கோயம்புத்தூர் தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரம். தொழில் வளர்ச்சியிலும், சுற்றுலாவிலும் அதிக இடங்களை அருகாமையில் கொண்டு காணப்படும் இந்த நகரம் காதலர்கள் மற்றும் புதுமணத் தம்பதிகள், காதல் இணைகளுக்கு சிறந்த பொழுது போக்கு தளமாக, சுற்றுலா பிரதேசமாக விளங்குகிறது. அமைதியாக அன்பை பறிமாறிக்கொள்ளும் கோவையின் சில இடங்கள் பற்றி இந்த பதிவில் காண்போம் வாருங்கள்.
சினிமா
நம்ம ஊரில் ஒரு சிறப்பு என்ன என்றால், எந்த விழாக்கள் ஆனாலும், விடுமுறையானாலும் சினிமா இல்லாத ஒரு சுற்றுலாவை பார்க்கவே முடியாது. கோயம்புத்தூரில், புரூக் பீல்ட்ஸ், பீளமேடு, மகாராஜா மல்டிபிளக்ஸ் உள்ளிட்ட காதலர்கள் அதிகம் செல்லும் சினிமா அரங்கங்கள் இருக்கின்றன.
பைக் ரைடு
இவற்றில் காதலர்கள் அதிகம் செல்வதற்கு காரணம் லாங்க் டிரைவ். இவற்றில் மகாராஜா மல்டிபிளக்ஸ் போன்ற திரையரங்குகள் நகரத்திலிருந்து சற்று தொலைவில் அமைந்துள்ளன. இதனால் பைக் ரைடு செல்வதற்கான ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. என்ஜாய் பண்ணுங்க...
உணவகங்கள்
சற்று வசதி படைத்தோருக்கான உயர் தர உணவங்களும், நம்மைப் போன்ற நடுத்தர வரக்கத்தினருக்கு சிறந்த அழகிய உணவகங்களும் கோவையின் அநேக இடங்களில் காணப்படுகின்றன. இதனால் நீங்கள் சினிமா அல்லது உணவகம் அல்லது இரண்டுக்கும் திட்டமிட்டு உங்கள் துணையை அழைத்துச் சென்று அசத்தலாம்.
ரேஸ் கோர்ஸ்
ரேஸ் கோர்ஸ் சாலையில் மாலைப் பொழுதுகளில் ஆங்காங்கே அநேகம் பேர் நடைபயிற்சி செய்து கொண்டிருப்பர். நீங்களும் உங்கள் துணையுடன் சில ஜாலியான விளையாட்டுகள் , கேலி கிண்டல் என பொழுதை கழிக்கலாம். அதிலும் இந்த இடங்கள் நிறைய பேர் வரும் இடங்கள் என்றாலும், மிக அழகாக காட்சியளிக்கும். நீண்ட தூரம் நடந்து செல்வதற்கு ஏற்றதாகவும் இருக்கும்.
மருதமலை கோவில்
பெரும்பாலும் கோவை காதலர்கள், புதுமண இணைகள் இந்த கோவிலுக்கு செல்கிறார்கள். எங்கள் காதல் தெய்வீக காதல் என்றும் சொல்கிறார்கள் சிலர். கோவிலுக்குள் அமைதியாக தங்கள் வாழ்க்கையின் வருங்காலத்தைப் பற்றி ஆண்டவரிடம் வேண்டிக்கொள்ளவே செல்கிறார்கள்.
ஆழியாறு
கோயம்புத்தூரிலிருந்து 2 மணி நேர பயணத்தில் ஆழியாறை அடைய முடியும். இது மிகவும் அழகான மற்றும் காதலர்கள் அடிக்கடி செல்லும் இடமாகும். காதலிக்கும் இளைஞர்கள் தங்கள் காதலியை இங்கு அழைத்துச் செல்ல ஆசைப் படுவதற்கு காரணம் இல்லாமலும் இல்லை.
அமைதியான சாலைகள் கொண்டது இந்த தடம்
வழியெங்கும் அழகான காட்சிகளை கண்டுகொண்டே வரமுடியும்
பொள்ளாச்சியை நெருங்கியதும் அனல் காற்று என்ற பேச்சே இல்லை. நகரம் மட்டுமே கொஞ்சம் வெயிலைக் கொண்டுள்ளது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியும் காதலர்களின் பட்டியலில் இருக்கும் ஒரு பகுதியாகும். இங்கு வரும் காதலர்களுக்கு சொந்த காரர்கள் கண்ணில் பட்டுவிடும் பாதிப்பு இல்லை. முக்கியமாக கோவை வாசிகளுக்கு. அதுவே முதல் காரணம். அதுமட்டுமல்லாமல் பச்சை பசேலென்று அழகிய இடங்களை காண நிச்சயம் தங்கள் காதலை வெளிப்படுத்த இதுவே சிறப்பான இடமாகும்.
கோவையைப் பற்றிய மற்ற சிறப்புகள்
காதலர்களுக்கு என்றில்லை, சிறியவர் முதல் பெரியவர் என எந்த வயதினருக்கும் கோவை சிறந்த ஒரு இடமாகும். ஏனென்றால் அத்தனை சிறப்புகளை கொண்ட நகரம் என்ற ஒன்று தமிழகத்திலேயே இது மட்டும்தான்.
கோவைத் தமிழுக்கு தனி மரியாதை உண்டு. அவர்கள் வயதில் சிறியவர்களைக் கூட "ங்க" விகுதியுடன் மரியாதையாகவே அழைக்கிறார்கள். வாங்க தம்பி, சொல்லுங்க தம்பி என்று...
150 கிமீ தொலைவுக்குள் ஊட்டி, வால்பாறை, மூணாறு, குன்னூர், கோத்தகிரி என நிறைய மலைப்பிரதேசங்கள் உள்ளன.
அதிக தொழிற்சாலைகள் கொண்ட நகரம் தென்னிந்தியாவில் முதலாவதும் கூட.
நடப்பதற்கும், ஜாக்கிங்குக்கும், குழந்தைகள் விளையாடுவதற்கும், ரிலாக்ஸ் ஆவதற்கும் அழகான இடம் ரேஸ்கோர்ஸ்.
சிறுவானி நதி, மால்கள், விலங்குகள் சரணாலயம், மருதமலை கோவில், ஈசா யோகா நிலையம் என மிகவும் சிறப்பான கோவைக்கு உங்கள் மனம் விரும்பியவருடன் பயணித்து இரட்டிப்பு மகிழ்ச்சியை துணைக்கழைத்து கொள்ளுங்களேன்..