சீறிப்பாய்ந்து செல்லும் காவிரி நதியின் ஊடாக, தெற்கு கர்நாடகாவின் அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் காவேரி மீன்பிடி முகாம் அமைந்திருக்கிறது. தேனீக்களின் இனிமையான ரீங்காரம் இடைவிடாது கேட்டுக் கொண்டிருக்கும் காவேரி மீன்பிடி முகாம் நம்முடைய அன்றாட வாழ்கையின் அலுப்பையும், வெறுமையையும் போக்கி இன்ப லோகத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும். பெங்களூரிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில், பெங்களூர்-கொல்லேகலா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மந்த்யா மாவட்டத்தில் அமைந்துள்ளது காவேரி மீன்பிடி முகாம்.
அமைதியின் பிறப்பிடம் போல் காட்சி தரும் இந்த முகாமில் மீன்பிடிப்பது சாகச அனுபவமாகவும், குதூகலமாகவும் நிச்சயம் இருக்கும். ஹகலூரிலிருந்து 23 கிலோ மீட்டர் தூரத்தில் மீன்பிடி முகாம் உள்ளது. காவேரி மீன்பிடி முகாமில் பீமேஸ்வரி, கலிபோரே, தொட்டம்மகல்லி உள்ளிட்ட மூன்று முகாம்கள் உள்ளன. இதில் பீமேஸ்வரி மற்றும் கலிபோரே முகாம்கள் பயணிகள் மீன் பிடிப்பதற்காக விடப்பட்டிருகிறது.
பீமேஸ்வரியிலிருந்து கலிபோரேவும், தொட்டம்மகல்லியும் முறையே 16 மற்றும் 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கின்றன. காவேரி மீன்பிடி முகாமில் மரக் குடில்களும், கூடாரங்களும் உள்ளன. முகாம் வரும் வழி பழமையாகவும், கரடு முரடாகவும் இருக்கும். ஆனால் கூடாரத்திலோ, குடில்களிலோ பயணிகள் எந்த குறையும் காண முடியாது. காட்டின் உள்ளே மின்சாரம் இல்லாததால் பயணிகள் ஹரிகேன் விளக்கையே பயன்படுத்த வேண்டும். மகாசீர் எனப்படும் ஒரு வகை மீன் இங்கு அதிகமாக காணப்படும்.
மக்கள் பெரும்பாலும் பிடித்து-பின்-விடும் முறையையே பயன்படுத்துவர். இந்த வகை மீன்கள் மிகவும் அறிய வகையை சேர்ந்தது என்பதால் பிடித்த பின் அதை மீண்டும் ஆற்றில் விட்டுவிடுவார்கள். ஒருவர் எத்தனை மீனை பிடித்தார் என்று கணக்கு வைத்துக்கொண்டு ஒருவருக்கொருவர் போட்டியில் ஈடுபடுவர். இதை தவிர நீங்கள் பரிசல் பயணம் சென்றோ, மலையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியோ பொழுதை களிக்கலாம். மேலும் இங்கு 95-க்கும் மேற்பட்ட பறவை இனங்களும், முதலைகளும், ஆமைகளும் உள்ளன.