ஹரிஹரேஷ்வர் எனும் சிறிய புராதன நகரம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் ராய்காட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது பிரம்மாத்ரி, புஷ்பாத்ரி, ஹர்ஷினாச்சல் மற்றும் ஹரிஹர் எனும் நான்கு மலைகள் சூழ அமைந்துள்ளது. கொங்கண் பிரதேசத்தில் உள்ள ஹரிஹரேஷ்வர் நகரமானது ஒருபுறம் பசுமையான வனப்பகுதியும் மறுபுறம் அழகான கடற்கரையும் அருகருகே இருக்க அழகுடன் காட்சியளிக்கின்றது.
ஹரிஹரேஷ்வர் நகரம் இங்குள்ள சிவன் கோயிலான ஹரிஹரேஷ்வர் கோயிலுக்காக புகழ்பெற்று விளங்குகிறது. இதனாலேயே இந்த ஸ்தலம் கடவுளின் வீடு எனப்பொருள்படும் 'தேவ்கர்' என்று அறியப்படுகிறது. இந்த ஸ்தலத்தில் புனித ஆறாக கருதப்படும் சாவித்திரி ஆறு அரபிக்கடலுடன் கலக்கிறது.
ஹரிஹரேஷ்வர் நகரம் விமானம், ரயில், சாலை போன்ற எல்லா மார்க்கங்கள் மூலமாகவும் எளிதில் அடையும்படி அமைந்துள்ளது. வருடத்தின் எல்லா நாட்களிலும் விஜயம் செய்யும்படியான சூழலைக்கொண்டிருந்தாலும், மழைக்காலத்திற்கு பிந்தைய காலத்திலும், குளிர் காலத்திலும் இந்த சிறு நகரத்துக்கு விஜயம் செய்வது சிறந்தது.
ஹரிஹரேஷ்வர் ஸ்தலமானது பலவிதமான சுற்றுலாப்பயணிகள் மற்றும் ஆன்மீக யாத்ரீகர்களை தன் கோயில்கள் மற்றும் அழகுக்கடற்கரை மூலமாக ஈர்க்கிறது. ஆரவாரம் நிரம்பிய சொந்த ஊரை விட்டு விலகி ஒரு அமைதியான ஸ்தலத்துக்கு விஜயம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிற பயணிகள் யோசிக்காமல் இந்த ஹரிஹரேஷ்வர் ஸ்தலத்துக்கு விஜயம் செய்யலாம்.
இனிமையான சூழல், ஓவியம் போன்ற கடற்கரை, தொன்மையான கோயில்கள் இவை எல்லாம் ஒன்று சேர்ந்த ஒரு சுற்றுலாத்தலமே ஹரிஹரேஷ்வர் எனலாம்.
ஹரிஹரேஷ்வர் நகரத்திலிருந்து சில மீட்டர் தொலைவிலேயே இந்த பாகமண்டலா எனும் சிறிய கிராமம் அமைந்துள்ளது. இது ஒரு அழகான சிற்றுலாத்தலமாக இப்பகுதியில் பிரசித்தமாக அறியப்படுகிறது. பல்லாண்டுகள் இந்தியாவில் ஆட்சி செய்த மராத்தா வம்சத்தைச் சேர்ந்த பேஷ்வாக்கள் வசித்த இடமாக இந்த பாகமண்டலா ஸ்தலம் அறியப்படுகிறது.
பேஷ்வா ஸ்மாரக் அல்லது பேஷ்வா நினைவிடம் என்று அழைக்கப்படும் ஒரு நினைவுச்சின்னம் இங்கு பாகமண்டலாவில் அமைந்துள்ளது.இங்குள்ள பாங்கோட் கோட்டை ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாகும். இப்பகுதியில் அடர்ந்த பசுமையான வனப்பகுதியின் மத்தியில் ஒரு படகுத்துறைமுகமும் அமைந்துள்ளது.
ஜங்கிள் ஜெட்டி என்றழைக்கப்படும் இது பயணிகளால் பெரிதும் ரசிக்கப்படும் ஒரு அம்சமாகும். இந்த ஜெட்டியிலிருந்து பாகமண்டலா ஓடை வழியே ரத்னகிரி கோட்டைக்கு படகுப்போக்குவரத்து இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.