கஜா புயல் கரைகடந்து சென்று கொடைக்கானலில் கனமழையை பொழிந்து வருகிறது. இதனால் அங்கு சுற்றுலாப் பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கனமழை காரணமாக கொடைக்கானல் பகுதியில் சுற்றுலா பாதிக்கப்பட்டுள்ளது மேலும் இங்குள்ள பல இடங்கள் மிகவும் சேதமடைந்துள்ளன. வாருங்கள் கொடைக்கானலில் பாதிக்கப்பட்ட பகுதிகள் பற்றி பார்க்கலாம்.
இயல்பு வாழ்க்கை முடக்கம்
கஜா புயலின் காரணமாக இரவு முழுவதும் பெய்த கன மழையில் கொடைக்கானல் திணறி வருகிறது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது. நேற்றிரவு முதல் பல இடங்களில் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. கூடவே பலத்த சூறாவளி காற்றும் சுழட்டி அடிப்பதால் மின்கம்பங்கள், மரங்கள் என எல்லாமே அடியோடு சாய்ந்து கிடக்கின்றன. இதனால் சுற்றுலாவுக்கு சென்ற மக்கள் மிகவும் பாதுகாப்பான இடங்களைத் தேடி செல்கின்றனர். பல இடங்களில் அவர்களுக்கு பாதிப்பு நேர்ந்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள்
உள்ளூர் மக்களுடன், கொடைக்கானலைச் சுற்றிப் பார்க்க வந்த சுற்றுலா பயணிகளும் சிக்கி கொண்டுள்ளனர். கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த இடத்தில், வெளியே எங்கியும் போக முடியாமல் விடுதிகளிலேயே தங்கி உள்ளனர். போக்குவரத்தும் முடங்கி கிடப்பதால் அவர்களால் வெளியேறவும் முடியவில்லை. இதனால் சுற்றுலாப் பயணிகள் பரிதவித்து காணப்படுகின்றனர்.
கஜா ஆடும் ஆட்டம்
110 கிமீ தூரத்தில் நிலை கொண்டு நிற்கும் கஜா புயல், தன் ஆட்டத்தைக் காட்டிக்கொண்டிருக்கிறது. இதனால் கொடைக்கானலில் மழையும் சூறாவளிக் காற்றும மாறி மாறி வந்துகொண்டிருக்கிறது. வெளியில் இருந்து உள்ளேயும் உள்ளே இருந்து வெளியேயும் வரமுடியாமல் கொடைக்கானல் துண்டிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
சுற்றுலாப் பயணிகளே
இந்த நிலையிலிருந்து சில நாட்களில் கொடைக்கானல் மாறிவிடும் என்றாலும் கொஞ்ச நாளுக்கு கொடைக்கானல் சுற்றுலாவைத் தவிர்ப்பது நல்லது. இந்த நேரத்தில் கொடைக்கானல் சுற்றுலாவுக்கு திட்டமிடுவது அறிவுறுத்தத்தக்கது அல்ல.
எங்கெல்லாம் பாதிப்பு
கொடைக்கானல் நகரம், மேல் மலை மற்றும் கீழ் மலை ஆகிய பகுதிகளில் மிக அதிக மழைப் பொழிவு இருக்கிறது. இங்கு மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதால், தொலைத் தொடர்பும் தடுமாறி வருகிறது. தொடர்பு கொள்ளமுடியாமல் பயணிகள் தவிக்கின்றனர்.
கொடைக்கானல்
இந்த தருணத்தில் கொடைக்கானலுக்கு சுற்றுலா போகமுடியாதுதான். எனினும் கொடைக்கானல் பற்றி ஒரு சில அற்புதங்களைத் தெரிந்து கொள்வோமா..
பெயர்க்காரணம்
கானகத்தின் கொடை" அல்லது "காடுகளின் பரிசு" என்பது கொடைக்கானலின் தமிழ் அர்த்தம் ஆகும். அதேநேரம் கோடை என்ற வார்த்தைக்கு நான்கு அர்த்தங்கள் உள்ளதால், கொடைக்கானல் என்பதற்கு நான்கு விதமான பொருளை எடுத்துக் கொள்ளலாம். அவைகள் "வனத்தின் முடிவு", "படர்க்கொடி அடங்கிய காடு", "கோடைக்காலத்து காடு" மற்றும் "காடுகளின் பரிசு" என்பன.
அடுத்த முறை வரும்போது
இப்போது மழைக் காரணமாக அடுத்து ஒரு வாரம் வரை நீங்கள் கொடைக்கானல் சுற்றுலாவைத் தவிர்ப்பது நல்லது. எனினும் அடுத்த முறை கொடைக்கானலுக்கு நீங்கள் வந்தால், கோக்கர்ஸ் வாக், பியர் ஷோலா நீர்வீழ்ச்சி, பிரையண்ட் பூங்கா, கொடைக்கானல் ஏரி, தற்கொலை முனை, செண்பகனூர் அருங்காட்சியம், கொடைக்கானல் அறிவியல் வானாய்வகம், தூண் பாறைகள், குணா குகைகள், வெள்ளி நீர்வீழ்ச்சி, டால்பின் நோஸ் பாறை, குறிஞ்சி ஆண்டவர் கோயில், பேரிஜம் ஏரி ஆகியவை கொடைக்கானல் வரும்போது நீங்கள் தவறாமல் பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்களாகும்.
தூண்பாறை
கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் தூண்பாறை அமைந்துள்ளது. 400 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த தூண்களின் உச்சியில் இருந்து பார்த்தால் இயற்கை வனப்புடைய நிலங்களைக் கண்டு மகிழலாம். தூண் போன்ற வடிவமைப்பை கொண்டதால் இப்பெயர் பெற்ற இந்தத் தூண்களுக்குள்ள இடுக்குகள் மிகவும் ஆழமானது. எனவே இது மிக ஆபத்தான இடமாக கருதப்படுகிறது.
மழையால் நிரம்பிவரும் ஏரி
இப்போது பெய்து வரும் மழையால், கோடை ஏரி நிரம்பி வருகிறது. இது கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து அரை கி.மீ. தொலைவில், 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோடை ஏரி ஒரு விண்மீனின் வடிவத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் செயற்கை ஏரியாகும். இந்த ஏரியில் படகுப்பயணம் செய்வது ஒரு இனிமையான அனுபவம்.
தடை செய்யப்பட்டுள்ள தற்கொலை முனைப்பகுதி
கோடை ஏரியிலிருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தற்கொலை முனை பள்ளத்தாக்கு 5000 அடி ஆழம் கொண்டது. இந்த தற்கொலை முனையின் உச்சிக்கு படிகள் வழியாக ஏறிச் செல்ல வேண்டும் என்பதுடன், உச்சியிலிருந்து வைகை அணையை முழுவதுமாக கண்டு ரசிக்க முடியும். மழையால் இந்த பகுதிக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. அடுத்தமுறை நீங்கள் இந்த பகுதிக்கு வந்தால் நிச்சயம் தற்கொலை முனையை கண்டு களிக்கவேண்டும்