தம்தரி நகரம் இந்தியாவிலுள்ள மிகப்பழமையான முனிசிபாலிட்டிகளில் ஒன்றாகும். 1998ம் ஆண்டு ஜூலை 6ம் தேதி இந்த நகரை தலைநகரமாக கொண்டு தனி 'தம்தரி மாவட்டம்' உருவாக்கப்பட்டது. சத்திஸ்ஹர் மாநிலத்தில் செழிப்பான மண்வளம் கொண்ட மாவட்டங்களில் தம்தரி மாவட்டமும் ஒன்றாகும். இதன் வடக்கில் ராய்பூர் மாவட்டம், வடக்கில் கன்கேர் மற்றும் பஸ்தர் மாவட்டங்கள், கிழக்கே ஒரிஸ்ஸா மற்றும் மேற்கே துர்க் மாவட்டம் ஆகியவை எல்லைகளாக அமைந்திருக்கின்றன. மஹாநதி இந்த மாவட்டத்தின் பிரதான ஆறாக ஓடுகிறது. அதன் துணை ஆறுகளான செந்தூர், ஜோவன் மற்றும் கருண் போன்ற ஆறுகளும் இப்பகுதியில் ஓடுகின்றன.
தம்தரி மற்றும் சுற்றியுள்ள சுற்றுலா அம்சங்கள் பல்வேறு உயிரினங்கள் வசிக்கும் இயற்கை வளம் நிரம்பிய வனப்பகுதிகளுடன், ரம்மியமாக காட்சியளிக்கும் இந்த தம்தரி மாவட்டம் பாரம்பரிய நாட்டுப்புற கலையம்சங்களுக்கும் புகழ் பெற்றுள்ளது. சுவாரசியமான சுற்றுலா அம்சங்கள் பலவற்றை இங்கு காணலாம். பிரசித்தமான 'ரவிஷங்கர் அணைக்கட்டு' ஒரு முக்கியமான பிக்னிக் ஸ்தலமாக இங்கு பயணிகளை கவர்கிறது. இந்த அணை கங்க்ரேல் அணை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஸ்தலத்தில் சூரிய அஸ்தமனத்தின் அழகு பார்வையாளர்களால் வெகுவாக ரசிக்கப்படுகிறது.
சத்திஸ்ஹர் மாநிலத்தில் வசிக்கும் மக்கள் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான ரசிகர்கள் இந்த அணைப்பகுதிக்கு வருகை தருகின்றனர்.
மழைக்காலங்களில் இந்த அணையில் நீர் பெருமளவில் சேகரமாகி நீர்வீழ்ச்சி போன்று திறந்துவிடப்படுகிறது. இந்த காட்சியை பார்த்து ரசிப்பதும் ஒரு தனி அனுபவம். இங்குள்ள சீதாநதி காட்டுயிர் சரணாலயம் ஒரு புலிகள் பாதுகாப்பு வனப்பகுதியாகவும் அமைந்திருக்கிறது. சிஹாவா மலைத்தொடர்கள் என்றும் அழைக்கப்படும் சத்புரா மலைகள் இம்மாவட்டத்தின் இயற்கை எழிலை கூட்டும் வகையில் வீற்றிருக்கின்றன. துர்க்காவுக்காக அமைக்கப்பட்டிருக்கும் பிலா மாதா கோயில் இப்பகுதியில் முக்கியமான ஆன்மீக வழிபாட்டுத்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது.
கலை மற்றும் கலாச்சாரப்பாரம்பரியம்!
கலாச்சாரம் மற்றும் கலையம்சங்கள் போன்றவை சார்ந்த விஷயங்களுக்கு இம்மாவட்டத்தில் மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
இயற்கைக்காட்சிகள் நிரம்பிய இந்த பூமியில் பல அற்புதமான கட்டிடக்கலை சின்னங்கள் நிரம்பியுள்ளன. இவை இப்பகுதியின் தொழில் நுட்ப சிறப்பு மற்றும் கலாரசனை போன்றவற்றை பிரதிபலிக்கும் வகையில் காட்சியளிக்கின்றன. விஜயம் செய்ய ஏற்ற பருவம் தம்தரி நகர்ப்பகுதி மற்றும் மாவட்டமானது வெப்ப மண்டல பருவநிலையை பெற்றுள்ளது. கோடைக்காலம், மழைக்காலம் மற்றும் குளிர்காலம் ஆகியவை இங்கு நிலவும் மூன்று முக்கியமான பருவ காலங்களாகும். பொதுவாக குளிர்காலமே இந்த தம்தரி மாவட்டத்துக்கு சுற்றுலா மேற்கொள்ள உகந்ததாக உள்ளது.
எப்படி செல்லலாம்?
ரயில் மற்றும் சாலை மார்க்கமாக சத்திஸ்ஹர் மாநிலத்தின் பிற பகுதிகளுடன் நல்ல முறையில் தம்தரி இணைக்கப்பட்டிருக்கிறது.