தென் இந்தியாவின் மேன்செஸ்டர் என்று அறியப்படும் கோயம்புத்தூரிலும் அதைச் சுற்றியும் எண்ணற்ற சுற்றுலாத் தலங்கள் உள்ளன.
அதிலும் குறிப்பாக மருதமலை கோயில் போன்ற இடங்கள் கோயம்புத்தூருக்கு வரும் பயணிகளால் அதிகமாக பார்க்கப்படுகின்றன.
எந்த அளவுக்கு ஆன்மீக ஸ்தலங்கள் இருக்கின்றனவோ அதே அளவுக்கு இயற்கை எழில் கொஞ்சும் இடங்களும், கேளிக்கை பூங்காக்களும் கோவையில் நிறைந்துள்ளன.
சென்னைக்கு அடுத்தபடியாக தகவல் தொழில்நுட்ப துறையில் வேகமாக வளர்ந்து வரும் கோவை நகரின் இயந்திரத் தனமான வாழ்விலிருந்து இந்த சுற்றுலாத் தலங்கள் நம்மை வேறொரு உலகுக்கு அழைத்துச் செல்கின்றன.
பிளாக் தண்டர் தீம் பார்க்
கோயம்புத்தூரிலிருந்து ஊட்டி செல்லும் வழியில் மேட்டுப்பாளையத்தில் அமைந்திருக்கிறது பிளாக் தண்டர் தீம் பார்க். இது கோயம்புத்தூரிலிருந்து 41 கிலோமீட்டர் தொலைவிலும், ஊட்டியிலிருந்து 40 கிலோமீட்டர் தூரத்திலும் அமையப்பெற்றுள்ளது. 65 ஏக்கர் பரப்பளவை கொண்ட இந்த தீம் பார்க் 50-க்கும் மேற்பட்ட கேளிக்கை விளையாட்டுகளை கொண்டுள்ளது. இந்த பூங்கா நீலகிரி மலையடிவாரத்தில் கட்டப்பட்டுள்ளதால் நீலகிரி மற்றும் அதன் தேயிலை தோட்டங்களை பார்த்து ரசிப்பதோடு, புகைப்படமும் எடுத்துக்கொள்ளலாம். இங்கு 40 தங்கும் அறைகளை கொண்ட நீயூ பிளாக் தண்டர் ரிசார்ட் அமைந்திருப்பதால் இயற்கை சூழலில் ஓரிரு நாட்கள் தங்கி குதூகலமாக பொழுதை கழிக்கலாம். இதன் அருகில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையமும், 41 கிலோமீட்டரில் கோயம்புத்தூர் விமான மற்றும் ரயில் நிலையமும் உள்ளன. அதோடு கோயம்புத்தூரிலிருந்து மேட்டுப்பாளையம் வந்து அங்கிருந்து ஒரு டேக்சி வைத்துகொண்டு சுலபமாக 15 நிமிடங்களுக்குள் பிளாக் தண்டரை அடைந்து விட முடியும். மேலும் இந்த பூங்காவிற்குள் செல்வதற்கு நுழைவுக் கட்டணம் பத்து வயதுக்கு மேலான பெரியவர்களுக்கு ரூ. 450, பத்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு ரூ. 400-ம் வசூலிக்கப்படுகிறது.
மருதமலை கோயில்
மருதமலையை தெரியாவதர்கள் தமிழ்நாட்டில் யாரும் இருக்கமாட்டார்கள் என்றே சொல்லலாம். இந்த கோயில் முன்பு கொங்கு வேட்டுவ கவுண்டர்களின் தனிச் சொத்தாக இருந்தது. இது முருகனின் அறுபடைவீடு ஆலயங்களுக்கு பிறகு அடுத்த முக்கியத்துவத்தை பெறுகிறது. எனவே முருக பக்தர்கள் மருதமலை கோயிலை முருகனின் 7-வது படைவீடு என்று நம்புகின்றனர். 1200 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் மருதமலை கோயில் கோயம்புத்தூரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்திருப்பதோடு சாலை வழியாக எளிதில் அடையக்கூடியதாக இருக்கிறது.
புரூக்பீல்ட்ஸ் மால்
கோயம்புத்தூர் மாநகரில் இளைஞகர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும் இடங்களில் ஒன்று புரூக்பீல்ட்ஸ் மால். 2009-ல் புரூக்பாண்ட் சாலையில் திறக்கப்பட்ட இந்த வணிக வளாகம் நகரிலேயே அதிகம் பேர் வந்து செல்லும் வளாகமாக அறியப்படுகிறது. இங்கு 6 திரைகள் கொண்ட மல்டிப்ளெக்ஸ் திரையரங்கு ஒன்றும், உள்ளூர் மற்றும் காண்டினெண்டல் உணவு வகைகளை பரிமாறும் உணவகம் ஒன்றும் அமைந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் குழந்தைகள் பெரியவர் ஒருசேர விளையாடும் விளையாட்டு மண்டலம் ஒன்றும் இந்த வளாகத்தில் உள்ளது.
பட்டீஸ்வரர் ஆலயம், பேரூர்
கோயம்புத்தூரிலிருந்து 9 கி.மீ தொலைவில் பேரூர் எனுமிடத்தில் பட்டீஸ்வரர் ஆலயம் அமைந்திருக்கிறது. கோயம்புத்தூரிலேயே மிக முக்கியமான கோயிலாக கருதப்படும் இது கொங்கு வேட்டுவ கவுண்டர் சமூகத்தை சேர்ந்த பாளையக்கார மன்னர்களால் கட்டப்பட்டது ஆகும். இந்த கோயிலில் ஆண்டுக்கொருமுறை நாற்று நடும் விழா ஆனி மாதத்தில் கிருத்திகை தொடங்கி பூராட நட்சத்திரத்தில் நாற்று நடவும், உத்திரத்தில் திருமஞ்சனமும் ஆக கோலாகலமாய் நடக்கிறது.
கோவை குற்றாலம்
உலகின் 2-வது சுவையான நீராக கருதப்படும் சிறுவாணி ஆற்றுநீர் அருவியாக கொட்டும் இடம்தான் கோவை குற்றாலம். இதன் பெயருக்கு ஏற்றார் போலவே கோவையின் குற்றாலமாக திகழ்ந்து வரும் இந்த அருவி கோயம்புத்தூரில் இருந்து 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த அருவிக்கு வனத்துறையின் சிறப்பு அனுமதி பெற்ற பிறகே செல்ல முடியும். மேலும் கோயம்புத்தூரின் மற்ற பகுதிகளிலிருந்து இங்கு வர குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகளே உள்ளன. அதுமட்டுமல்லாமல் 5 மணிக்கு மேல் இங்கு செல்ல யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.
தியானலிங்க ஆலயம்
1994-ல் சத்குரு அவர்களால் நிறுவப்பட்ட தியானலிங்க ஆலயம் கோயம்புத்தூரிலிருந்து 30 கி.மீ தொலைவில் வெள்ளியங்கிரியில் அமைந்திருக்கிறது. அதன் பிறகு 1996-ஆம் ஆண்டுதான் கம்பீரமான சிவலிங்கம் ஒன்று கோயிலின் உள்ளே பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்தக் கோயிலில் நிலவும் சலனமற்ற அமைதியான சூழலின் காரணமாக தியானம் செய்ய அதிக அளவில் மக்கள் வருகின்றனர். அதோடு இங்கு மத வேறுபாடின்றி யார் வேண்டுமானாலும் வந்து தியானம் செய்யலாம்.