'டைம் மெஷின்.' இந்த வார்த்தையைப் பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். பலரது மனதில் நீண்ட காலமாக தொற்றிக் கொண்டன ஆசையும் கற்பனையும். சில திரைப்படங்கள், பல தொலைக்காட்சித் தொடர்கள், ஏகப்பட்ட சித்திரக் கதைப் புத்தங்கள் என்று இன்றுவரை டைம் மெஷின் கிறக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. உலகில் உள்ள பல விஞ்ஞானிகள் கூட இதனை உருவாக்க பல முயற்சிகளை மேற்கொண்டு தோல்விகளையும், முன்னேற்றத்தையும் கண்டு வருகின்றனர். அதெல்லாம் இருக்கட்டும். நம்ம நாட்டில் உள்ள ஓர் குகையில் அதுவும் பல லட்சம் ஆண்டுகள் பழமையான குகை டைம் மிஷினாய் தோற்றம் கொண்டு ஆதி காலத்தை நோக்கி நம்மை பயணிக்க வைப்பது உங்களுக்குத் தெரியுமா ?.
எங்கே உள்ளது ?
மத்தியப்பிரதேச மாநிலம், ராய்சன் மாவட்டத்தில் உள்ளது பீம்பேட்கா குகைகள். சுமார் 3 லட்சம் ஆண்டுகள் பழமையான இந்தக் குகைகள் தெற்காசிய கற்காலத்தின் தொடக்கத்தினை குறிப்பதோடு, இங்கிருந்து கண்டறியப்பட்ட மனிதச் சுவடுகள்தான் இந்தியாவிலேயே பழமையானதாகவும் உள்ளன. இந்த குகைகள் வரலாற்றுக்கு முந்தைய கால இந்தியாவில் மனித வாழ்க்கையை அறிய உதவும் தடயங்களாக திகழ்கின்றன.
Raveesh Vyas
பாண்டவர்களின் எலும்புக்கூடுகள் ?
மஹாபாரத காலத்தில் பாண்டவர்கள் பீம்பேட்கா குகைகளில் தங்கியிருந்ததாக குறிப்பு உள்ளது. இங்கு ஒருமுறை நடைபெற்ற தொல்லியல் ஆராய்ச்சியில் 6000 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை பாண்டவர்களின் எலும்புக்கூடுகளா என்ற வியப்பில் தொல்லியல் துறையினர் திகைத்துள்ளனர்.
Vijay Tiwari09
விசித்திரப் பாறைகள்
குகையைச் சுற்றியுள்ள பாறைகள் யாவும் பல்லாயிரம் ஆண்டுகள் காற்றிலும், மழையிலும் தேய்ந்து இயற்கையாக ஆமை போல் வடிவமைப்பினை பெற்றுள்ளது. இதில் ஆச்சரியப்படக் கூடிய வகைல் பீம்பேட்கா குகைகளில் உள்ள பாறைகள் அனைத்தும் இயற்கையாகவே பல்வேறு வடிவங்களை பெற்று விளங்குகின்றன. அந்த வகையில் மனித முகத்தின் தோற்றத்துடன் உள்ள பாறை காண்போரின் வாயைப் பிளக்க வைக்கிறது.
Surohit
கதை சொல்லும் ஓவியங்கள்
குகையின் உட்புறத்தில் பல ஓவியக் குறிப்புகள் காணப்படுகின்றன. கற்கால மனிதன் ஈட்டி முதலிய ஆயுதங்களோடு வேட்டைக்கு புறப்பட்டு செல்லும் ஓவியம், கற்காலங்களில் வில், அம்பு, ஈட்டி முதலிய ஆயுதங்களைக் கொண்டு எப்படி மனிதன் மிருகங்களை வேட்டையாடினான் என்பதை விளக்கும் ஓவியம் மற்றும் மனிதனை மிகப் பெரிய மிருகம் ஒன்று வேட்டையாடும் ஓவியம் என ஆதிகாலத்தை நினைவுகூறுகிறது.
Bernard Gagnon
பசுமைச் சூழல்
போபாலிலிருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில், விந்தியாஞ்சல் மலைகளின் தெற்கு முனையில் அமைந்துள்ள பீம்பேட்கா குகைகள் பசுமையான காடுகள் சூழ ஊற்று நீர், விலங்குகள் என்று இயற்கை எழில் கொஞ்சும் இடமாக திகழ்கிறது.
Sushil Kumar
நேர்த்தியான வடிவமைப்பு
வரலாற்று ஆய்வாலர்களும் பலர் பயணிக்கும் இந்தக் குகையின் நுழைவு வாயிலே சற்று வித்தியாசமான தோற்றத்தைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னே ஆதி மனிதன் தனக்கான சூழலை நேர்த்தியாக சிந்தித்து வடிவமைத்துள்ளது இந்த நுழைவு வாயில் விளக்குகிறது.
Raveesh Vyas
உலக அளவில் முதலிடம்
பீம்பேட்காவில் தற்போது வரை 750 பாறை வாழிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதில், 243 இடங்கள் பீம்பேட்கா தொகுதியில் உள்ளது. இவற்றில் கண்டெடுக்கப்பட்ட கற்கால மனிதனின் மிச்சங்கள் உலக அளவில் தொல்பொருள் ஆராய்ச்சியில் அதிமுக்கியமான ஒன்றாக திகழ்கிறது.
Arian Zwegers
டைம் மெஷின்
மனிதத் தோற்றம், ஆதி காலத்தில் அவர்கள் வாழ்ந்த முறைகள், வேட்டை, கண்டுபிடிப்பு என புத்தகத்திலும், சில கார்ட்டூனிலும் தான் பார்த்திருப்போம். ஆனால், பீம்பேட்கா குகைக்கு வரும் ஒவ்வொருவரும் குகையில் உள்ள தோற்றத்தையும், ஓவியத்தைம் காண்பது டைம் மெஷினில் ஏறி கற்காலத்துக்கே சென்றுவிடுவதுபோல் ஒரு உணர்வை உருவாக்குகிறது.
Michael Gunther