இமாச்சல பிரதேச மாநிலத்தின் சோலன் மாவட்டத்திலுள்ள சாத் டிபா மலையின் மீது கடல் மட்டத்திலிருந்து 2226 மீ உயரத்தில் அமைந்துள்ள அழகிய மலைவாழிடம் தான் சைல். சைல் பகுதியில் சுற்றுலாவிற்கேற்ற இடமாக தனித்தன்மையான தாவரங்கள் மற்றும் விலங்குளையுடைய சைல் வனவிலங்குகள் சரணாலயம் விளங்குகிறது.
இமாச்சல் பிரதேசத்தின் தவிர்க்க முடியாத சுற்றுலாத் தளங்களை கொண்ட சைலின் அழகிய பகுதிகளையும், அங்கு எப்படி செல்வது, செய்யவேண்டியவை என்ன என்பதையும் இந்த பகுதியில் காண்போம்.
என்னவெல்லாம் காணலாம்
இந்திய முன்ட்ஜாக் மான்கள், சிறுத்தைப்புலி, கொண்டையுடைய முள்ளம்பன்றிகள், சிறுத்தைகள், காட்டுப் பன்றிகள், கோரல், சம்பார் மற்றும் ஐரோப்பிய சிவப்பு மான்கள் ஆகிய விலங்குகளை இங்கு காண முடியும்.
உலகத்திலேயே மிகவும் உயரமான இடத்தில், 2444 மீட்டர் உயரத்தில் கிரிக்கெட் மைதானம் ஒன்று இங்கு அமைந்திருப்பதோடு, ஒரு போலோ மைதானம் ஒன்றையும் இங்கு நீங்கள் பார்க்கலாம். இவை இரண்டும் தற்பொழுது சைல் இராணுவப் பள்ளியின் கட்டுப்பாட்டில் உள்ளன.
குருத்துவரா சாஹிப், காளி கா டிப்பா மற்றும் மகராஜாவின் அரண்மனை ஆகியவை இங்கிருக்கும் இதர முக்கியமான சுற்றுலாதலங்களாகும். அதோடு இந்த இடம் மலையேற்றத்திற்கும், மீன்பிடிப்பிற்கும் மிகவும் பொருத்தமான இடமாகும்.
எப்படி அடைவது
சைலை விமானம், ரயில் மற்றும் சாலை வழிகளில் சுலபமாக அடைய முடியும். மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரையிலான கோடைகாலத்தில் இவ்விடத்திற்கு வர மிகவும் ஏற்ற பருவமாகும். வசதியான விரும்பத்தக்க பருவநிலையை குளிர்காலத்திலும் வழங்குவதால் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் குளிர்காலங்களிலும் சைலுக்கு வருவார்கள்.
அரசியல் வரலாறு
கிச்னர் பிரபுவின் ஆணைப்படி சிம்லாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட முன்னாள் பாட்டியாலா மன்னர் மகாராஜா ஆதிராஜ் புபீந்தர் சிங்கின் கோடை கால தலைநகராக இவ்விடம் இருந்திருக்கிறது. இவ்வாறு நாடு கடத்தியதற்கு பதிலடியாக மகாராஜா புபூந்தர் சிங் சைல் அரண்மனையை கட்டி இவ்விடத்தை தன்னுடைய கோடைகால தலைநகராக நிர்ணயித்தார். 1891-ல் கட்டப்பட்ட சைல் அரண்மனை சைலின் ராஜ பாரம்பரியத்தின் அடையாளமாக இருக்கிறது.
சுற்றுலாவில் காணவேண்டிய இடங்கள்
சைல் வனவிலங்கு சரணாலயம்
உண்மையில் பாட்டியாலா மன்னரின் வேட்டையாடும் களமாக இருந்த சைல் வனவிலங்கு சரணாலயப்பகுதிகளை 1976-ம் ஆண்டு அரசு சரணாலயமாக அறிவித்தது.
மலையின் உச்சியில், 110 சகிமீ பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த சரணாலயம் அதனுடைய அடர்ந்த காடுகளில் பைன் மரங்கள், புதர்கள், ஓக் மரங்கள் மற்றும் புல்வெளிப்பகுதிகளால் பசுமையாக போர்த்தப்பட்டிருக்கிறது.
சைல் அரண்மனை
75 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள சைல் அரண்மனையானது சைல் நகரத்தின் பிரபலமான சுற்றுலாத்தலமாக உள்ளது. இந்த அரண்மனையை பாட்டியாலாவின் மன்னராக இருந்த மகாராஜா ஆதிராஜ் புபீந்தர் சிங் என்பவர் 1891-ம் ஆண்டு கட்டினார். செழுமையான பசுமை நிறைந்த பைன் மற்றும் தியோதர் மரங்களுக்கு நடுவில் ராஜ்கர் மலைகளில் அமைந்திருக்கும் இந்த அரண்மனை பார்வையாளர்களுக்கு விருந்தாக அமையும் இடமாகும்.
காளி கா டிப்பா
சைல் மலையின் உச்சியில் அமைந்திருக்கும் புகழ் பெற்ற வழிபாட்டுத்தலமான காளி கா டிப்பா, இந்து பெண் தெய்வமான காளியை வணங்குமிடமாகும். இந்த கடவுள் காலம் மற்றும் மாற்றத்தின் கடவுளாக கருதப்படுகிறார்.
இந்த பழமையான கோவிலிலருந்து சிவாலிக் மலைத்தொடர் மற்றும் சூர்தார் சிகரங்களின் திணறடிக்கும் காட்சிகளை காண முடியும். இந்த கோவில் அமைந்திருக்கும் மலையுச்சிப் பகுதி ராஜமாதா குடில், ப்ளாஸ்சம் என்றழைக்கப்படுகிறது.
சைல் ராணுவப் பள்ளி
சைல் நகரத்தில் கடல் மட்டத்திலிருந்து 2144மீ உயரத்தில் பிரபலமான சுற்றுலாதலமான சைல் இராணுவப் பள்ளி அமைந்துள்ளது. முதல் உலகப் போருக்குப் பின்னர் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் தேசிய நிதியிலிருந்து ரூ.250,000/- வழங்கப்பட்டு, 1922-ஆம் ஆண்டில் இந்த பழமையான பள்ளி திறக்கப்பட்டது.
எனவேதான் இங்கிருக்கும் வீரர்கள் 'ஜார்ஜியன்ஸ்' என்று அழைக்கப்படுகிறார்கள். இந்தப் பள்ளி உலகத்திலேயே மிகவும் உயரமான கிரிக்கட் மைதானம் மற்றும் போலோ மைதானத்தை பெற்றுள்ள இடமாகும்.
சித் பாபா கா மந்திர்
சைல் நகரத்தின் குறிப்பிடத்தக்க சுற்றுலாத்தலமான சித் பாபா கா மந்திர் ராஜ்கர் மற்றும் பாந்த்வா மலைகளுக்கு இடையில் அமைந்துள்ளது. பாட்டியாலா மன்னர் புபீந்தர் சிங் இவ்விடத்தில் அரண்மனையை கட்ட நினைத்த போது, அவருடைய கனவில் வந்த துறவியொருவர் மாற்றாக கோவில் ஒன்றை கட்டுமாறு கேட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது.
குருத்வாரா சாஹிப்
1907-ஆம் ஆண்டு பாந்தவா மலைகளில் கட்டப்பட்ட குருத்துவாரா சாஹிப், சைல் பஜாரிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள முக்கியமான சுற்றுலாத்தலமாகும். சீக்கிய வழிபாட்டுத்தலமாக இருந்தாலும், இந்த குருத்துவாராவின் சில கட்டிடக்கலை அமைப்புகள் கோவாவில் உள்ள சர்ச்சுகளின் அமைப்பை நினைவுபடுத்துவதாக இருக்கும்.
சாது புல்
இமாச்சல பிரதேச மாநிலத்தின் கன்டகாட் மற்றும் சைல் பகுதிகளுக்கிடையே அமைந்துள்ள முக்கியமான சுற்றுலாத்தலம் சாதுபுல் ஆகும். இந்த இடம் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமானதாகும். அஸ்வினி ஓடையின் குறுக்காக அமைக்கப்பட்டுள்ள பாலத்திற்கருகில் சாதுபுல் உள்ளது
உயரமான கிரிக்கெட் மைதானம்
கடல் மட்டத்திலிருந்து 2444மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த கிரிக்கெட் மைதானம், உலகிலுள்ள உயரமான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றாக உள்ளது. போலோ மைதானமாகவும் விளங்கும் இந்த மைதானமானது, 1893-ம் ஆண்டு பாட்டியாலா மன்னர் புபீந்தர் சிங்கினால் உருவாக்கப்பட்டு இன்றளவும் நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது.