கோலார் மாவட்டத்தின் அங்கமாக இருந்த சிக்பல்லாபூர் நிறைய சுற்றுலாப் பிரதேசங்களைத் தன்னுள் கொண்டது. பெங்களூரிலிருந்து 50 கி.மீ தூரத்தில் உள்ள சிக்பல்லாபூர் அதன் பெயரிலேயே உள்ள மாவட்ட தலைநகராக உள்ளது. மேலும் இந்த மாவட்டம் பிரசித்தி பெற்ற பொறியாளரும் ஆட்சியாளருமான ஷீ விஸ்வேஸ்ரய்யா அவர்கள் பிறந்த இடம் எனும் பெருமையையும் பெற்றுள்ளது. சிக்பல்லாபூரில் பல இயற்கையான சுற்றுலா அம்சங்களும் மனித முயற்சியில் உருவான நினைவுச்சின்னங்களும் பயணிகள் கவரும் வகையில் அமைந்துள்ளன. பிரசித்தி பெற்ற நந்தி மலைகள் சிக்பல்லாபூரில் தாலுக்காவில் அமைந்துள்ளது. இந்த மலையிலுள்ள நந்தீஸ்வரர் கோயில் மற்றும் மலையடிவார கிராமத்தில் அமைந்துள்ள போக நந்தீஸ்வரர் கோயில் ஆகியவை இங்கு குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். வாருங்கள் இதன் சுற்றுலா அம்சங்களைப் பற்றி காண்போம்.
சிக்பல்லாபூரின் முக்கிய சுற்றுலாத் தளங்கள்
சிக்பல்லாபூரின் முக்கிய சுற்றுலாத் தளங்களாக அதிகம் மக்கள் செல்லும் சுற்றுலா பிரதேசமாக விளங்குபவை விஸ்வேரய்யா அருங்காட்சியகம், கந்த கிரி, கும்மநாயகா கோட்டை மற்றும் போக நந்தீஸ்வரர் கோவில் ஆகியன வாகும்.
போக நந்தீஸ்வரர் கோவில்
நந்தி மலையில் 4831அடி உயரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. இது பயணிகள் தவறாமல் விஜயம் செய்ய வேண்டிய முக்கியமான சுற்றுலாத்தலமாகும். பாண வம்ச அரசியான ரத்னவ்ல்லியால் 806ம் ஆண்டு திராவிட கட்டிடக்கலை பாணியில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. உக்ரநரசிம்மர் மற்றும் யோகநரசிம்மர் போன்ற கடவுள்களுக்காக இது உருவாக்கப்பட்டுள்ளது. சோப்புக்கல் எனப்படும் விசேஷ பாறைக்கற்களால் உருவாக்கப்பட்டுள்ள அருணாசலேஸ்வரர் கோயிலும் இந்த கோயிலுக்கு அருகிலேயே உள்ளது.
கும்மநாயகா கோட்டை
கும்மநாயகா கோட்டையானது 1350ம் ஆண்டுகளில் கும்மநாயகா எனும் ஜமீன் தளபதியால் கட்டப்பட்டு ஆளப்பட்டு வந்திருக்கிறது. 150 அடி உயரத்தில் ஒரு மலைப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கோட்டையை சுற்றி காணப்படும் ஒரு வட்டவடிவ பாறை சுவரமைப்பு ஒரு அற்புதமான அம்சமாக காட்சியளிக்கின்றது
ஸ்கந்த கிரி
ஸ்கந்த கிரியிலுள்ள இரண்டு குகைகளையும் கூட பயணிகள் பார்க்கலாம். இவை இரண்டும் இன்னமும் சரியாக ஆராயப்படாமல் உள்ளன. உள்ளூர் மக்கள் இந்தக்குகை வழியாக கோட்டைக்கு செல்ல பாதை இருக்கின்றது என்று நம்புகின்றனர். மேலும் இந்த குகைகளில் 6 சமாதிகள் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. அதுதவிர உள்ளூர் மக்கள் இந்த குகைகளில் மலைப்பாம்புகள் வசிப்பதாகவும் அவை அந்த வழியாக செல்லும் செம்மறியாடுகளை விழுங்கி வருகின்றன என்றும் கூறுகின்றனர்.
விஸ்வேஸ்ரய்யா மியூசியம்
நேரம் இருப்பின் சிக்பல்லாபூர் விஜயத்தின் போது பார்க்க வேண்டிய ஒரு அம்சம் இந்த விஸ்வேஸ்ரய்யா மியூசியம் ஆகும். இந்தியாவின் தலைசிறந்த பொறியாளர்களுள் ஒருவரான சர் எம். விஸ்வேஸ்ரய்யாவின் நினைவாக உருவாக்கப்பட்டுள்ள இந்த மியூசியத்தில் பலவிதமான நினைவுப்பொருட்களும் காட்சி அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.