உலகப்பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு மாதந்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் திருவேங்கடமுடையானைக் காண பல மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் பக்தர்கள் வருகை தருகின்றனர். இன்னமும் கூட திருப்பதி தரிசன டிக்கெட் புக் செய்வது எப்படி? கார், பஸ், ரயில் இவற்றில் எதில் செல்வது சிறந்தது? தங்குமிடம் புக் செய்வது எப்படி? என்ன வகையான உணவுகளை அங்கு உண்ணலாம், அன்னபிரசாதம் பெற எப்படி செல்ல வேண்டும்? சென்னையில் இருந்து திருப்பதி செல்வது குறித்த பல தேவையான தகவல்களை இங்கே காண்போம்!
திருப்பதி பாலாஜி தரிசனம் புக்கிங்
அனைவருக்குமே திருப்பதி செல்ல வேண்டும் என்ற எண்ணமுண்டு. ஆனால் சர்வ தர்ஷனில் அவர்கள் நம்மை குடவுனில் மணி கணக்கில் காத்திருக்க வைக்கிறார்கள். அவர்களும் கூட்டம் கூட்டமாக மக்கள் திருமலையை நோக்கி படையெடுக்கும் அவர்களுக்கும் வேறு வழியில்லை அல்லவா? ஆனால் இதில் சிக்கி கொள்ளாமல் சுவாமி தரிசனம் செய்ய நமக்கு வேறு வழி உள்ளது. அது தான் ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட்.
ஆம்! ஒவ்வொரு மாதமும் 20 ஆம் தேதிக்கு மேல் https://tirupatibalaji.ap.gov.in/#/login இந்த இணையத்தளத்தில் ரூ. 300 சிறப்பு தரிசனதிற்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகின்றன. காலை 9 மணிக்கு துவங்கும் புக்கிங் 12 மணிக்கெல்லாம் முடிந்து விடுகிறது. நீங்கள் முன்பதிவு துவங்கிய உடனே பதிவு செய்து கொள்ளுங்கள். குறிப்பாக உங்களுக்கு விடுமுறை நாளில் காலை வேலையில் அதாவது 10 அல்லது 11 மணிக்கு தரிசனம் பார்ப்பது போல் புக் செய்து கொள்ளுங்கள்.
கார், பஸ், ரயில் – இவற்றில் எதில் செல்லலாம்
கார்
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சென்னையிலிருந்து 133 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. நீங்கள் கார், பேருந்து அல்லது ரயில் மூலம் எளிதில் அடையலாம். கார் என்றால் நீங்கள் அதிக மைலேஜ் கொடுக்கும் Celerio, Redi go, Aura, Dzire, Altroz, Baleno போன்ற கார்களை எடுத்தால் நீங்கள் 3,000 முதல் 3,500 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டால் திருப்பதி சென்று வீட்டிற்கு திரும்பி வர சரியாக இருக்கும்.
Innova, Harrier, Safari, Taigun, Xuv 500 போன்ற பெரிய கார்களை எடுத்தால் 4,500 முதல் 5,500 ரூபாய்க்கு பெட்ரோல் போட வேண்டும். உங்களுக்கு காரில் செல்வது பிடிக்குமென்றால் நீங்கள் தாரளமாக செல்லலாம்.
பேருந்து
சென்னையின் எந்த மூலையில் இருந்தும் சென்னை கோயம்பேடு மற்றும் சென்னை மாதவரம் பேருந்து நிலையத்தை அடைய வசதி உண்டு. மாதவரம் பேருந்து நிலையத்தில் கருடா, APSRTC மற்றும் இதர தனியார் பேருந்துகள் திருப்பதிக்கு இயக்கப்படுகின்றன. இவற்றில் செல்ல நீங்கள் முன்பதிவுகளும் செய்யலாம். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தமிழக அரசு பேருந்துகள் திருப்பதிக்கு இயக்கப்படுகின்றன. ஒரு டிக்கெட்டுக்கான கட்டணம் ரூ. 250 இல் இருந்து 1000 வரை செல்கிறது.
ரயில்
சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு ரயில்கள் தினமும் இயக்கப்படுகின்றன. ஒரு டிக்கெட்டுக்கான கட்டணம் ரூ. 100 - 250 ஆகும்.
தங்குமிடம் புக் செய்வது எப்படி?
டிக்கெட் புக்கிங் செய்து விட்டால் போதுமானது என்று நீங்கள் இருந்து விட வேண்டாம். உங்களுடன் வயதானவர்கள், பெண்கள் அல்லது குழந்தைகள் வருகிறார்கள் என்றால் சற்று ஓய்வெடுக்க தனி அறை இருந்தால் அல்லது குளித்து ரெடியாக தனி அறை இருந்தால் நன்றாக இருந்து இருக்குமே என்று அங்கு சென்று நீங்கள் யோசிக்க வேண்டும். அதற்கும் உபாயம் உண்டு.
https://tirupatibalaji.ap.gov.in/#/login இதே இணையத்தளத்தில் உங்களுடைய மெயில் ஐடி மற்றும் பாஸ்வர்ட் போட்டு தரிசின டிக்கெட் முன்பதிவு செய்தது போலவே, ஒவ்வொரு மாதமும் 25 ஆம் தேதிக்கு மேல் திருமலையில் தங்குமிடங்களுக்கான முன்பதிவு தொடங்குகிறது. உங்களுடைய வசதிக்கு ஏற்றார்போல் ரூ. 100 அல்லது ரூ. 1000 அறைகளை காஷன் டெபாசிட் செய்து புக் செய்து விடுங்கள். ஆனால் ரூ. 1000 அறையானது கோவிலுக்கு சற்று பக்கத்தில் இருக்கிறது. நடந்து செல்வதற்கு வசதியாக இருக்கும். உங்களுக்கு நடப்பது பிடிக்குமென்றால் ரூ. 100 அறையே புக் செய்யலாம். தவறொன்றும் இல்லை.
வகை வகையான உணவுகள் மற்றும் அன்னபிரசாதம்
திருப்பதியில் ஏகப்பட்ட ஹோட்டல்களும் உணவகங்களும் உள்ளன. திருமலையிலும் கூட ஏராளமான தனியார் உணவகங்கள் இயங்குகின்றன. நீங்கள் திருப்பதியில் உணவு முடித்துவிட்டு கூட தரிசனத்திற்கு செல்லலாம். திருப்பதியில் உள்ள சிறு கடைகளிலும் கூட உணவு மிக ருசியாக கிடைக்கிறது. ஆந்திரா ஸ்பெஷல் உணவுகள், பாரம்பரிய உணவு வகைகள், வட இந்திய உணவுகள், தமிழக உணவுகள், செட்டிநாடு கார சார உணவுகள் ஆகியவையும் திருப்பதியில் கிடைக்கிறது. குறிப்பாக ஆந்திரா ஸ்பெஷல் பருப்பு பொடியை சாதத்தில் போட்டு நெய் ஊற்றி சுவைக்க மறக்காதீர்கள்! மிகவும் ருசியாக இருக்கும்.
அன்னபிரசாதம் சாப்பிட வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால், நீங்கள் திருமலைக்கு தான் செல்ல வேண்டும். ஒரே நேரத்தில் 25,000 பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய வெங்கமாம்பா அன்னபிரசாத கூடத்தில் அனுதினமும் கிடைக்கும் சுவையான அன்னபிரசாதத்தை சாப்பிட்டு மகிழுங்கள். இதை சாப்பிட கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும்!
அனைத்து தகவல்களையும் தெரிந்துக் கொண்டீர்கள் அல்லவா! இப்பொழுதே பிளான் பண்ணுங்கள்!