரி சாரி இப்ப இன்னும் பெருசா ஆயிடிச்சி. கலங்கரை விளக்கம், அண்ணா, கருணாநிதி,எம்ஜியார் நினைவிடங்கள், மகாத்மா காந்தி, அன்னி பெசன்ட்,கால்ட்வெல்,திருவள்ளுவர், பாரதியார், காமராஜர் என நாட்டுக்கு சேவைச் செய்த பலரின் நினைவு இடங்களும் இங்கு இருக்கின்றன.
சென்னையில் காணவேண்டிய இடங்கள்
அரசு அருங்காட்சியகம், சென்னை ரயில் அருங்காட்சியகம், பிர்லா கோளரங்கம், விவேகானந்தர் இல்லம், வள்ளுவர் கோட்டம், புனித ஜார்ஜ் கோட்டை, ரிப்பன் கட்டிடம், விக்டோரியா பொது மண்டபம், வண்டலூர் பூங்கா, முதலைப் பூங்கா, கிண்டி பூங்கா, அடையார் பூங்கா, சேத்துப்பட்டு ஏரி, தட்சிணசித்ரா, கலாட்சேத்ரா, சோழ மண்டலம் கலைஞர்கள் கிராமம், கபாலீசுவரர், பார்த்தசாரதி,புனித தாமஸ் மலை, சாந்தோம், கன்னி மேரி அர்மேனியா தேவாலயம், புனித மேரி தேவாலயம், ஆயிரம் விளக்கு மசூதி, திருவல்லிக்கேணி பெரிய மசூதி, தியாகராயநகர், ஜார்ஜ் டவுன், பாரி முனை, பர்மா பஜார், மூர் மார்க்கெட், பலதரப்பட்ட மால்கள், தியேட்டர்கள் என சென்னை மாநகரத்துக்குள்ளேய பல இடங்கள் இருக்கின்றன. வாருங்கள் ஒவ்வொன்றைக் குறித்தும் விரிவாக காணலாம்.
கடற்கரைகள் - பீச்ல ஒரு சூப்பர் பார்ட்டி
சென்னையில் மட்டும் எத்தனை பீச்கள் இருக்குது தெரியுமா? சென்னையில் பல ஆண்டுகளாக இருப்பவர்கள் சிலருக்கே இது தெரியாது. வாங்க எல்லா பீச்சுக்கும் போய்ட்டு வரலாம்.
மெரினா பீச்
சிட்டி சென்டரிலிருந்து 4 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது
இங்கு செல்வதற்கு கட்டணம் ஏதும் இல்லை
இங்கு நாள் முழுவதும் செல்லமுடியும்.
ஒரு நாளைக்கு 30000 பார்வையாளர்கள் வரை வருகிறார்கள். வார இறுதி, விடுமுறை நாட்களில் 1 லட்சம் பேர் வரை வருகிறார்கள்.
மனதுக்கு இதமாக, காலார நடை போட, காதலர்கள் பேசி மகிழ, குடும்பத்துடன் குதூகலிக்க, நண்பர்களுடன் அரட்டை அடிக்க பலர் இங்கு வருகை தருகிறார்கள்.
ப்ரீஸி பீச்
சென்னையில் அமைந்துள்ள வால்மீகி நகருக்கு மிக அருகில் அமைந்துள்ள சிறிய அளவிலான கடற்கரை இது.
சுற்றுலாப் பயணிகளை சமீப காலங்களில் வெகுவாக கவர்ந்திழுக்கும் இந்த இடம் மிகவும் அமைதியானது,
தனிமையில் உரையாடவும், ஜாலியாக பொழுதை கழிக்கவும் செல்லலாம்.
சிட்டி சென்டரிலிருந்து 9 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.
இது பெரிய அளவில் பிரபலமானது இல்லை இருந்தாலும் உள்ளூர் வாசிகள் பலர் பொழுது போக்க இந்த கடற்கரைகளில் அமர்ந்து தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்கின்றனர்.
மாலை வேளைகளில் ஓரளவுக்கு சுற்றுலாப் பயணிகளின் வரத்து காணப்படுகிறது.
நெட்டுக்குப்பம்
நெட்டுக்குப்பம் என்பது ஒரு கடற்கரையும் அதனுடன் சேர்ந்த கிராமமும் ஆகும். மற்ற கடற்கரைகளைப் போல இங்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருவதில்லை. விழாக்களின் போதும், விடுமுறை மாலைகளிலும் குறைந்த அளவு சுற்றுலாப் பயணிகள் இருப்பார்கள்.
எண்ணூர் கடற்கரை
எண்ணூர் பகுதியில் இருக்கும் கடற்கரையும் அதிகம் இல்லை என்றாலும் ஓரளவுக்கு சென்னை வாசிகளிடையே பழக்கமானது.
கொசஸ்தலை ஆற்றுப் பகுதி, எண்ணூர் துறைமுகம் ஆகியவற்றால் இந்த கடற்கரை அதிக கவனம் பெறுகிறது. இந்த ஆறு கடலில் கலக்கும் இடமே நெட்டுக்குப்பம் ஆகும்.
இன்னும் சில பீச்கள்
பாரதியார் நகர், பலகைதொட்டிக்குப்பம், திருவொற்றியூர்,காசிமேடு, பட்டினப்பாக்கம், காந்தி, கொட்டிவாக்கம், பாலவாக்கம்,நீலாங்கரை,ஈசியார் பீச், தங்க கடற்கரை என சென்னையைக் கடந்தும் அழகிய பீச் கள் இருக்கின்றன.
சென்னை அருகே இருக்கும் கடற்கரைகள்
சென்னை அருகே மிக அழகிய மற்றும் அதிகம் மக்கள் செல்லும் கடற்கரைகளும் இருக்கின்றன. அவை குறித்து காண்போம்.
கோவளம் கடற்கரை
தமிழ்நாட்டின் பிரபலமான மீன்பிடி கிராமமான கோவளம், கடற்கரையை நேசிப்பவர்களுக்கு அற்புதமான அனுபவத்தை அளிக்கக்கூடிய சுற்றுலாத் தலம். இது சென்னையிலிருந்து 40 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த ஸ்தலம் சென்னைக்கு அருகாமையில் இருப்பதால் வார இறுதியை குடும்பத்துடன் சந்தோஷமாக கழிப்பதற்காக ஏராளமான சென்னை வாசிகள் கோவளத்திற்கு வருகின்றனர்.
கோவளம் கடற்கரை பற்றிய மற்ற தகவல்களுக்கு :
பெசண்ட் நகர் கடற்கரை
மெரினா உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையாய் இருக்கலாம்; ஆனால், இளைஞர்களின் விருப்பமான கடற்கரை பெசன்ட் நகரில் இருக்கும் எலியட்ஸ் கடற்கரைதான். அப்போதைய சென்னை கவர்னர், எட்வர்ட் எலியட்ஸ் நினைவாக எலியட்ஸ் கடற்கரை என்று அழைக்கப்படுகிறது. சென்னையில் இருப்பவர்களுக்கே எலியட்ஸ் கடற்கரை என்றால் ஒரு நிமிடம் யோசிப்பார்கள்; பெசன்ட் நகர் கடற்கரை என்றால்தான் சட்டெனப் புரிந்துகொள்வார்கள்.
இந்த இடத்தைப்பற்றிய மேலும் தகவல்களுக்கு:
முட்டுக்காடு கடற்கரை
சென்னையிலிருந்து 1 மணி நேரத் தொலைவில் அமைந்துள்ளது இந்த கடற்கரை. இது மிகவும் அழகியதோடு மட்டுமல்லாமல், காதலர்கள் விரும்பும் கடற்கரையாக உள்ளது. இது மிகவும் அமைதியான, அழகான இடம் என்பது இங்கு சென்று திரும்பியவர்கள் அனைவரும் சொல்லும் தகவல் ஆகும்.
இந்த கடற்கரையில் அலைச் சறுக்கு, கனோ, பெடல் படகு, ரோ படகு போன்ற விளையாட்டுகள் இருக்கின்றன.
இந்த இடம் குறித்த மேலும் தகவல்களுக்கு
மகாபலிபுரம் கடற்கரை
இந்த கடற்கரைக்கு சென்னையிலிருந்து ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் செல்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். எப்படி மதுரையும், தஞ்சையும் தமிழர்களின் வரலாற்று பூமி என்று நம்பப்படுகிறதோ அதன்படியே, இதுவும் தமிழர்களின் கலை பூமி ஆகும்.
சென்னையிலிருந்து 60 கிமீ தூரத்தில் இந்த கடற்கரை அமைந்துள்ளது. இங்கு குடைவரைக் கோவில்கள், பஞ்ச பாண்டவர் தேர்கள், பெரிய உருண்டை பாறை என பல சுற்றுலாப் பயணிகளை வியப்பில் ஆழ்த்துகிறது. சாகச பிரியர்கள் ஒருமுறை வந்தால் இந்த இடத்தை விட்டு பின் நகரவே மாட்டார்கள்.
அரசு அருங்காட்சியகம், எழும்பூர்
கொல்கத்தாவில் உள்ள இந்தியன் மியூசத்திற்கு பிறகு இந்தியாவின் 2-வது மிகப்பழமையான அருங்காட்சியகமாக அறியப்படும் எழும்பூர் அரசு அருங்காட்சியகம் 1851-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அதுமட்டுமல்லமால் தெற்காசியாவின் மிகப்பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள பெரும்பாலான கட்டிடங்கள் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவையாகும்.
ரயில் அருங்காட்சியகம்
நம் இந்திய ரயில்வே 165 வருட பாரம்பரியம் கொண்டது. தென்னக ரயில்வேயின் தலைமையகமான சென்னை 2002ம் ஆண்டு துவங்கப்பட்டது. இது ஆவடியில் அமைந்துள்ளது.
இந்த ரயில்வே அருங்காட்சியகத்தில் 1800ம் ஆண்டுகளிலிருந்து இன்று வரையான பல ரயில்களின் மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
கட்டணம்
பள்ளி மாணவர்களுக்கு 25ரூபாய்
மற்றவர்களுக்கு 40ரூபாய்
எப்போது செல்லலாம்
திங்கள் தவிர்த்த நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த ரயில்வே அருங்காட்சியகம் செயல்படுகிறது.
பிர்லா கோளரங்கம்
கோர்ட்டூர்புரம் பெரியார் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப மைய வளாகத்தில் அமைந்துள்ளது பிர்லா கோளரங்கம்.
எப்போது செல்லலாம்
அரசு விடுமுறை நாட்களைத் தவிர்த்து மற்ற எல்லா நாட்களிலும் இங்கு செல்லமுடியும்.
என்னெல்லாம் இருக்கு
இந்த கோளரங்கத்தில் 500 கலைப் பொருள்கள் கொண்ட 8 அரங்குகள் இருக்கின்றன. பயோ சயின்ஸ் எனப்படும் உயிர் அறிவியல், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு, எரிசக்தி, வாழ்க்கை அறிவியல், புதுமைகளும் கண்டுபிடிப்புகளும், போக்குவரத்து, பன்னாட்டு பொம்மைகள், குழந்தைகளுக்கான அறிவியல் கலை பொருள்கள் என இவை வகைப்படுத்தப்பட்டுள்ளன.
சிறப்பு நிகழ்ச்சி
சனிக்கிழமைகளில் மட்டும் மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இரவில் வானத்தை கண்டு களிக்க அனுமதி வழங்கப்படுகிறது.
பாரம்பரியமான கட்டிடங்கள்
சென்னை ஆங்கிலேயர் காலத்திலேயே கட்டமைக்கப்பட்ட ஒரு அமைப்பு நகரம். இது மிகவும் பழமையான நகரம் என்பதாலும், இங்கு பல வரலாற்று கட்டிடங்களும் காணப்படுகின்றன. அவற்றைப் பற்றியும் காண்போம்.
இந்தியப் பெருநகரங்களில் எங்குமே இல்லாத அளவுக்கு சென்னையில் மொத்தம் 2,467 பாரம்பரிய கட்டிடங்கள் அமைந்துள்ளன. இவற்றில் பெரும்பாலான கட்டிடங்கள் 200 ஆண்டுகளுக்கும் முன்பு கட்டப்பட்டவையாகும். அதுமட்டுமல்லாமல் இந்தக் கட்டிடங்கள் இன்றளவும் நல்ல நிலையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அதுவும் சென்னையின் பழமையான மூர் மார்க்கெட் தீக்கு இரையான பின்னர் பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாப்பதில் தமிழக அரசு தனிக் கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்தக் கட்டிடங்களில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்டவை இன்று சென்னையின் அடையாளங்களாகவே பார்க்கப்படுகின்றன.
விக்டோரியா பப்ளிக் ஹால்
ராணி விக்டோரியாவின் 50-ஆம் ஆண்டு பொன்விழாவை கொண்டாடும் நோக்கத்துடன் ஆங்கிலேயர்களால் 1890-ஆம் ஆண்டு விக்டோரியா பப்ளிக் ஹால் திறந்து வைக்கப்பட்டது. சென்னையில் முதன் முதலாக சினிமா திரையிடப்பட்ட இடமாக விக்டோரியா பப்ளிக் ஹால் அறியப்படுகிறது. தற்போது இந்த கட்டிடத்தில் தென்னிந்திய தடகள சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் மூர் மார்க்கெட் அருகே ரிப்பன் பில்டிங் மற்றும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ஆகியவற்றுக்கு மத்தியில் அமைந்துள்ளது.
செயின்ட் ஜார்ஜ் கோட்டை
இந்தியாவில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட முதல் கோட்டையாக செயின்ட் ஜார்ஜ் கோட்டை அறியப்படுகிறது. 1644-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இது சென்னையின் மிகவும் பழமையான கட்டிடமாகவும் புகழ்பெற்றுள்ளது.
எழும்பூர் ரயில் நிலையம்
இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் எழும்பூர் ரயில் நிலையம் 1908-ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 35 வெளியூர் ரயில்களும், 118 புறநகர் ரயில்களும் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.
ரிப்பன் பில்டிங்
ஆங்கிலேய ஆட்சியில் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ரிப்பன் பிரபுவின் நினைவாக இந்தக் கட்டிடத்துக்கு ரிப்பன் பில்டிங் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 1913-ஆம் ஆண்டு இந்தக் கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது. தற்போது சென்னை மாநகராட்சி கட்டிடமாக இது செயல்பட்டு வருகிறது. இது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அருகே, பார்க் புறநகர் ரயில் நிலையத்துக்கு எதிரில் அமைந்துள்ளது.
L.vivian.richard
ஹிக்கின்பாதம்ஸ்
இந்தியாவின் மிகப்பழமையான புத்தக நிலையமாக ஹிக்கின்பாதம்ஸ் அறியப்படுகிறது. 1844-ஆம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்ட இந்த புத்தக நிலையத்தின் கிளைகள் தற்போது ஆந்திரப்பிரதேசம்,கர்நாடகா மற்றும் கேரளாவில் 22 இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இது சென்னை மவுண்ட் ரோடில் (அண்ணா சாலை) அமைந்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம்
உலகின் 2-வது மிகப்பெரிய நீதிமன்ற வளாகமாக சென்னை உயர் நீதிமன்றம் அறியப்படுகிறது. இந்த நீதிமன்றம் 1862-ஆம் ஆண்டு நிறுவப்பட்டதாகும்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்
சென்னையின் முக்கிய ரயில் நிலையமான சென்ட்ரல் ரயில் நிலையம் 140 ஆண்டுகளுக்கு முன்பு 1873-ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.