கர்நாடக மாநிலத்திலுள்ள மிகப்பழமையான மற்றும் தொன்மையான பாரம்பரியப் பின்னணி வாய்க்கப்பெற்ற நகரங்களுள் இந்த பட்கல் நகரம் ஒன்றாகும். இது இந்தியாவிலுள்ள பழைய துறைமுகங்களில் ஒன்றாகவும் அறியப்பட்டுள்ளது. உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ள இந்த நகரம் கார்வார் நகரத்திலிருந்து 130 கி.மீ தூரத்திலேயே அமைந்துள்ளது. வாருங்கள் பட்கல் நகரத்தில் கொண்டாடி மகிழ்வோம்.
பட்கல் எங்குள்ளது?
இந்தியாவின் பல நகரங்களிலிருந்து பட்கல் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதை காண்போம்.
பெங்களூர் - 485கிமீ
மங்களூர் - 142 கிமீ
ஹைதராபாத் - 741 கிமீ
சென்னை - 814 கிமீ
கொச்சி - 546 கிமீ
இப்படி தென்னிந்தியாவின் பல நகரங்களுடன் பட்கல் இணைக்கப்பட்டுள்ளது.
பட்கலுக்கு செல்லும் ரயில்கள்
பூர்னா விரைவு வண்டி
ஓகா இஆர்எஸ் விரைவு வண்டி
ஓகா விரைவு வண்டி
நேத்ராவதி விரைவு வண்டி (தினசரி ரயில்)
உள்பட இன்னும் பல ரயில்கள் இந்த நகரத்துக்கு இயக்கப்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலை எண் 17ல் அமைந்துள்ள இந்த நகரம் கொங்கண் ரயில் பாதை வழியாகவும் சென்றடையும்படி உள்ளது.
வரலாற்றுத்தகவல்கள்
பட்கல் நகரம் மிக சுவாசியமான வரலாற்றுப் பின்னணியை கொண்டுள்ளது. இது ஹொய்சள ராஜ வம்சத்தினருக்கு சொந்தமாக இருந்தபோதிலும் தொடர்ந்து பல முறை மற்ற அரசுகளால் ஆக்கிரமிக்கப்பட்டு வந்துள்ளது.
விஜய நகர சாம்ராஜ்ய மன்னர்கள், சாளுவ அரசர்கள் மற்றும் சோழ மன்னர்கள் இந்த பட்கல் பிரதேசத்தில் தடம் பதித்து சென்றுள்ளனர். இந்த நகரம் போர்த்துகீசிய ஆதிக்கத்துக்கும் உட்பட்டுள்ளது. இறுதியாக திப்பு சுல்தானால் இந்த பட்கல் நகரம் அவர் ஆங்கிலேயரால் வெல்லப்படும் வரை ஆளப்பட்டுள்ளது. இப்படி கலவையான பின்னணியை கொண்டுள்ளதால் பட்கல் நகரம் ஒரு தனித்தன்மையான அடையாளத்துடன் திகழ்கிறது.
சுற்றுலாத் தளங்கள்
கோயில்கள், மசூதிகள், ஜெயின் பசாதிகள் போன்றவை இந்த நகரத்தில் ஒருசேர அமைந்துள்ளன. இங்குள்ள பிரசித்தமான மசூதிகளாக ஜமியா மஸ்ஜித், கலிஃபா மஸ்ஜித் மற்றும் நூர் மஸ்ஜித் போன்றவற்றை குறிப்பிடலாம். மிக முக்கியமான கோயிலாக கேதப்பைய நாராயண கோயிலை குறிப்பிடலாம்.
மேலும் பயணிகள் இங்குள்ள பளிரென்ற வெண் மணலுடன் காட்சியளிக்கும் தூய்மை கடற்கரைகளையும் சூரியனின் அற்புத அழகையும் இங்கு கண்டு ரசிக்கலாம்.
ஆகஸ்ட் மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரை உள்ள காலம் முக்கிய சுற்றுலாப்பருவமாக கருதப்படுகிறது. இக்காலத்தில் இப்பிரதேசத்தின் சீதோஷ்ணநிலை மிக இனிமையாக காணப்படுகிறது.
பட்கல் நகரத்துக்கு ரயில் அல்லது சாலை மார்க்கமாக சுலபமாக பயணிக்கலாம். இது தவிர மங்களூர் விமான நிலையம் பட்கலுக்கு அருகில் உள்ளது.
பட்கல் கடற்கரை
பட்கல் நகருக்கு விஜயம் செய்யும் பயணிகள் இங்குள்ள பிரதான அம்சமான கடற்கரைப்பகுதிக்கு மறக்காமல் விஜயம் செய்வது அவசியமாகும். அரபிக்கடலை ஒட்டியுள்ள இந்த கடற்கரை மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் தென்னை மரங்களின் பின்னணியில் அழகாக காட்சியளிக்கின்றது.
16ம் நூற்றாண்டில் விஜயநகர ஆட்சியின் போது இது ஒரு முக்கியமான துறைமுகமாக விளங்கியுள்ளது. கடற்கரை அருகிலேயே உள்ள முருடேஷ்வரா கோட்டை மற்றும் இங்குள்ள விஜயநகர கோயில், ஜெயின் சந்திரநாத் கோயில் போன்றவையும் பயணிகள் விஜயம் செய்யவேண்டிய சுற்றுலா அம்சங்களாகும்.
மேலும் அருகாமையிலுள்ள கண்டுக கிரி எனும் மலைக்குன்றில் பல புராதனமான கோயில்களும் அமைந்துள்ளன. இந்த கடற்கரையில் அமைந்துள்ள ஒரு கலங்கரை விளக்கத்திலிருந்து சுற்றியுள்ள பகுதிகளின் அழகை பார்த்து ரசிக்கலாம். ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை உள்ள இடைப்பட்ட காலம் இந்த கடற்கரைப்பகுதியை ரசிப்பற்கு ஏற்ற காலம் ஆகும்.
கலங்கரை விளக்கம்
1891ம் ஆண்டு கட்டப்பட்டுள்ள இந்த கலங்கரை விளக்கம் பட்கல் நகரின் முக்கிய சுற்றுலா அம்சமாக விளங்குகிறது. பட்கல் ஆற்று முகத்துவாரத்தில் ஒரு மலையின்மீது பட்கல் கோட்டைக்கு அருகாமையிலேயே இந்த கலங்கரை விளக்கம் அமைந்துள்ளது. ஒரு வெள்ளைத்தூண் கோபுரமாக இருந்த இது 1936ம் ஆண்டு புயல் எச்சரிக்கை சின்னம் மற்றும் விளக்கு பொருத்தப்பட்டு கலங்கரை விளக்கமாக மாற்றப்பட்டுள்ளது. இன்றும் இதில் ஒரு இரட்டை திரி விளக்கும் கற்தூண் வடிவமும் உள்ளன.