கோயம்புத்தூரில் இருந்து பெங்களூரு செல்ல மலை வழிப்பாதை, தேசிய நெடுஞ்சாலை என இருவேறு வழித்தடங்கள் உள்ளன. இதில் பெரும்பாலும், இளைஞர்கள் பட்டாளமாய் பயணிக்க விரும்புவது மலை வழிப்பாதையைத் தான். இதுபோன்ற வன விலங்குகளின் இடையூருடன் கரடு முரடான சாலையில் பயணிக்க விரும்பாதவரா நீங்கள், அப்படியென்றால் கோவையில் இருந்து பெங்களூருகுக்கு இந்த ரூட்டை ட்ரை பண்ணி பாருங்க.
கோயம்புத்தூர் - சத்தியமங்கலம்
Rsrikanth05
கோயம்புத்தூரிலிருந்து நாம் முதலில் பயணிக்கப்போவது சத்தியமங்கலத்தை நோக்கித்தான். அன்னூர், புளியம்பட்டி வழியாக சுமார் 68 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலை 948-யில் பயணிக்க வேண்டும். இந்த இடைப்பட்ட தூரத்தையும் வெறுமனே வாகனத்தின் உள்ளே நேரத்தை செலவிட வேண்டும் என இல்லை. புளியம்பட்டி ஸ்பெஷல் கரிவரதராஜ பெருமாள் கோவில், காமாட்சியம்மன் கோவில், பாலதண்டாயுதபாணி கோவில், தமிழ்நாட்டிலேயே இரண்டாவது பெரிய சந்தை என கொஞ்சம் சுத்தியும் பார்க்கலாம்.
சத்தியமங்கலம் - அந்தியூர்
Magentic Manifestations
சத்தியமங்கலத்தில் இருந்து 42 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்தியூரை அடைய கெம்பநாயக்கன்பாளைம், கொடிவேரி, அதனி வழியாக பயணிக்க வேண்டும். இந்த இடைப்பட்ட தூரத்தில் உங்களை உற்சாகமூட்டும் வகையில் அமைந்துள்ளது கொடிவேரி அணி. பவானிசாகர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அடுத்த நிலை கொடிவேரி தான். சுடசுட மீன், கொட்டும் நீர்... அந்த இடத்தை விட்டு விலக மனசு வராதுங்க. அப்படியொரு ஏரியா அது.
ஆன்மீகத் தலங்கள்
Krishnaeee
சத்தியமங்கலத்தில் இருந்து அந்தியூருக்கான வழித்தடம் முழுக்க பெருமபாலான இந்துக் கோவில்களால் நிறைந்து காணப்படுகிறது. இதில், சத்தி அருகே பவானி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள பவானீஷ்வரர் ஆலயம் மிகவும் பிரசிதிபெற்றது. இதன் அடுத்துள்ள கோட்டை முனீஷ்வரன் கோவில், ஸ்ரீ மாகாளி அம்மன் கோவில், அங்கால பரமேஷ்வரி கோவில், கள்ளிப்பட்டி பெருமாள் கோவில், அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில், குருநாதசாமி கோவில் உள்ளிட்டவை உங்களது பயணத்தை சிறந்த ஆன்மீகப் பயணமாகவும் மாற்றும்.
அந்தியூர் - அம்மாபேட்டை
Map
அந்தியூருக்கும், மேட்டூருக்கும் இடையில் அந்திரில் இருந்து சுமார் 26 கிலோ மீட்டர் தொலைவில் காவிரி ஆற்றின் ஓரத்தில் அமைந்துள்ளது அம்மாபேட்டை ஊராட்சி. பட்லுர் அங்காலபரமேஷ்வரி அம்மன் கோவில், தோட்டத்து முனியப்பன் கோவில், கரிய பெருமாள் கோவில் என அந்தியூர் - அம்மாபேட்டை சாலையில் உள்ள கோவில்கள் அனைத்தும் நீண்டநேர பயணத்தினால் ஏற்படும் சோர்வை நீக்கி உங்களை சற்று ஆசுவாசப்படுத்தும்.
அம்மாபேட்டை - மேட்டூர்
Pavalarvadi
இங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை 544-யில் காவிரி ஆற்றங்கரை ஓரமே ஒரு 20 கிலோ மீட்டர் பயணித்தால் மேட்டூர் நகராட்சியை அடைந்துவிடலாம். இங்கு பிரசிதிபெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்வது மேட்டூர் அணையே. காவிரி ஆற்றின் குறிக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையைக் காண மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். தமிழகத்தில் மிகப்பெரிய அணை என்ற புகழும் மேட்டூர் அணைக்கு உள்ளது. குடும்பத்தினருடன் இந்த பயணம் மேற்கொள்கிறீர்கள் என்றால் அணைப் பூங்காவின் உள்ளே உள்ள மீன்கடைகளில் மீன்களை சுவைக்க தவறவிட்டுடாதீங்க.
மேட்டூர் - தொப்பூர்
Praveen Kumar.R
தொப்பூர் கிழக்குத் தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்த ஒரு பகுதி ஆகும். இது சேலத்தில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இப்பகுதியே சேலத்தையும் தரும்புரி மாவட்டத்தையும் இணைக்கிறது. தொப்பூர் தேசிய நெடுஞ்சாலை 7 தமிழகத்தின் முதன்மையான வணிக வழித்தடமாக உள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த நெடுஞ்சாலை வழியாகச் செல்கின்றன. இதில், என்ன சிறப்பு என்றால், நெடுஞ்சாலையில் பயணிக்க துவங்கிய சில நிமிடங்களிலேயே மூன்று கிலோமீட்டர் தொலைவுக்கு இருபுறமும் மலைகளும் காடுகளும் நிறைந்த பகுதியாக செடி கொடிகள் நிறைந்து காணப்படும். இது, குரங்கு, மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் அதிகம் உள்ள காட்டு வழித்தடம் என்பது குறிப்பிடத்தக்கது.
தொப்பூர் - தர்மபுரி
Rsrikanth05
தொப்பூரில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் இருபுறமும் உள்ள தோப்புகளையும், விவசாய நிலங்களையும் கண்டுரசித்தவாரே ஸ்ரீநகர்- கண்யாகுமரி ஹைவேயில் சென்றால் தர்மபுரியை அடையலாம். பயண நேரத்தைக் கணக்கிடாமல் பொழுதைக் கழிக்க வேண்டும் என விரும்பினால் தொப்பூர் ஆறு, அருள்மிகு பாலத்து முனியப்பன் கோவில், ஆஞ்சநேயர் கோவில், கெங்காலபுரம் குடயங்கர அம்மன் கோவில், சிவன் கோவில், முனியப்பன் கோவில், அதியமான் கோட்டை ஏரி, லலிகம் ஏரி, என 25 கிலோ மீட்டர் அத்தனை கோவில்கள் இப்பகுதியில் காணப்படுகின்றன.
தர்மபுரி - ஒசூர்
Salt, Henry
தர்மபுரியில் இருந்து பாலக்கோடு, மரந்தஹல்லி, ராயகோட்டை, ஹாலசீபம் வழியாக 90 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும். இதில், பாலக்கோடு அடுத்து ஒரு சில கிலோ மீட்டர்களில் வரும் சிவநகர் தீர்த்ரஹல்லி ஏரி, இதன் கரையொட்டியுள்ள உயர்ந்து நிற்கும் ஆஞ்சநேயர், ராயக்கோட்டை , சானமவு காட்டு வழிப் பாதை என செல்ல வேண்டும்.
ஒசூர் - பெங்களூர்
Sunnya343
ஒசூரில் இருந்து மும்பை நெடுஞ்சாலையில் ஜூஜூவாடி ஏரி அடுத்து தமிழ்நாடு எல்லை முடிந்து கர்நாடகா எல்லை ஆரம்பமாகிறது. அட்டிபிலி சுங்கச் சாவடி கடந்து 40 கிலோ மீட்டர் கடந்தால் பெங்களூரை அடைந்துவிடலாம். இதன் இடைப்பட்ட தூரத்தில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டி, மடிவாலா உள்ளிட்ட பகுதிகள் பெங்களூரின் சிறப்புமிக்க பகுதிகளாக திகழ்கிறது. மேலும, இதுவே கர்நாடகா, பெங்களூரின் நுழைவுவாயிலாகவும் கருதப்படுகிறது.
கவனம் தேவை
Soham Banerjee
தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட தூரம் பயணிக்க நீங்கள் விரும்பினால் இந்த கோயம்புத்தூர் - பெங்களூர் சாலை உங்களது மனதில் நீங்கா இடம்பிடிக்கும். இருப்பினும், இரவு நேரங்களில் பிற மாநில லாரிகள், கனரக வாகனங்கள் அதிகளவில், அதிவேகமாக இச்சாலையில் பயணிப்பதால் இருசக்கர வாகனங்களில் பயணிப்பதை தவிர்த்தல் நன்று.