என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், என பாரதி பாடியதைப் போல், என்ன இடம் இல்லை இந்த திருநாட்டில் எனவும் பாடலாம். "சென்னைக்கு மிக அருகில் திருச்சியில் " என நீங்கள் மீம் பார்த்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் உண்மையாக சென்னையில் இருந்து சிறியதொரு பயணத்திலேயே காணக்கூடிய பல வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் உள்ளன. இந்த கட்டுரையின் தலைப்பு கூறுவது போல மகாபலிபுரம் உங்களை வரவேற்கும்.
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது இந்த மகாபலிபுரம். இதனை மாமல்லபுரம் எனவும் கூறுவர். 7ஆம் நூற்றாண்டில் பல்லவ சாம்ராஜ்யத்தில் இந்த நகரம் செல்வசெழிப்போடு விளங்கியுள்ளது. தற்போது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரத வடிவில் உள்ள கோவில்கள், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் என மகாபலிபுரம் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாகும்.
சென்று வர சிறந்த நேரம் :
வெப்பமண்டலத்தில் இருப்பதால் கோடை விடுமுறையில் சென்று வர இது சிறந்த இடமல்ல. காரணம் மிக அதிகமான வெப்பம் நிலவும் காலமது. எனவே ஏப்ரல் முதல் செப்டெம்பர் வரை சென்றுவருவது இயலாது.
நவம்பர் முதல் பிப்ரவரி வரை சிறிது வெப்பம் தணிந்து காணப்படும். அந்நேரத்தில் சுற்றிபார்க்க எதுவாக இருக்கும்..
PC - J'ram DJ
சென்னையில் இருந்து எவ்வாறு பயணிப்பது :
காற்று வழியில்: சென்னைக்கு நீங்கள் விமானம் மூலம் சென்றால், விமான நிலையத்தில் இருந்து வாடகைக் கார் மூலம் மகாபலிபுரம் செல்லலாம். அல்லது விமானநிலையத்தில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து பேருந்து மூலம் மகாபலிபுரம் செல்லலாம். பாண்டிச்சேரி செல்லும் பேருந்துகளும் செல்லும். மகாபலிபுரத்திற்கு 55கிலோமீட்டர் தொலைவில் சென்னை விமான நிலையம் உள்ளது.
ரயில் மூலமாக : நேரடியாக சென்னையில் இருந்து மகாபலிபுரத்திற்கு ரயில்கள் இல்லை. ஆனால் சென்னையில் இருந்து செங்கல்பட்டு வரை ரயிலில் சென்று பின்பு அங்கிருந்து வாடகைக்கார் மூலமாக அல்லது பேருந்து மூலமாக மகாபலிபுரம் செல்லலாம். செங்கல்பட்டில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் மகாபலிபுரம் உள்ளது.
சாலைவழியாக :
வாடகைக் கார் அல்லது பேருந்து எது உங்கள் விருப்பமாக இருந்தாலும் 57 கிலோமீட்டர் பயணிக்க நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.
வழி 1 : சென்னை - கோவளம் - திருவிடந்தை - மகாபலிபுரம்
வழி 2 : சென்னை - தண்டலம் - வண்டலூர் - மகாபலிபுரம்
ஆனால் இருவழிகளில் முதல் வழியே சிறந்தது. விரைவாக செல்ல இயலும். மகாபலிபுரம் செல்லும் வழியில் கட்டாயம் காணவேண்டிய இடங்கள்,
கோவளம் :
சென்னையில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கோவளம் கடற்கரை. இதை ஒட்டி உள்ள நகரம் கர்நாடிக் நவாப்புகள் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. இதனை கோவலாங் எனவும் கூறுவர். கூகிள் வரைபடத்தில் அந்த பெயர் தான் கொடுக்கப்பட்டுள்ளது. அதிகம் மக்கள் நடமாட்டமில்லாத கடற்கரை காரணமாக பயணிகள் மத்தியில் அதிக பிரசித்தி பெற்று விளங்குகிறது கோவளம். இங்கு நீங்கள் அலைசறுக்கு மற்றும் காற்று சறுக்கு விளையாட்டுகளில் பங்குபெறலாம். சிறிது நின்று நிதானமாக மகாபலிபுரம் பயணிக்க நீங்கள் விரும்பினால் இது சரியான பகுதியாகும்.
PC- Ronald Tagra
திருவிடந்தை :
மகாபலிபுரம் செல்லும்போது திருவிடந்தையில் சிறுது நின்று செல்லலாம். அங்குள்ள முதலைகள் பூங்காவில் வகை வகையாக முதலைகள் காணலாம். மக்கர், காரியல், மற்றும் உப்பு நீர் முதலை வகைகள் இங்குள்ளன.
PC- Adam Jones
மகாபலிபுரத்தில் காணவேண்டிய இடங்கள் :
மகாபலிபுரம் சென்ற பிறகு நீங்கள் பார்த்து ரசிக்க பல இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் காரணமாகத் தான் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாக மகாபலிபுரம் உள்ளது.
கடற்கரை கோவில் :
வங்காள விரிகுடாவின் ஓரத்தில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. 8 ஆம் நூற்றாண்டில் கிரானைட் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 7 பகோடாகளில் ஒன்றாக இந்த கோவில் கருதப்படுகிறது.
கற்களில் உள்ள சிலைகளும், கலைநயம் மிக்க சிற்பங்களும், இந்த இடத்தின் சிறப்பை மேலும் அதிப்படுத்துகின்றன. கடற்கரையில் அமர்ந்து இந்த கோவிலின் அழகியலை பருக உங்களுக்கு விருப்பம் என்றால் கட்டாயம் நீங்கள் செல்ல வேண்டிய இடமிது.
PC- Aravindan Ganesan
அர்ஜுனன் தவம் :
கங்கை கீழிறங்கி வருதல் எனவும் இது கூறப்படுகிறது. இந்த இடம் தான் மகாபலிபுரத்தில் மிகவும் தொன்மையான இடம். மேலும் சமகாலதிற்கு ஏற்ப அதன் மேல் செய்யப்பட்டுள்ள வேலைபாடுகள் தான் சிறந்தது எனலாம். இங்கு இருக்கும் கங்கை கீழே இறங்கி வருவது போன்ற சிற்பமும் அர்ஜுனன் தவம் புரியும் சிற்பமும் இந்த இடத்தின் அழகியலை மேலும் கூட்டுகின்றன.
புத்த மதத்தை வீழ்த்தி இந்துமதம் உயர்ந்ததை கொண்டாடும் விதமாக இந்த சிலை இடைக்காலத்தில் நிறுவப்பட்டுள்ளது.
PC- Emmanuel DYAN
பஞ்ச ரதங்கள் :
மகாபலிபுரத்தில் மற்றுமொரு அற்புதமான சிற்பம் என்றால் அது பஞ்ச ரதம் ஆகும். ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கூம்பு வடிவ சிலையாகும். மகாபாரத காவியத்தில் வரும் பஞ்ச பாண்டவர்கள் பெயகர்கள் கொண்ட ரதங்கள் வடிவிலான கோவில்கள் இந்த சிலையில் உள்ளன. ஒட்டுமொத்த சிலையும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது என்பது தான் இதன் சிறப்பம்சம்.
PC- Ashwin Kumar
கண்ணனின் வெண்ணை :
மலையின் சரிவில் உள்ள மிகப்பெரிய கல்லிற்கு கண்ணனின் வெண்ணை என பெயரிட்டுள்ளனர். இந்த கல்லிருக்கு பின்னால் பல கதைகள் உள்ளன. தன் இடத்தில் இருந்து இந்த கல்லை நகர்த்த பல்லவ மன்னன் 7 யானைகளை கொண்டு முயன்றதாகவும், ஆனால் கல்லை நகர்த்த இயலவில்லை என்றும் கூறுவர். இந்த கதைகளை கேட்பதற்காகவே இந்த இடத்திற்கு செல்லலாம்.
PC- Leon Yaakov