சோலாப்பூர், புனே - ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. நான்கு முதல் 6 மணி நேரத்தில் எளிதில் புனே மற்றும் ஹைதராபாத் ஆகிய இரு நகரங்களையும் சோலாப்பூரிலிருந்து அடையமுடியும். இது மகராஷ்டிரம், கர்நாடகம் மற்றும் தெலங்கானா ஆகிய மூன்று மாநிலங்களிலிருந்து எளிதில் அணுகும் வகையில் எல்லையில் அமைந்துள்ளதால் மூன்று விதமான பழக்கங்கள் இருக்கின்றன. டிஸ்கோ பாஜி எனும் அற்புத உணவை சுவைக்கவும், சோலாப்பூரி சட்டா எனும் அழகிய கலை வண்ணங்களுடன் கூடிய போர்வைகளை வாங்கவும் ஒரு பயணம் போயிட்டு வந்துடலாமா? என்ன நீங்க ஆயத்தமாயிட்டீங்க தானே!
அறிமுகம்
மஹாராஷ்டிரா மாநிலத்தின் பிரதான நகரங்களில் ஒன்று சோலாப்பூர். இதன் மாவட்டம் 14,850 சதுர கிலோ மீட்டரில் அமைந்துள்ளது. சோலாப்பூர் மாவட்டத்துக்கு வடக்கில் ஓஸ்மானாபாத், அஹ்மத்நகர் மாவட்டங்களும் மேற்கில் சதாரா புனே மாவட்டங்களும் தெற்கில் பீஜாபுர் சாங்க்லி மாவட்டங்களும் கிழக்கில் குல்பர்கா மாவட்டமும் அமைந்துள்ளது.
ஸீனா நதிக்கரையில் அமைந்துள்ள சோலாப்பூர் ஜைனர்களுக்கான பிரசித்தி பெற்ற ஆன்மீக ஸ்தலமாக விளங்குகிறது.
இந்த நகரத்துக்கு சோலாப்பூர் என்ற பெயர் வந்ததற்கான காரணமாக வரலாற்றாசிரியர்கள் பலவிதமான கருத்துகளைக் கொண்டிருக்கின்றனர். சோலா என்றால் ஹிந்தியில் பதினாறு என்பது பொருள், எனவே சோலா+ஊர் என்ற அடிப்படையில் இந்த சோலாப்பூர் என்ற பெயர் வந்திருக்கலாம் என்பது ஒரு கருத்து. மற்றொன்று இந்நகரம் முஸ்லிம் ஆட்சியின்போது சந்தல்பூர் என்று அழைக்கப்பட்டு அது பின்னாளில் சோலாப்பூர் என்று திரிந்திருக்கலாம் என்பது. பிரிட்டிஷ் காலத்தில் இது ஷோலாப்பூர் என்று அழைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.
எப்படி அடைவது?
போக்குவரத்துக்கு மிகவும் வசதியாக சோலாப்பூர் நகரம் ஹைதராபாதிலிருந்து மும்பை செல்லும் நெடுஞ்சாலை மற்றும் ரயில் பாதையின் வழியில் அமைந்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் மற்றும் இந்தியாவின் பல முக்கிய நகரங்களுக்கு இந்த ரயில் நிலையத்திலிருந்து பல ரயில்கள் உள்ளன. சோலாப்பூர் விமான நிலையம் ஆகாய மார்க்கமாக பயணிக்க விரும்புவோர்க்கு உகந்ததாக இருக்கிறது. சாலை வழியாக சோலாப்பூரை அடைவதற்கு பல அரசுப் போக்குவரத்து பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் பலவிதமான கட்டணங்களில் அதிக அளவில் கிடைக்கின்றன.
எப்போது செல்லலாம்
மிதமான இனிமையான சீதோஷ்ண நிலையை சோலாப்பூர் நகரம் பெற்றுள்ளது. அதிகபட்ச உஷ்ணத்தை இது கோடைக்காலத்தில் அனுபவிக்கிறது. அப்போது வெப்பநிலை 400C யில் இருந்து 420C ஆக இருக்கும். மே மாதத்தின் போது சோலாப்பூர் பகுதியை சூரியன் சிறிதும் இரக்கமின்றி சுட்டுப்பொசுக்குவதால் அப்போது சுற்றுலாப்பயணிகள் பயணம் மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. மழைக்காலத்தில் வெப்பம் தணிந்து நகரமும் கழுவி விட்டாற்போன்று காட்சியளிப்பதால் அக்காலத்தில் சோலாப்பூருக்கு வரலாம். குளிர்காலமான ஜனவரி மாதத்தில் இங்கு சீதோஷ்ண நிலை 90C ஆக காணப்படுகிறது. அம்மாதத்தில் இங்குள்ள சுற்றுலா ஸ்தலங்களை சுற்றுப்பார்க்கவும் புனித யாத்ரீக ஸ்தலங்களை தரிசிக்கவும் மிகவும் வசதியாக இருக்கும்.
ஆன்மீகத் தளங்கள்
அக்கல்கோட்டை, பந்தபூர், துல்ஜாபூர் உள்ளிட்ட பல நூறு கோவில்கள் இந்த நகரத்தில் அமைந்துள்ளன. மேலும் பல இடங்களைக் குறித்தும் காண்போம்.
ரேவணசித்தேஸ்வரர் கோயில்
ரேவணசித்தேஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படும் இந்த பழமையும் தொன்மையும் உடைய ஆலயம் சோலாப்பூர் மாவட்டத்தில் முக்கியமான ஆன்மீக யாத்ரீக ஸ்தலமாகும்
இந்துக்களின் திருவிழாவான மகர சங்கராந்தி இங்கு மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த சுப நாளில் ஒரு பெரிய கால்நடை சந்தை ஒன்றும் இங்கு நடத்தப்படுகிறது.
ராமலிங்கேஸ்வர் மந்திர்
சோலாப்பூர் மாவட்டத்திலிருந்து 79 கி.மீ தொலைவில் இந்த ராமலிங்கேஸ்வர் மந்திர் (கோயில்) அமைந்துள்ளது. இந்த கோயிலின் அமைதிக்கும் ஆன்மீக சூழலுக்கும் பொருத்தமான இயற்கை அழகு கோயிலைச்சுற்றிலும் காணப்படுகிறது. குடும்பத்துடன் அமைதியாக பொழுதைக்கழிக்கவும் சிற்றுலா செல்லவும் இது மிகவும் பொருத்தமான இடமாகும்.
உணவுகளும் சுவையும்
இந்த ஊரில் ஷெங்கா சட்னி மிகவும் பிரபலமாகும். கடலையில் செய்யப்படும் இந்த சட்னி, ஷெங்கா போலி, கதக் பக்பி உள்ளிட்ட உணவுகள் இங்கு மிகவும் சுவையானதாக பார்க்கப்படுகிறது. ஷெங்கா போலி என்பது நம்ம ஊரில் கிடைக்கும் அதே போலி போலத்தான். கடலையா வறுத்து செய்யப்பட்ட இந்த சக்கரை போலி மிகவும் சுவையானதாக இருக்கும். இங்கு கிடைக்கும் பாவ் பாஜி அத்துடன் மிக முக்கியமாக குறிப்பிட்டு சொல்லவேண்டிய டிஸ்கோ பாஜி எனும் உணவு மிக அருமையாக இருக்கும். அத்துடன் இங்கு கோடைக்காலங்களிலும் மணமணக்கும் சுவையுடன் கூடிய தேநீர் பிரபலமாகும்.
வரலாற்று மகத்துவம்
வரலாற்று காலத்தில் சோலாப்பூர் சாளுக்கிய வம்சம், யாதவ வம்சம், ஆந்திரபிரத்யா வம்சம், ராஷ்டிரகூட வம்சம் மற்று பாமனி வம்சம் போன்ற பல்வேறு ராஜவம்சங்களின் ஆளுகையில் இருந்திருக்கிறது. முதலில் பாமனி அரசாட்சியின் கீழ் இருந்த சோலாப்பூர் மாவட்டம் பிறகு பிஜாபூர் மன்னர்களால் கைப்பற்றப் பட்டது. அது பின்னர் மராத்திய மன்னர்களின் கைக்கு மாறியது. பேஷ்வாக்களின் வீழ்ச்சிக்கு பிறகு 1818 ல் ஆங்கிலேயர்கள் அஹ்மத் நகரின் ஒரு துணை மண்டலமாக மாற்றினர். 1960 ஆண்டில் சோலாப்பூர் தனி மாவட்டம் என்ற அந்தஸ்தைப் பெற்றது. ஸீனா நதிக்கரையில் அமைந்துள்ள சோலாப்பூர் ஜைனர்களுக்கான பிரசித்தி பெற்ற ஆன்மீக ஸ்தலமாக விளங்குகிறது. இந்த நகரத்துக்கு சோலாப்பூர் என்ற பெயர் வந்ததற்கான காரணமாக வரலாற்றாசிரியர்கள் பலவிதமான கருத்துகளைக் கொண்டிருக்கின்றனர்.