இயற்கையின் சீற்றத்தால் மண்ணில் இருந்து அழிக்கப்பட்ட, தடயங்கள் மட்டுமே எஞ்சி இருக்கும் மணல் பூமி தான் ராமேஸ்வரம் தீவில் இருக்கும் தனுஷ்கோடி நகரமாகும். இந்திய பேரு நிலப்பரப்பின் முனையாக இருக்கும் இந்த நகரத்தில் இன்று மனிதர்கள் யாரும் வசிப்பதில்லை. ஒரு நாள் இயற்கை ஆடிய கோர தாண்டவம் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு சாட்சியாய் நிற்கும் இந்த நகரத்திற்கு செல்வது ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும். வாருங்கள், திகிலூட்டும் தனுஷ்கோடிக்கு ஒரு பயணம் போய் வரலாம்.
எங்கே அமைந்திருக்கிறது:
ராமேஸ்வரத்தில் இருந்து 20 கி.மீ தொலைவில் இந்நகரம் அமைந்திருக்கிறது. இலங்கையின் தலைமன்னாரில் இருந்து 30 கி.மீ தொலைவில் புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருக்கிறது.
Photo:M.Mutta
வரலாற்று முக்கியத்துவம்:
சீதையை கடத்திக்கொண்டு போய் ராவணன் இலங்கையில் சிறைவைத்திடவே அவரை மீட்க வானர சேனையுடன் ராமன் இலங்கையை அடைய தனுஷ்கோடியில் இருந்து கற்களால் கடலின் மேல் பாலம் அமைத்ததாக கூறப்படுகிறது.
அப்படி ஒரு பாலம் கட்டப்பட்டதை பற்றி இரு வேறு கருத்துக்கள் நிலவினாலும் இலங்கைக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே ஒரு நிலத்தொடர்பு இருந்ததற்கான அடையாளங்களை செயற்கைக்கோள் புகைப்படங்களின் மூலம் நாம் காண முடியும். அதே போல இங்கிருக்கும் ஒருவகை கற்கள் அதிக எடையை தாங்க கூடியதாகவும் அதேசமயம் நீரில் மிதக்கும் தன்மையுடனும் இருக்கின்றன.
Photo:Arunkumarbalakrishnan
கருப்பு டிசம்பர்:
இன்று போல தகவல் தொடர்பு வசதிகள் இல்லாத 1964இல் அதிகம் புயல் உருவாகாத தெற்கு அந்தமான் தீவுக்கு அருகில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது புயலாக உருவாகி மணிக்கு 250-350 கி.மீ வேகத்தில் டிசம்பர் மாதம் 22-23 தேதிகளில் தடுஷ்கொடியை கடந்த போது புயலின் கரங்களில் சிக்கிய எதுவுமே மிஞ்சவில்லை.
அப்போது மெட்ராஸ் எக்மோரில் இருந்து பாம்பன் நோக்கி வந்து கொண்டிருந்த 115 பயணிகள் பயணித்த ரயில் பெரும் அலையால் மூழ்கடிக்கப்பட்டு ரயிலில் இருந்த அதனை உயிர்களையும் பலி வாங்கியது.
Photo:Nitish
கோரத்தாண்டவம்!
அந்த புயலில் மட்டும் ராமேஸ்வரம் தீவில் 1600 பேர் பலியாயினர். அந்த புயலுக்கு பின் தமிழக அரசால் கைவிடப்பட்ட நகரமாக தனுஷ்கோடி அறிவிக்கப்பட்டது. இப்போது சில மீனவ குடுன்ம்பங்களை தவிர யாரும் அங்கே வசிப்பதில்லை.
Photo: Flickr
இன்று!
ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தனுஷ்கோடியையும் பார்க்க வருவதால் ஓரளவு நல்ல சுற்றுலாவுக்கான வசதிகள் செய்யப்பட்டிருகின்றன.
Photo:Nsmohan
சுவடுகள்!
அமைதியான நீர்ப்பரப்பை உடைய வங்காள விரிகுடாவும், சீறிப்பாயும் அலைகளை உடைய இந்தியப்பெருங்கடலும் இங்கே கலப்பதை காண முடியும். அதே போல புயலில் சிதலமடைந்த தனுஷ்கோடி சர்ச் மற்றும் பாம்பன் ரயில் நிலையத்தின் எச்சங்களும் இன்றும் இருக்கின்றன.
Photo:Roberto and Bianca
புதுமையான அனுபவம்!
இவை தவிர அற்புதமான காட்சிகளை உடைய கடற்கரையும் இங்கே உண்டு. புதுமையான ஒரு அனுபவம் வேண்டும் என நினைப்பவர்கள் தனுஷ்கோடிக்கு அவசியம்vara வேண்டும்.
Photo:Ashwin Kumar