அதிகாலையில் 'டீ' குடித்தால் தான் பலருக்கு அந்த நாள் வண்டியே ஓடும். அப்படி நாம் குடிக்கும் 'டீ' தயாரிப்பில் உலகில் மிகச்சிறந்ததாக புகழப்படுவது மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங் நகரத்தில் தயாராகும் 'டீ' தான். வெறுமனே தேயிலை உற்பத்தி மட்டும் அல்லாது இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் மலைவாசஸ்தல சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது. இயற்கை அழகு கொஞ்சும் டார்ஜிலிங் நகருக்கு அருமையான சுற்றுலா ஒன்று சென்று வரலாம்.
டார்ஜிலிங் - ஹிமாலயன் ரயில்வே:
டார்ஜிலிங் நகரின் முக்கிய சுற்றுலா ஈர்ப்பாக இருப்பது 'பொம்மை ரயில்' என செல்லமாக அழைக்கப்படும் டார்ஜிலிங் - ஹிமாலயன் ரயில்வே தான். மேற்கு வங்காளத்தில் ஜல்பைகுரி நகரத்தில் இருந்து டார்ஜிலிங் வரையிலான 78 கி.மீ தொலைவுக்கு இயக்கப்படும் இந்த ரயில் இந்தியாவில் செயல்பாட்டில் இருக்கும் மிகப்பழமையான ரயில்களில் ஒன்றாகும். 1881ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை தொடர்ந்து இயங்கும் இந்த ரயிலில் பயணிக்கையில் டார்ஜிலிங் நகரின் பேரழகை ரசித்து மகிழலாம்.
வார் மெமோரியல் (போர் நினைவிடம்):
தற்காலத்தில் அமைதி பூமியாக காட்சியளித்தாலும் டார்ஜீலிங் நகரம் போர்கள் நிரம்பிய வரலாற்றுப்பின்னணியை கொண்டிருக்கிறது. இன்றும் கூட கோர்க்காலேண்ட் இயக்கம் அவ்வப்போது வன்முறை சம்பவங்களை இங்கு அரங்கேற்றிவருவதும் குறிப்பிடத்தக்கது.
பனிச்சிகரங்கள் பின்னணியில் எழும்பியிருக்க கம்பீரமாக நிறுவப்பட்டிருக்கும் இந்த போர் நினைவுச்சின்னத்துக்கு சென்று வர செய்ய பயணிகள் மறக்கக்கூடாது. புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த இடத்தில் அற்புதமான புகைப்படங்களை கிளிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
டார்ஜீலிங் நகரத்தில் உள்ள மால் ரோட் எனும் சாலை பயணிகள் விரும்பக்கூடிய எல்லா ஷாப்பிங் அம்சங்களையும் கொண்டுள்ளது. நீங்கள் நன்கு பேரம் பேசி பொருள் வாங்கத் தெரிந்தவர் இங்கு சகாய விலையில் கைநிறைய பொருட்களை வாங்கிச்செல்லலாம்.
உள்ளூர் மக்கள் கேளிக்கையை விரும்பக்கூடியவர்களாக நட்புணர்வு கொண்டவர்களாகவே உள்ளனர். இங்கு முக்கிய இந்திய பண்டிகைகளான துர்க்கா பூஜா, தீபாவளி மற்றும் காளி பூஜா போன்றவை கோலாகலமாக கொண்டாடப்படுகின்றன.
டார்ஜீலிங் நகரத்திற்கு எப்படி செல்வது?:
மேற்கு வங்காள மாநிலத்தின் எல்லா முக்கிய நகரங்களுடனும் டார்ஜீலிங் நகரம் போக்குவரத்து வசதிகளால் இணைக்கப்பட்டிருக்கிறது.மிகப்பிரபலமான மலைவாசஸ்தலம் என்பதால் போக்குவரத்து சிரமம் ஏதும் பயணிகளுக்கு இருக்கப்போவதில்லை. எங்கிருந்து வேண்டுமானாலும் இந்த மலைவாசஸ்தலத்துக்கு சுலபமாக வரமுடியும்.