நீலகிரி என்றதுமே அனைவரது நினைவுக்கும் வருவது கோயம்புத்தூரை அடுத்துள்ள ஓர் மலை மாவட்டமே. மேற்குத் தொடர்ச்சி மலையில் மிகவும் பிரசிதிபெற்ற சுற்றுலாத் தலங்களுக்காகவும், மலைகளின் ராணி என்ற ஊட்டிக்காகவும் புகழ்பெற்றது நீலகிரி மாவட்டம். நாடுமுழுவதும் இம்மாவட்டத்தின் சிறப்பை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால், சந்திப்பூரிலும் ஓர் மலைக் கிராமம் நீலகிரி என்ற பெயரைக் கொண்டிருப்பது வியப்பளிக்கிறது. அப்படி இங்கே என்ன உள்ளது என பார்க்கலாம் வாங்க.
நீலகிரி
சந்திபூரில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்குத் தொடர்ச்சி மலையின் சிதறல்களில் ஒன்றாக உள்ளது நீலகிரி நகரம். வானத்தின் பிரதிபளிப்பால் நீலநிறத்தில் காட்சியளிக்கும் மலை முகடுகளின் காரணமாக நீலகிரி என்னும் பெயரைப் பெற்றுள்ளது இப்பகுதி. மலைக்கு மேல் உள்ள பஞ்சலிங்கேஷ்வர் திருத்தலத்திற்காக பரவலாக இப்பகுதி அறியப்படுகிறது.
சந்திபூர் கடற்கரை
நீலகிரி பல சுற்றுலா அம்சங்களை தன்னுல் கொண்டுள்ளதால் ஒள்ளர் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பருவ காலங்களில் பிற மாநிலங்களில் இருந்தும் இங்கே அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் பயணிப்பது வழக்கம். அவ்வாறு பயணிப்போர் தவறாமல் சென்று வர வேண்டிய சுற்றுலா அம்சங்களில் ஒன்று சந்திபூர் கடற்கரை. எந்த நேரமும் கடல் உள்வாங்கி திடீரென பழைய நிலைமைக்கு திரும்பும் அதிசயம் இங்கே நிகழ்கிறது. இதனைக் காண்பதற்காகவே அதிளவில் இங்கே பயணிகள் வருவது வழக்கம்.
ரெமுனா
ரெமுனா நகரமானது பாலேஷ்வர் மாவட்டத்தில் வசிக்கும் மக்களுக்கான வழிபாட்டுத் தலமாகத் திகழ்கிறது. சந்திபூரில் இருந்து சுமார் 21 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இங்கே கோபிநாத் கடவுளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கீர்சோரா கோபிநாத் கோவில் உள்ளது. நூற்றாண்டு கடந்த இத்தலத்திற்கு ஸ்ரீ சைதன்யா மகாபிரபு தன் குருநாதர் மதபென்ர பூரியுடன் வருகை தந்ததாக நம்பப்படுகிறது.
திருவிழாக்கள்
ரெமுனாவில் கொண்டாடப்படும் திருவிழாக்கள் மிகவும் பிரசிதிபெற்றவை. அவற்றுள் ஜென்மாஷ்டமியும் சந்தன் பூர்ணிமா விழாவினைக் காண பல அயிரக் கணக்கான பக்தர்கள் இங்கே வழிபாட்டிற்காக வருகின்றனர். மேலும் இதனருகேயே ராமச்சந்தி கோவில், கர்கேஷ்வர் கோவில், மதபேந்திர மடம் மற்றும் கௌடியா மடம் போன்ற பிற சுற்றுலா மற்றும் ஆன்மீகத் தலங்களும் உள்ளன.
பீடர்கனிகா
சந்திபூரில் இருந்து 170 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பீடர்கனிகா, பிராமணி, பைதரணி, டம்ரா நதிகளின் டெல்டா பகுதியில் உள்ளது. வனவிலங்குகள் மற்றும் பசுமையான வனப் பகுதிகளைக் கொண்டுள்ள இப்பகுதி இயற்கை ரசிகர்களுக்கு மிகவும் விருப்பமான தலமாக இருக்கும். வனத்துறையினரின் முறையான அனுமதி பெற்றால் மட்டுமே இந்த வனப்பகுதிக்குள் நுழைய முடியும். படகு சவாரி மூலம் கோலாவில் இருந்து தங்மலுக்கு வர வேண்டும். இது இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய சதுப்பு நிலக்காடாக விளங்குவதால் படகு சவாரி பல சுவாரசியமான அனுபவங்களை தரும்.
வன விலங்குகள் காட்சி
படகில் பயணித்தபடியே வெண்ணிற முதலைகள், உப்புநீர் முதலைகள், மிகப் பெரிய காட்டுப் பல்லிகள், மலைப் பாம்புகள், நெடுங்கிளாத்திகள் என பல மிருகங்களை கண்டு ரசிக்கலாம். மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பிய கண்டத்திலிருந்து இடம்பெயர்கின்ற பறவைகளும் இங்கே வருவதால் இது கூடுதல் ஈர்ப்பாக உள்ளது.