கேரளாவின் பிரசித்திபெற்ற மலைவாசஸ்தலமான தேவிகுளம், களகளவென்று ஓசையெழுப்பி குன்றுகளின் உச்சியிலிருந்து ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகளும், அவற்றை சூழ்ந்து பச்சை கம்பளம் விரித்தது போல காட்சியளிக்கும் பசும்புல் நிலங்களும் புடைசூழ சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியாக திகழ்ந்து வருகிறது. இந்த அழகிய நகரம் மூணார் மலை பிரதேசத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
தேவிகுளம் மலை பகுதிகளில் காணப்படும் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் குறித்து அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் இங்கு ஏராளமான இயற்கை காதலர்கள் வந்து செல்கின்றனர். அதுமட்டுமல்லாமல் சிவப்பு பசை மரங்கள் நிறைந்த தோட்டங்களின் நடுவே நடைபயணம் செல்லும் அனுபவம் மிகவும் அலாதியானது. தேவிகுளத்தின் முக்கிய சுற்றுலாப் பகுதியான சீதா தேவி ஏரியில் பயனிகள் கூட்டத்தை அதிக அளவில் பார்க்கலாம். இந்த ஏரியில் இராமபிரானின் மனைவி சீதாதேவி நீராடியதாக புராணச் செய்தி கூறுகிறது. மேலும் தேவிகுளம் வரும் பயணிகள் பள்ளிவாசல் அருவி, மூணார் மலை பிரதேசத்துக்கும் சென்று வரலாம். தேவிகுளம் ஆண்டு முழுவதும் இதமான வெப்பநிலையை கொண்டிருப்பதால் நீங்கள் எந்த பருவ காலங்களிலும் இந்த அழகிய மலை பகுதிக்கு சுற்றுலா வரலாம். எனினும் பனிக் காலத்தில் வெப்பநிலை கணிசமாக குறைந்து காணப்படுவதால் கோடை மற்றும் மழைக் காலங்கள் தேவிகுளம் பகுதியை சுற்றிப் பார்க்க சிறந்த பருவங்களாகும்.
தேவிகுளம் வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக தேவிகுளம் ஏரி என்று பிரபலமாக அறியப்படும் சீதா தேவி ஏரியை தவற விட்டுவிடக் கூடாது. இதன் தாதுப் பொருட்கள் நிறைந்த நீரில் நோய் தீர்க்கும் தன்மை உள்ளதாக கருதப்படுகிறது. அதோடு இந்த ஏரிப்பகுதியில் காணப்படும் வெப்ப நீரூற்று தனிமையை விரும்பிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது. சீதா தேவி ஏரி புனிதமாக கருதப்படுவதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது இந்த ஏரியில் இராமபிரானின் மனைவி சீதா தேவி நீராடினார் என்ற புராணச் செய்தியே ஆகும். இங்கு வரும் ஒவ்வொரு பயணியும் இயற்கையின் அற்புதப் படைப்பாய் திகழ்ந்து வரும் இந்த ஏரியின் அழகில் சொக்கிப் போவது நிச்சயம். இந்த ஏரியின் குளிர்ந்த மற்றும் சுத்தமான நீரும், மரங்கள் அடர்ந்த இந்தப் பகுதியில் கேட்கும் பறவைகளின் கீச்சிடும் குரலும் மறக்க முடியாத அனுபவமாக உங்கள் உள்ளங்களில் இன்ப நினைவுகளாய் பதிந்துவிடும்.
தேவிகுளம் பகுதியின் பிரசித்திபெற்ற சுற்றுலாத் தலமான சீதா தேவி ஏரிக்கு வெகு அருகிலேயே பள்ளிவாசல் அருவி அமைந்திருக்கிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களுடைய அலுத்துப் போன நகர வாழ்க்கையிலிருந்து முற்றிலும் வேறான இந்த அருவியின் தனிமையையும், அமைதியையும் வெகுவாக விரும்புகிறார்கள். கேரளாவின் முதல் நீர்மின் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட இடமாக இடுக்கி மாவட்டத்தில் அமைந்திருக்கும் பள்ளிவாசல் கிராமம் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது. இந்த கிராமம் மூணார் மலை பிரதேசத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதால் பள்ளிவாசல் கிராமத்தை சாலை மூலமாக சுலபமாக அடைய முடியும்.
தேவிகுளம் மலை பகுதிகளின் இடுக்கி குன்றுகளில் கடல் மட்டத்திலிருந்து 1700 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் மட்டுப்பெட்டி ஏரி அமைதியான சுற்றுலாத் தலமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஏரியின் குறுக்கே 1940-ஆம் ஆண்டு கட்டப்பட்ட மட்டுப்பெட்டி அணை பிரபலமான சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது. மட்டுப்பெட்டி பகுதி இந்தோ-சுவிஸ் கால்நடை திட்டத்துக்காக பிரசித்தமாக அறியப்படுகிறது. இந்த திட்டத்தின்படி இங்கு 100 வகையான பசுக்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. மட்டுப்பெட்டி ஏரியில் மோட்டார் படகு, ஸ்பீட் மற்றும் பெடல் படகுகளில் பயணம் செய்து சுற்றியுள்ள மலைகளையும், ஸ்பைஸ் தோட்டங்களையும் பார்த்து ரசிக்கும் அனுபவம் மிகவும் அலாதியானது. அதோடு இந்த ஏரியில் எதிரொலிக்கும் பறவைகள் கீச்சிடும் குரல்கள் இன்ப கீதமாய் உங்களுடைய மனதிலும் எதிரொலிக்கும்.எனவே இந்த சுகானுபவத்தை தவற விட்டு விடாதீர்கள்.