வெள்ளிக்கிழமை வந்தாலே நம்மில் பலருக்கு மனதுக்குள் பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பித்துவிடும் அடுத்த இரண்டு நாட்கள் வார விடுமுறை என்பதனால். 12 மணி வரை தூக்கம், குடும்பத்துடன் ஷாப்பிங் மால்களுக்கு செல்வது அல்லது திரையரங்குகளுக்கு சென்று படம் பார்ப்பது போன்ற விஷயங்களைத் தான் நாம் வழக்கமாக வார விடுமுறையை கொண்டாட திட்டமிடுகிறோம். அதைத்தாண்டி பெங்களுருவில் அட்டகாசமாக வார விடுமுறையை கொண்டாட நல்ல இடங்கள் இருக்கின்றன. வாருங்கள் அந்த இடங்களைப்பற்றி அறிந்துகொள்வோம்.
ஸ்கந்தகிரி ட்ரெக்கிங்:
புகைப்படம்: Vandan Desai
பெங்களுருவில் இருந்து 60கி.மீ தொலைவில் இருக்கும் ஸ்கந்தகிரி மலை வார விடுமுறையை நண்பர்களுடன் கொண்டாட அருமையான ஒரு இடம். சாகசம் நிறைந்த மலையேற்றம், 18ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிதலமடைந்த கோட்டை, மலையின் மேல் இருந்து காணக்கிடைக்கும் அற்புதமான இயற்கை காட்சிகள் என இந்த ஸ்கந்தகிரி மலை பல அனுபவங்களை நமக்கு தரும். இங்கு மலையேற்றம் செய்ய வரும் பெரும்பாலான சுற்றுலாப்பயணிகள் அதிகாலை மலையின் மேல் நின்று சூரிய உதயத்தை காணும் வகையில் திட்டமிட்டு வருகின்றனர். உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியம் தருவதாய் இந்தப்பயணம் உங்களுக்கு அமையும்.
பன்னேர்கட்டா தேசிய பூங்கா:
புகைப்படம்: Kalyan Kanuri
பெங்களூரில் இருந்து 25கி.மீ தொலைவில் இருக்கும் இந்த பன்னேர்கட்டா தேசிய பூங்கா குடும்பத்துடன் வார விடுமுறையை கொண்டாட சிறந்த இடமாகும். நூற்றுக்கும் மேற்ப்பட்ட வகையான விலங்குகள் மற்றும் பறவைகளை இந்த பூங்காவினுள் நாம் கண்டு ரசிக்கலாம். அரியவகை விலங்கான வெள்ளைப்புலி இதன் சிறப்பம்சம் ஆகும்.
புகைப்படம்: Asif Musthafa
மேலும் இங்கு நாம் வனஉலா(safari) செல்லலாம் அல்லது இங்குள்ள வனவிலங்கு காட்சி சாலையில் விலங்குகளை கண்டு மகிழலாம். இந்தியாவில் வேறெங்கும் இல்லாத பட்டாம்பூச்சி பூன்கா பனேர்கட்டா தேசிய பூங்காவின் தனித்துவமான அடையாளங்களில் ஒன்று. 20க்கும் மேலான பட்டாம்பூச்சி வகைகள் இந்த பட்டாம்பூச்சி பூங்காவில் இருக்கின்றன. நம் வீட்டு குழந்தைகளுக்கு இந்தப்பயணம் நிச்சயம் குதூகலத்தை ஏற்ப்படுத்தும்.
நந்தி மலை:
புகைப்படம்: R.Srijith
பெங்களுருவில் இருந்து 60 கி.மீ தொலைவில் இருக்கிறது இந்த நந்தி மலை. இங்கு மைசூரின் மகாராஜாவாக இருந்த திப்பு சுல்தானின் கோட்டை அமைந்திருக்கிறது. திப்பு சுல்தான் காலத்தில் தண்டனை கைதிகளை மலையில் இருந்து தள்ளிவிட்டு மரண தண்டனை அளித்த இடம், மூன்று நரசிம்மர் கோயில்கள், குழந்தைகள் விளையாட்டு பூங்கா போன்றவை முக்கிய இந்த இடத்தின் முக்கிய ஈர்ப்புகள் ஆகும். இவைகளை தவிர்த்து சமீப காலங்களில் பிரபலமாகி வரும் மலை சைக்கிளிங் செய்ய அதிகமானோர் வருகின்றனர். அதே போன்று பாராக்ளிடிங் விளையாட்டும் இங்கே ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. சாகச விரும்பிகளுக்கும் சரி, இயற்கையின் அழகை ரசிக்க விரும்புகிறவர்களுக்கும் சரி நந்த மலை உங்கள் வார விடுமுறையை மறக்க முடியாததாக்கிடும்.
பீமேஸ்வரி சரணாலயம்:
புகைப்படம்: Nitesh Bhatia
இயற்க்கை ஆர்வலர்களின் சொர்க்கம் இந்த பீமேஸ்வரி சரணாலயம். பெங்களுருவில் இருந்து 100 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இங்கு பசுமையான புல்வெளிகள், ஓடைகள், சிறிய அருவி என அற்புதமான இயற்க்கை சூழலை கொண்டுள்ளது. பெங்களுருவில் சாகசப்படகு சவாரி செய்ய சிறந்த இடங்களில் ஒன்றாக இது விளங்குகிறது. இங்கே தனியார் தாங்கும் விடுதிகளில் குடிசை ஒன்றை வாடகைக்கு எடுத்து இரவு கயிற்றுக் கட்டிலில் படுத்தபடி மயக்கும் இரவை நிலவொளியில் ரசிக்கலாம். வித்தியாசமான ஒரு வாரவிடுமுறையை கொண்டாட தாராளமாக பீமேஸ்வரி சரணாலயத்திற்கு வரலாம்.
வைன் சுற்றுலா:
புகைப்படம்: StateofIsrael
நந்தி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது க்ரோவர் ஜாம்பா வைன் தயாரிப்பகம். 400 ஏக்கரில் இருக்கும் திராட்சை தோட்டம், வைன் தயாரிக்கும் ஆலை என புதுமையான ஒரு அனுபவம் உங்களுக்கு இங்கே நிச்சயம். காலை 10:30 மணிக்கு இந்த வைன் சுற்றுலா ஆரம்பிக்கிறது. திராட்சைகள் விளைவிக்கப்படும் முறைகள், வைன் தயாராகும் முறைகள், அவை சேமிக்கப்படும் முறைகள் ஆகியவற்றை நாம் தெரிந்து கொள்ளலாம். அப்போது 5 வகையான வைன்களை அவை தயாராகும் போதே சுவைத்து பார்க்கும் வாய்ப்பும் நமக்கு கிடைக்கும். புதுமையான அதே சமயம் சுவையான பயணமாக இது உங்களுக்கு அமையும்.