கடல் மட்டத்திலிருந்து 1737 மீ உயரத்தில் உள்ள இந்த மணிகரன் நகரம் ஹிமாச்சல் பிரதேஷ மாநிலத்தில் குலு நகரத்திலிருந்து 45 கி.மீ தூரத்தில் உள்ளது. இது சீக்கியர் மற்றும் ஹிந்து இனத்தாரின் முக்கியமான புனித யாத்ரீக ஸ்தலமாக பிரசித்திபெற்று விளங்குகிறது. ஆபரணம் எனும் பொருளை தரும் வகையில் இந்த மணிகரன் எனும் பெயர் வழங்கப்பட்டிருக்கிறது.
ஆபரணத்தை தொலைத்த பார்வதி கதை
புராணகக்கதையின்படி, சிவனின் மனைவியான பார்வதி இப்பகுதியிலிருந்த குளத்தில் தனது ஆபரணத்தை தொலைத்துவிட்டு அதனை தேடித்தரும்படி தன் கணவரான சிவனிடம் அவர் வேண்டிக்கொண்டார். அதன்படியே சிவன் தனது பக்தர்களிடம் அந்த ஆபரணத்தை தேடுமாறு கூறினார்.
மகாபிரளயம்
ஆனால் அவர்களால் ஆபரணத்தை கண்டுபிடிக்க முடியாததால் சிவன் சீற்றமடைந்து தனது மூன்றாவது கண்ணை திறந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது ஏற்பட்ட எரிமலை போன்ற வெடிப்பில் பல ஆபரணக்கற்கள் பூமியிலிருந்து வெளிப்பட்டதாகவும் அந்த புராணிகக்கதை முடிகிறது.
குரு நானக் குருத்வாரா
மணிகரன் நகரில் ஸ்ரீ குரு நானக் தேவ்ஜி குருத்வாரா ஒரு பிரசித்தமான சுற்றுலா மற்றும் ஆன்மீக அம்சமாக திகழ்கிறது. இந்த ஸ்தலத்திற்கு சீக்கிய மதத்தை ஸ்தாபித்த குரு நானக் தேவ் தனது ஐந்து சீடர்களுடன் விஜயம் செய்ததாக மக்கள் நம்புகின்றனர். குருத்வாரா வளாகத்தில் உள்ள ஒரு வெந்நீர் ஊற்று பயணிகளை பெரிதும் கவர்வது குறிப்பிடத்தக்கது.
சாய்ந்த நிலையில் கோவில்
மணிகரன் நகரில் உள்ள சிவன் கோயில் ஒன்றும் பக்தர்கள் மத்தியில் புகழ் பெற்று விளங்குகிறது. இப்பகுதியில்1905ம் ஆண்டில் 8.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட ஒரு பூகம்பத்திற்கு பிறகு இக்கோயில் சாய்ந்த நிலையில் காணப்படுவது மற்றொரு வித்தியாசமான அம்சமாக சொல்லப்படுகிறது.
முக்கியமான சுற்றுலா அம்சங்கள்
மணிகரன் ஸ்தலத்தில் ராமச்சந்திர பஹவான் கோயில் மற்றும் குலந்த் பீடம் போன்ற பல முக்கியமான ஹிந்து ஆன்மீக அம்சங்கள் நிறைந்திருப்பதால் யாத்ரீகர்களிடையே மிகப்பிரசித்தமாக அறியப்படுகிறது. மேலும், ஹரிந்தர் மலை மற்றும் பார்வதி ஆறு, ஷோஜா, மலணா மற்றும் கிர்கங்கா போன்ற முக்கியமான சுற்றுலா அம்சங்களும் இங்கு அமைந்துள்ளன.
டிரெக்கிங்
இப்பகுதிகளில் பயணிகள் டிரெக்கிங் எனப்படும் மலையேற்றத்தில் ஈடுபடலாம். மணிகரன் சுற்றுலாத்தலத்திற்கு விஜயம் செய்ய விரும்பும் பயணிகள் விமான மார்க்கம், ரயில் மார்க்கம் மற்றும் சாலை மார்க்கம் போன்ற போக்குவரத்து வசதிகள் மூலம் எளிதில் சென்றடையலாம். ஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரையான கோடைப்பருவத்தில் மணிகரண் நகரத்திற்கு பயணம் மேற்கொள்வது உகந்தது.
காணவேண்டிய இடங்கள்
மருத்துவகுணம் நிறைந்த கிர்கங்கா ஊற்றுகள்
மணிகரன் நகரில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக இந்த கிர்கங்கா புகழ் பெற்றுள்ளது. இங்குள்ள வெந்நீர் ஊற்றுகளில் வெளிப்படும் நீருக்கு மருத்துவ குணங்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த ஊற்றுகளில் வரும் நீர் வெண்ணிறத்தில் காணப்படுவதால் இந்த இடத்துக்கு கிர்கங்கா எனும் பெயர் வந்துள்ளது. கந்தகம் கலந்திருப்பதால் வெண்ணிற நுரையுடன் நீர் இந்த வெந்நீர் ஊற்றுகளில் வெளிப்படுகிறது.
பகவான் சிவபெருமாள் வாழ்ந்து வரும் குலந்த் பீட்
ஹிமாசல பிரதேச மாநிலத்தில் உள்ள விஷ்ணு குண்ட் எனும் இடத்தில் அமைந்துள்ள குலந்த் பீட் நாட்டிலுள்ள உயர்ந்த ஆன்மீக பீடங்களில் ஒன்றாக கீர்த்தி பெற்றுள்ளது. நாட்டுப்புற கதைகளின்படி, அழிக்கும் கடவுளான சிவன் இந்த ஸ்தலத்தில் வசித்ததாக நம்பப்படுகிறது. இதன் காரணமாக இந்த புனித ஸ்தலம் ஏராளமான யாத்ரீகர்களை ஈர்க்கிறது. இந்த பீடத்தில் புனித தீர்த்தக்குளம் ஒன்றும் அமைந்துள்ளது. இதில் நீராடினால் மோட்சம் கிட்டும் என்பதாக பக்தர்களிடையே ஐதீக நம்பிக்கை நிலவுகிறது.
ஆயிரம் தெய்வங்கள் வருகை தரும் புனித தலம்
ஹிமாசல பிரதேசத்திலுள்ள மணிகரன் சுற்றுலாத்தலத்தில் இந்த சிவன் கோயில் அமைந்துள்ளது. இங்கு சிவபெருமான மற்றும் படைப்புக்கடவுளான பிரம்மா, காக்கும் கடவுளான விஷ்ணு ஆகியோர் சேர்ந்தே திரிமூர்த்திகளாக காட்சியளிக்கின்றனர். குள்ளு பள்ளத்தாக்கிலுள்ள ஆயிரம் தெய்வங்கள் இக்கோயிலுக்கு ஒவ்வொரு வருடமும் விஜயம் செய்வதாக உள்ளூர் நம்பிக்கை நிலவுகிறது.
டிரெக்கிங்கிற்கு சிறந்த புல்கா
மணிகரன் நகரிலிருந்து 18 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த புல்கா எனும் மலைக்காட்சி ஸ்தலம் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் மிகவும் பிரசித்தமாக அறியப்படுகிறது. இயற்கை சொர்க்கலோகம் என்று பெரும்பாலான இயற்கை ரசிகர்களால் கருதப்படும் இந்த ஸ்தலம் நாலாபுறமும் ரம்மியமான பைன் மரக்காடுகள் மற்றும் எண்ணற்ற மலையேற்றப்பாதைகள் போன்றவற்றை கொண்டுள்ளது.
ஹரிந்தர் மலை சிகரம்
ஹிமாசல பிரதேச மாநிலத்தில் மணிகரன் நகரில் உள்ள ஹரிந்தர் மலை மற்றும் பார்வதி ஆறு ஆகிய இரண்டும் ஏராளமான சுற்றுலாப்பயணிகளை வருடமுழுதும் ஈர்த்து வருகின்றன. பனி படர்ந்த ஹரிந்தர் மலை மற்றும் அதனைச்சுற்றிலும் காணப்படும் பசுமையான பள்ளத்தாக்குகள் போன்றவை மணிகரண் பகுதிக்கு மேலும் அழகு சேர்க்கின்றன.