தேவரகொண்டா கோட்டை நல்கொண்டா மாவட்டத்தில் தேவரகொண்டா எனும் சிறு நகரத்தில் அமைந்துள்ளது. ஏழு மலை சூழ்ந்திருக்கும் ஒரு மலையின்மீது இந்த கோட்டை கட்டப்பட்டிருக்கிறது. 14 ம் நூற்றாண்டில் ரேச்சரல வேலமா அரசர்களால் இந்த கோட்டை கட்டப்பட்டிருக்கிறது. தங்கள் ராஜ்ஜியத்துக்கு வலிமையான கேந்திரமாக இந்த கோட்டையை அவர்கள் நிர்மாணித்துள்ளனர். பல நூற்றாண்டுக்காலம் பராமரிப்பின்றி இன்று இந்த கோட்டை சிதிலமடைந்து காட்சியளிக்கிறது. இந்த கோட்டை ஸ்தலத்தில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபடுவதற்காக தொல்லியல் நிபுணர்கள் இங்கு அதிகம் விஜயம் செய்கின்றனர். இந்த புராதன கோட்டையை காப்பாற்ற மாநில அரசு எந்த முயற்சியும் எடுக்காததால் இப்பகுதி சமூக விரோதிகளின் செயல்பாடுகளால் மேலும் சேதமடைந்துவருகிறது.இந்த கோட்டைக்கு நல்கொண்டா, ஹைதராபாத், ஷீசைலம் மற்றும் நாகார்ஜுன சாகர் ஆகிய நகரங்களிலிருந்து சாலை மார்க்கமாக பயணிக்கலாம்.
இன்று சுற்றுலா அடிப்படையில் பார்க்கும்போது ஆந்திர மாநிலத்தில் ஒரு முக்கிய நகரமாக நல்கொண்டா பிரசித்தி பெற்றுள்ளது. வேறு எந்த தொழில்களையும் பொருளாதார ரீதியாக சார்ந்திராததால் சுற்றுலாத்தொழில் இந்த நகரத்தின் முக்கிய வருவாய் அம்சமாக திகழ்கிறது. மட்டபள்ளி, பில்லலமரி, ராஜீவ் பார்க், பாணிகிரி பௌத்த ஸ்தலங்கள், பனகல் கோயில், நந்திகொண்டா, லதீஃப் ஷேஃப் தர்க்கா, கொல்லன்பாகு ஜெயின் கோயில், ரச்சகொண்டா கோட்டை, மெல்லசெருவு, தேவரகொண்டா மற்றும் புவனகிரி கோட்டை போன்ற முக்கியமான சுற்றுலா அம்சங்கள் இந்த நகரத்தில் இடம் பெற்றுள்ளன. நல்கொண்டாவுக்கு ரயில் மற்றும் சாலைப்போக்குவரத்து மூலமாக பயணம் மேற்கொள்வது சுலபமாகவே உள்ளது. இருப்பினும் இந்த நகரத்தின்வழியே தேசிய நெடுஞ்சாலைகள் ஏதும் செல்லவில்லை.
ரச்சகொண்டா கோட்டை
ரச்சகொண்டா கோட்டைப்பகுதி 14 மற்றும் 15ம் நூற்றாண்டுகளில் இப்பகுதியை ஆண்ட வேலமா அரசர்கள் தலைநகரமாக விளங்கியதாகும். தென்னிந்தியாவிலேயே அதிகம் மதிக்கப்படாத ஒரு ராஜவம்சம் என்றால் அது இந்த வேலமா வம்சமாகத்தான் இருக்க முடியும். இவர்கள் பாமனி முஸ்லிம் அரசர்களோடு கூட்டு சேர்ந்து 'கொண்டவீட்டு ரெட்டி அரசர்'களுடன் அடிக்கடி சண்டையிட்டுக்கொண்டிருந்ததே அதற்கு காரணம்.
வாரங்கல் கப்பய்ய நாயக்கர்களுடனும் இந்த வேலமா அரசர்கள் சண்டையில் ஈடுபட்டு வந்தனர். இப்படிப்பட்ட சூழலில் எதிரிகளின் தாக்குதலை சமாளிக்கும் வகையில் வேலமா அரசர்கள் இந்த ரச்சகொண்டா கோட்டையை கட்டினர். இருப்பினும் முஸ்லிம் அரசர்களின் சதி காரணமாக இவர்கள் செல்வாக்கிழந்து கப்பம் வசூலிக்கும் பாளையக்காரர்கள் போன்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். அதுமட்டுமல்லாமல், இனி ராஜ்ஜியம் ஆளமுடியாது என்ற சாபத்தையும் ஒரு பிராமணரிடமிருந்து அவர்கள் பெற்றுவிட்டனர். இன்றும் அந்த சாபத்தின் காரணமாகத்தான் ரச்சகொண்டா கோட்டை சிதிலமடைந்து கிடப்பதாக மக்கள் நம்புகின்றனர். ஆர்வம் உள்ள பயணிகளும் உள்ளூர் மக்களும் இந்த கோட்டைப்பகுதிக்கு சூரிய அஸ்தமனத்துக்கு முன் விஜயம் செய்கின்றனர்.
நந்திகொண்டா
நல்கொண்டாவுக்கு அருகிலுள்ள முக்கியமான சுற்றுலாத்தலமாக இந்த நந்திகொண்டா பிரசித்தி பெறக்காரணம் இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள பௌத்த ஸ்தலங்களாகும். புத்தவிகாரைகள், கூடங்கள் மற்றும் தூண்களைக்கொண்ட இந்த பௌத்த ஸ்தலங்கள் அகழ்வாராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வரலாற்று ஆர்வலர்கள் அவசியம் விஜயம் செய்யவேண்டிய ஒரு ஸ்தலம் இந்த நந்திகொண்டா ஆகும். பௌத்த அகழ்வாராய்ச்சி ஸ்தலங்கள் தவிர இப்பகுதியில் ஒரு புராதன கோட்டையையும் பயணிகள் காணலாம். இஷவாஹு வம்சத்தினர் கட்டியுள்ள இந்த கோட்டை தற்போது சிதிலமடைந்து காட்சியளிக்கிறது. இப்பகுதியில் ஒரு காலத்தில் கோலோச்சிய இஷவாஹு ராஜபரம்பரையின் மஹோன்னதத்துக்கு சான்றாக இந்த கோட்டை வீற்றிருக்கிறது. இந்த கோட்டையில் இருந்த சில புராதனப்பொருட்கள் தற்போது மத்திய தொல்லியல் துறையின் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்றன.