தமிழர் பெருமையை உலகறியச் செய்ததில் சோழர்களின் பங்கு மகத்தானது. ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றும் வானுயர்ந்து நிற்கும் கோயில்களே அதற்கு சான்று. சோழர்களின் கட்டிடக்கலை வெளிப்பாட்டின் உச்சமாக சொல்லப்படுவது முதலாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெருவுடையார் கோயிலாகும்.
அதற்கு நிகராக 12ஆம் நூற்றாண்டில் கும்பகோணத்தில் கட்டப்பட்டது தான் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் ஆகும். தமிழகத்தின் மிகச்சிறந்த சுவர்ச் சிற்பங்கள் இருக்கும் கோயில் என்று இதனை சொல்லலாம்.
கோயில் வரலாறு:
ஐராவதேஸ்வரர் கோயில் இரண்டாம் ராஜராஜ சோழன் கட்டியிருக்கிறான். இம்மன்னன் கங்கை கொண்ட சோழபுரத்தை விடுத்து தாராச்சுரத்தை தலைமை இடமாக கொண்டு ஆட்சி செய்ய முடிவெடுத்த பிறகே இக்கோயிலை எழுப்பியிருக்கிறான்.
ஐராவதேஸ்வரர் கோயில் - பெயர் காரணம்:
தேவர்களின் அரசனான இந்திரனின் யானையின் பெயர் ஐராவதம் ஆகும். துர்வாச முனிவரின் சாபத்தினால் தன்னுடைய நிறத்தை இழந்த ஐராவதம் இக்கோயில் குளத்தில் நீராடி சிவபெருமானின் அருளால் சாபம் நீங்கப்பெற்றதாகவும் அதனாலேயே ஐராவதேஸ்வரர் கோயில் என்று இத்திருத்தலம் பெயர்பெற்றதாகவும் சொல்லப்படுகிறது.
சிற்பச் சொர்க்கம்:
தமிழகத்தில் இருக்கும் கோயில்களிலேயே இங்கு தான் அதிகளவிலான நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த சிற்பங்கள் இருக்கின்றன. இங்குள்ள தூண்களிலும், சுவர்களிலும் நாட்டிய முத்திரைகளும், தத்ரூபமான விலங்குகளின் உருவங்களும் தேர் போன்ற கற்சக்கரங்களும் இங்கே ஏராளமாக இருக்கின்றன.
வேறங்கும் காணக்கிடைக்காத சிவனின் ரூபங்கள்:
ஐராவதேஸ்வரர் கோயிலில் வேறந்த கோயிலிலும் காணக்கிடைக்காத சிவபெருமானின் ரூபங்களாய் காணலாம். கிருஷ்ணனை போன்றே குழலூதும் சிவன், காலை மடக்கி ஓய்வாக உட்கார்ந்திருக்கும் சிவன் ஆகிய கோலங்களை நாம் இங்கே காணலாம்.
ராஜ மண்டபம்:
ஐராவதேஸ்வரர் கோயிலின் ராஜ மண்டபம் எனப்படும் மகாமண்டபம் ஒரு பக்கம் இங்கு சாபம் நீங்கப்பெற்ற ஐராவதம் யானையாலும், மறுபக்கம் குதிரைகளாலும் இழுக்கப்படுவது போல கட்டப்பட்டுள்ளது.
இதர சிறப்புகள்:
கையில் வீணையில்லாத சரஸ்வதி, பாம்புகளுக்கு அரசனான நாகராஜன், மூன்றுமுகங்கள் மற்றும் எட்டுக்கைகளுடன் அர்த்தநாரீஸ்வரர், பலி பீடத்தின் அருகே உள்ள இசைப்படிகள், ராஜ மண்டபத்தின் நுழைவு வாயிலில் உள்ள மெல்லிய செருப்பு அணிந்த கண்ணப்ப நாயனாரின் அழகிய சிற்பம் போன்றவை இக்கோயிலின் சிறப்புகள் ஆகும்.