சென்னையின் மின்சார ரயில்களில் பரபரப்பான நேரத்தில் (Peak hours) பயணித்துள்ளீர்களா? அதில் செல்பவர்களுக்கே அதில் அடங்கியுள்ள இன்னல்கள் தெரியும். நிற்க கூட இடம் கிடைக்காமல் தங்கள் உடமைகளை காத்துக் கொண்டும், தாங்கள் இறங்க வேண்டிய ஸ்டேஷன் வரும் சமயத்தில் இறங்குவதற்கு முண்டி அடித்து ஓடுவதும் அவர்களுக்கு மட்டுமே தெரியும். ஆனால் இப்பொழுது இதற்கு ஒரு சிறு தீர்வு கிடைத்துவிட்டது. தமிழக தலைநகர் சென்னையில் அதிக மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்தான எலக்ட்ரிக் ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைப்பது குறித்து தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் எலெக்ட்ரிக் ரயில் பயணிகள் மிகவும் உற்சாகமடைந்துள்ளனர். எத்தனை பெட்டிகள் சேர்க்கப்படுகின்றன? எப்பொழுதிலிருந்து நடைமுறைக்கு வருகிறது என்று குறித்து கீழே காண்போம்!
அதிகரித்து வரும் மக்கள் கூட்டம்
சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பயணிக்கும் தினசரி பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. ட்ராபிக் தொந்தரவு இல்லை, குறைந்த கட்டணம், குறித்த நேரத்தில் செல்வது, அதிக பொருட்களை எடுத்து செல்வது இது போன்ற பல காரணங்களுக்காக சென்னையின் பெரும்பாலான மக்கள் சென்னை எலெக்ட்ரிக் ரயில்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் இதே காரணங்களுக்காக ரயில்களை பயன்படுத்தும் மக்கள் கூட்டமும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
முக்கியத்துவம் வாய்ந்த மின்சார ரயில்கள்
சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான மக்கள் கல்வி, வேலை மற்றும் பல்வேறு காரணங்களுக்காகவும் தினசரி சென்னைக்கு பயணிக்கின்றனர். இதனால், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு சென்னையில் இருந்து எலெக்ட்ரிக் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் வழக்கமாக 9 பெட்டிகளுடனும் மற்றும் குறிப்பிட்ட சில ரயில்கள் மட்டும் 12 பெட்டிகளுடனும் செயல்படுகின்றன.
பல்வேறு வழிகளில் இயங்கும் புறநகர் ரயில்கள்
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வரும் புறநகர் மின்சார ரயில்களில் பெரும்பாலானவை 12 பெட்டிகளுடனே இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அதேசமயம் சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர், கும்மிடிபூண்டி வழித்தடங்களில் இயக்கப்பட்டு வரும் ரயில்களில் 60 சதவீதம் வரையிலான ரயில்கள் 12 பெட்டிகளுடனும், 40 சதவீத ரயில்கள் 9 பெட்டிகளுடனுமே இயக்கப்பட்டு வருகின்றன.
அதிகரிக்கப்படும் ரயில் பெட்டிகள்
மீதமுள்ள 40 சதவீத ரயில்களையும் 12 பெட்டிகளுடன் இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் முதல்கட்டமாக, திருவள்ளூர், கும்மிடிபூண்டி வழித்தடங்களில் உள்ள நடைமேடைகளை (Plotform) விரிவாக்கம் செய்யும் பணிகள் ஏறக்குறைய நிறைவடைந்துவிட்டன என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. படிப்படியாக இந்த ஆண்டு இறுதிக்குள் இவ்வழித்தடங்களில் அனைத்து ரயில்களும் 12 பெட்டிகளுடன் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதிகரிக்கப்படும் பெட்டிகளால் குறையப்போகும் கூட்ட நெரிசல்
குறிப்பாக, முக்கிய வழித்தடங்களில் 500 முறை எலக்ட்ரிக் ரயில்கள் இயக்கப்படுகிறது. இருப்பினும், காலை மற்றும் மாலையில் பரபரப்பான நேரங்களில் (Peak hours) இந்த எண்ணிக்கை பற்றாமல், கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இப்பொழுது அதிகரிக்கப்படும் பெட்டிகளால் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்து வரும் நிலை மாறும் என்பதால் எலெக்ட்ரிக் ரயில் பயணிகள் அடைந்துள்ளனர். என்ன தான் குளிர் சாதன பேருந்து, டீலக்ஸ் பஸ், மெட்ரோ ரயில்கள் என எத்தனை வந்தாலும் எலெக்ட்ரிக் ரயில்களுக்கான மவுஸ் என்றைக்குமே குறையாது.