ராஜஸ்தான் மாநிலத்தின் 5வது பெரிய நகரமான அஜ்மீர் நகரம் மாநிலத்தலைநகரமான ஜெய்பூரிலிருந்து 135கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது முன்னர் அஜ்மீரே அல்லது அஜய்மேரு என்று அழைக்கப்பட்டிருக்கிறது. இந்த நகரம் ஆரவல்லி மலைத்தொடரால் சூழப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே மிகப்பழமை வாய்ந்த தாராகர் கோட்டை அஜ்மீர் நகருக்கு அரணாக அமைந்துள்ளது.
இந்த ஊரிலுள்ள குறிப்பிட்ட இடத்திற்குதான் நயன்தாரா, வேலைக்காரன் படக்குழுவினருடன் சென்றுவந்துள்ளார். அந்த படம்தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.
அற்புத சுற்றுலாஸ்தலங்களின் ஜொலிப்பு
காஜா மொயின் - உத்- தின் சிஸ்தி எனும் புகழ்பெற்ற சூஃபி ஞானியின் சமாதிஸ்தலமான தர்கா ஷரீஃப் இங்கு அமைந்துள்ளது. தாராகர் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த தர்க்கா ஷரீப் எனும் ஆன்மீகத்தலம் எல்லா மதத்தினராலும் விஜயம் செய்யப்படுகிறது.
Trueajmer
அணா சாகர் ஏரி
அணா சாகர் ஏரி என்றழைக்கப்படும் செயற்கை ஏரி இந்நகரின் வட பகுதியில் அமைந்துள்ளது. பேரரசர் ஷாஜஹான் கட்டிய பர்தாரி என்றழைக்கப்படும் மண்டப அமைப்புகள் இந்த ஏரிக்கு இன்னும் அழகு சேர்க்கின்றன. அணா சாகர் ஏரி சுற்றுலாப்பயணிகளுக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் பிடித்தமான சிற்றுலாத்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது.
Logawi
அஜ்மீர் மியூசியம்
பேரரசர் அஜ்மீருக்கு விஜயம் செய்யும்போது தங்குமிடமாக பயன்பட்ட அரண்மனையானது தற்போது அஜ்மீர் மியூசியம் என்றழைக்கப்படுகிறது. இந்த மியூசியத்தில் 6ம் நூற்றாண்டு மற்றும் 7ம் நூற்றாண்டைச்சேர்ந்த ஹிந்துக்கடவுளர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. முகலாயர்கால சிற்பங்கள் மற்றும் ராஜபுதன முகலாய வம்சங்களைச்சேர்ந்த கவச உடைகள் போன்றவையும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
AdityaVijayavargia
அதய் தின் கா ஜோப்ரா
இரண்டரை நாட்களில் கட்டி முடிக்கப்பட்டதாக சொல்லப்படும் அதய் தின் கா ஜோப்ரா எனும் மசூதி ஒன்றும் இந்தோ இஸ்லாமிய கட்டிடக்கலை மேன்மைக்கான உதாரணமாக இங்கு அமைந்துள்ளது.
Varun Shiv Kapur
நரேலி ஜெயின் கோயில்
நசியான்(சிவப்பு) கோயில், நிம்பர்க் பீடம் மற்றும் நரேலி ஜெயின் கோயில் போன்றவை இங்குள்ள இதர முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும். அஜ்மீரில் ராஜபுதன வம்சத்தினருக்காக உருவாக்கப்பட்டுள்ள மேயோ கல்லூரி நாட்டிலேயே சிறந்த கல்விநிலையமாக புகழ்பெற்றுள்ளது.
Jgnsonir
புஷ்கர் ஏரி
அஜ்மீர் நகரம் புனித யாத்ரீகத்தலமான புஷ்கர் ஸ்தலத்துக்கான நுழைவாயிலாகவும் திகழ்கிறது. இங்கிருந்து 11 கி.மீ தூரத்தில் புஷ்கர் ஸ்தலம் அமைந்துள்ளது. புஷ்கர் ஏரி மற்றும் ஒரு பிரம்மா கோயிலுக்கு புகழ் பெற்று விளங்கும் புஷ்கர் ஸ்தலத்துக்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் விஜயம் செய்வது குறிப்பிடத்தக்கது.
anurag agnihotri
ராணி மஹால், அஜ்மீர்
தாராகர் கோட்டை வளாகத்தின் உள்ளே அமைந்திருக்கும் இந்த ராணி மஹால் அஜ்மீர் மன்னர்களால் தங்கள் ராணிமார்கள், ஆசைநாயகிகள், மற்றும் ஆசைநாயகர்கள் போன்றோர் வசிப்பதற்காக கட்டப்பட்டிருக்கிறது. இதன் மைய மண்டபம் தேய்ந்துபோன சுவரோவியங்கள் மற்றும் உடைந்து போன வண்ணக்கண்ணாடி ஜன்னல்கள் போன்ற ராஜஸ்தானிய அலங்காரக் கலை அம்சங்களைக் கொண்டுள்ளது. சுற்றிலுமுள்ள ஆரவல்லி மலைத்தொடரின் அழகு மற்றும் கோட்டையை சூழ்ந்துள்ள எழில்பள்ளத்தாக்கு ஆகியவற்றை இந்த ராணி மஹால் மாளிகையிலிருந்து நன்றாக பார்த்து ரசிக்க முடிகிறது.
சோலா கம்பா, அஜ்மீர்
சோலா கம்பா எனும் இந்த நினைவு மண்டபத்துக்கு அதன் கூரையைத்தாங்கும் 16 தூண்களின் காரணமாக அப்பெயர் வந்துள்ளது. இது ஔரங்கசீப் மன்னரின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டுள்ளது. தர்க்க ஷெரீப் சமாதிக்கு வெளியிலேயே உள்ள இது ‘ஷேய்க் ஆலா அல் தின்' சமாதி என்றும் அறியப்பட்டுள்ளது. காஜா மொயின் - உத்- தின் சிஸ்தி தர்க்காவை நிர்வகித்த ஒரு ஞானியால் 4 வருடங்களில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
Varun Shiv Kapur
நாசியான் கோயில், அஜ்மீர்
நாசியான் கோயில் அல்லது லால் மந்திர் (சிவப்பு கோயில்) என்று அழைக்கப்படும் இது 1865ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. அஜ்மீரிலுள்ள பிரித்வி ராஜ் மார்க் எனும் இடத்தில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. முதலாம் ஜைன தீர்த்தங்கரரான ஆதிநாதருக்காக இரண்டு அடுக்குகளைக் கொண்ட இந்தக் கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் கர்ப்பக்கிருக அமைப்பு இதன் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு பிரிவில் ஆதிநாதர் சிலை மற்றும் வழிப்பாட்டுக்கூடமும் மற்றொரு பிரிவில் ஒரு அருங்காட்சியகமும் உள்ளது.
இதில் உள்ள அருங்காட்சியகத்தின் சுவர்கள் தங்கத்தால் பூசப்பட்டுள்ளன. ஆதிநாதர் வாழ்க்கை வரலாறான பஞ்ச கல்யாணக் எனப்படும் ஐந்து காலகட்டங்கள் இந்த சுவரில் பொறிக்கப்பட்டுள்ளன. 3200 சதுர அடி பரப்பளவைக்கொண்டுள்ள இது பெல்ஜியம் வண்ணக்கண்ணாடிகள், தாதுவண்ண ஓவியங்கள் மற்றும் வண்ணக்கண்ணாடி வேலைகளைக்கொண்டுள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி வேலைப்பாடுகளைக் கொண்டிருக்குமமொரு மைய மண்டபத்தைக்கொண்டுள்ள இந்தக்கோயில் தங்கக்கோயில் (ஸ்வர்ண மந்திர்) என்றும் அழைக்கப்படுகிறது. தங்க முலாம் பூசப்பட்ட மர வேலைப்பாடுகள், கண்ணாடி வண்ண ஓவிய அலங்காரங்கள் போன்ற கலையம்சங்களை இந்த கோயிலில் காணலாம்.
விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் தங்கம், வெள்ளி ஆகியவற்றால் ஆன வேலைப்பாடுகளை கொண்டிருப்பதால் ‘சோனி ஜி கி சையான்' என்றும் இந்தக்கோயில் பிரசித்தமாக அழைக்கப்படுகிறது.
Ramesh Lalwani
தௌலத் கானா, அஜ்மீர்
தௌலத் கானா என்பது நீள்சதுர வடிவில் அமைந்துள்ள ஒரு அரண்மனையாகும். இது தற்சமயம் ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு முகலாய மற்றும் ராஜபுதன போர்க்கவசங்கள் மற்றும் கலையம்சம் கொண்ட சிலைகள் ஆகியன காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 1613ம் ஆண்டிலிருந்து 1616ம் ஆண்டு வரை இந்த அரண்மனை முகலாய பேரரசர்களான அக்பர் மற்றும் ஜஹாங்கீர் ஆகிய இருவரும் தர்க்கா ஷெரீஃப் ஸ்தலத்திற்கு விஜயம் செய்யும்போது தங்கும் இருப்பிடமாக பயன்பட்டுள்ளது.
இரண்டு கனமான சுவர்களால் சூழப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்துக்கு வெளியே, " ஆங்கிலேய தூதரான சர் தாமஸ் ரோ இந்த இடத்தில் பேரரசரால் வரவேற்கப்பட்டார்" எனும் வாசகம் எழுதப்பட்ட பலகை ஒன்று காணப்படுகிறது. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தெய்வச்சிலைகள் மற்றும் முகலாய, ராஜபுதன போர்க்கவச உடைகள் ஆகியன இங்குள்ள முக்கிய அரும்பொருள் சேகரிப்புகளாகும். இந்த மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு காளி தேவி சிலையும் முக்கிய அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது.
1908ம் ஆண்டில் கர்சன் பிரபு மற்றும் சர் ஜான் மார்ஷல் ஆகியோரின் முயற்சியில் உருவான இந்த அருங்காட்சியகம் ‘மேகசின்' என்ற பெயராலும் அறியப்படுகிறது. புஷ்கர், அதான் தின் கா ஜோப்ரா, பாஹேரா, பிசாங்கன், ஹர்ஷ்நாத்(சிகார்), பரத்பூர், சிரோஹி, அர்துனா மற்றும் ஓசியன் போன்ற தலங்களைப்பற்றிய அரிய பிரதிகள் இங்கு சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. இண்டஸ் பள்ளத்தாக்கில் மொகஞ்ச-தாரோ ஸ்தலத்தில் கண்டெடுக்கப்பட்ட வரலாற்றுக்காலத்துக்கு முந்தைய அரும்பொருட்கள், உலோக வார்ப்புகள் மற்றும் அது தொடர்பான அரிய புகைப்படங்கள் ஆகியவையும் இங்கு பாதுகாக்கப்படுகின்றன.
இந்த மியூசியம் காலை 10 மணி முதல் மாலை 4.30 வரை திறந்துள்ளது. வெள்ளிக்கிழமைய வார விடுமுறை நாளாகும். அரசு விடுமுறை நாட்களிலும் இது மூடியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நுழைவுக்கட்டணமாக இந்திய பயணிகளுக்கு 5 ரூபாயும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு 10 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.
எப்படி செல்லலாம்?
அஜ்மீர் நகரை விமானம், ரயில் மற்றும் சாலை மார்க்கமாக எளிதில் சென்றடையலாம்.
விமான மார்க்கமாக:
அஜ்மீர் நகரத்திலிருந்து 132கி.மீ தூரத்தில் ஜெய்பூரிலுள்ள சங்கனேர் விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து டாக்சிகள் மூலம் அஜ்மீர் நகரத்துக்கு வருகை தரலாம். இது டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மற்றும் மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான போன்ற முக்கிய விமானத்தளங்களுக்கு தினசரி விமான சேவைகளைக்கொண்டுள்ளது.
ரயில் மூலமாக:
அஜ்மீர் ரயில் சந்திப்பு ராஜஸ்தான் மாநிலத்தின் பிரதான ரயில் சந்திப்பாக அமைந்துள்ளது. எனவே அஜ்மீர் ரயில் நிலையத்துக்கு முக்கிய இந்திய நகரங்களிலிருந்து தினசரி ரயில் சேவைகள் உள்ளன.
சாலை மார்க்கமாக:
அஜ்மீர் நகரம் தேசிய தங்கநாற்கர சாலை இணைப்பில் ஒரு தேசிய நெடுஞ்சாலை 8ன் பாதையில் டெல்லிக்கும் மும்பைக்கும் இடையில் அமைந்துள்ளது. இது தவிர ராஜஸ்தான் மாநிலத்தின் முக்கிய நகரங்களான ஜெய்பூர், ஜோத்பூர், ஜெய்சல்மேர், உதய்பூர் மற்றும் பரத்பூர் போன்ற முக்கிய நகரங்களுடனும் அஜ்மீர் நகரம் நல்ல சாலை இணைப்புகளைக் கொண்டுள்ளது. மாநில அரசுப்போக்குவரத்து பேருந்துகள் மட்டுமல்லாமல் தனியார் பேருந்துகளுடன் முக்கிய நகரங்களிலிருந்து அஜ்மீர் நகரத்துக்கு இயக்கப்படுகின்றன.
பயணம் மேற்கொள்ள சிறந்த காலம்
அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான இடைப்பட்ட காலம் அஜ்மீர் நகரத்துக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ள உகந்த பருவமாக கருதப்படுகிறது. இக்காலத்தில் பருவநிலை குளுமையுடனும் ஈரப்பதம் இல்லாமலும் காணப்படுகிறது. மேலும், மழைக்காலத்தில் நகரம் பொலிவுடன் காட்சியளிப்பதால் மழைக்காலத்திலும் இங்கு பயணம் மேற்கொள்ளலாம். கடும் வெப்பம் தகிக்கும் கோடைக்காலத்தில் அஜ்மீருக்கு பயணம் செய்வது தவிர்க்க வேண்டிய ஒன்றாகும்.