கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயில் உலகப்பிரசித்தி பெற்ற ஒரு முக்கிய ஸ்தலமாகும். ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சுவாமி தரிசனம் வழக்கமாகும். சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் உள்ள சிலை கோவில் உருவான போது வைக்கப்பட்ட சிலை இல்லையாம். சாஸ்தாவின் சிலையும், கோவிலும் முற்றிலும் சிதிலமடைந்து விட்டதாம்! சிலையும் கோவிலும் முற்றிலும் பின்பு தயார் செய்து வைக்கப்பட்டது என்று உங்களுக்கு தெரியுமா? அதைப் பற்றிய முழு தகவல்களும் இதோ!
ஹரிஹரன் மைந்தன் ஐயப்பன்
மகிஷியை வதம் செய்ய ஹரியும் ஹரனும் சேர்ந்து படைத்த சக்தியான சுவாமி ஐயப்பன் வரலாறு நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. பந்தள மகாராஜாவின் மனைவி சூழ்ச்சியரிந்து காட்டிற்கு சென்ற ஐயப்பன் மகிஷியை வதம் செய்ததோடு, தன் தந்தையின் விருப்பத்தினால் சபரி மலையில் குடிகொண்டிருக்கிறார். சக்தியின் ஸ்வரூபான சுவாமி ஐயப்பன் நித்திய பிரம்மச்சரிய விரதத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
பரசுராமன் எழுப்பிய படிகள் மற்றும் சிலை
பகவான் பரசுராமர் இந்த உலகில் ஐந்து கோவில்களை எழுப்பியுள்ளதாக சான்றுகள் கூறுகின்றன. அந்த ஐந்தில் ஒன்று தான் சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில். அந்த பதினெட்டு படிகளையும், மூலஸ்தானத்தில் வைக்கப்பட்ட ஐயப்பன் விக்கிரகத்தையும் பரசுராமரே தன் திருக்கரங்களால் உருவாக்கியுள்ளார். இந்த உலகத்தின் எவ்வளவு பெரிய அந்தஸ்து கொண்ட மனிதராக இருந்தாலும் இருமுடி இல்லாமல் பதினெட்டு படிகளை மிதிக்க எவருக்கும் அனுமதிக்கப்பட மாட்டாது.
1950 களில் உடைக்கப்பட்ட ஐயப்பன் சிலை
1950 ஆம் ஆண்டு வழக்கம் போல மாதாந்திர பூஜைக்கு பிறகு மே 20 ஆம் தேதி நடை சாற்றப்பட்டது. அடுத்த மாதாந்திர பூஜைக்காக ஜூன் 16 ஆம் தேதி கோவில் திறக்கப்பட்ட போது, அனைவரும் மிகப்பெரிய பேரதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். ஆம், சபரிமலை கோவில் முழுவதும் எரிந்து நாசமாகி கிடந்ததாம். மூலஸ்தானமும் அழிக்கப்பட்டு உள்ளே உள்ள சுவாமி ஐயப்பன் சிலை தூள் தூளாக நொறுக்கப்பட்டு கிடந்ததாம். சமூக விரோதிகளால் ஐயப்பன் கோவில் தரைமட்டமாக்கப்பட்டது என்று பின்னர் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த கொடுமையை எப்படி விவரிப்பது மக்களே?
தமிழரால் செய்யப்பட்ட ஐயப்பன் விக்கிரகம்
கோவிளும் சிலையும் அழிக்கப்பட்ட பின்னர், கோவிலை மறு சீரமைத்தனர். தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டு, மறைந்த முன்னாள் சபாநாயகர் பழனிவேல்ராஜனின் தந்தை பி.டி.ராஜன் தமிழகத்தில் சிலை வடிவமைக்க செய்துள்ளார். கும்பகோணம் அருக உள்ள சுவாமி மலையை சார்ந்த சிற்பக்கலைஞரான ராமசாமி ஸ்தபதி வடித்து தந்த ஐயப்பன் சிலைதான் இப்போது வழிபாட்டில் உள்ள சிலையாகும். பரசுராமர் வடிவமைத்த சிலையின் துகள்கள் ஒன்றாக்கப்பட்டு கோவில் மணியாக கொடிமரம் அருகே காட்சி தருகிறது.
கடினமான யாத்திரை
மாலை அணிந்து தீவிரமாக விரதமிருப்பதே இந்த யாத்திரை எதிர்கொள்வதற்காகத்தான் என்று புராணங்கள் கூறுகின்றன. ஆம்! சபரிமலைக்கு மாலையிட்டு இருக்கும்போது அணியக்கூடாது, வெறுங்காலில் தான் நடக்க வேண்டும், குளிர்ந்த நீரில் இரு வேலையும் குளிக்க வேண்டும், வெறும் தரையில் தான் உறங்க வேண்டும், காய்கறிகள் தான் சாப்பிட வேண்டும். அனால் இவையனைத்தும் சபரிமலைக்கு செல்வதற்கான ஒரு ஒத்திகையே!
அற்புதம் நிறைந்த கார்த்திகை மாதம்
கார்த்திகை மாதத்தில் ஐயப்பனுக்கு மாலையணிந்து விரதமிருந்து சபரிமலைக்கு சென்று தர்ம சாஸ்தாவை தரிசனம் செய்வது தான் விசேஷம். கார்த்திகை மாதத்தில் தினந்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் சபரிமலைக்கு வந்து தரிசனம் செய்வார்கள். மண்டல பூஜை மற்றும் மகர விளக்கையொட்டி தொடர்ந்து 48 நாட்களுக்கு சபரிமலை நடை திறக்கப்பட்டிருக்கும். ஆனால் நீங்கள் மற்ற மாதங்களிலும் சபரிமலைக்கு சென்று அய்யன் ஐயப்பனை தரிசனம் செய்யலாம்!
2023 இல் இந்த தேதிகளில் சபரிமலைக்கு செல்லுங்கள்
ஆம், 2023 ஆம் ஆண்டில் ஜனவரி 14 ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடத்தப்பட்டு ஜனவரி 20 அன்று நடை சாற்றப்படும். பின்னர், பிப்ரவரி 12 முதல் 17, மார்ச் 14 முதல் 19, ஏப்ரல் 11 முதல் 19, மே 14 முதல் 19, ஜூன் 15 முதல் 2௦, ஜூலை 16 முதல் 21, ஆகஸ்ட் 16 முதல் 21 மற்றும் 27 முதல் 31, செப்டம்பர் 17 முதல் 22, அக்டோபர் 17 முதல் 22, நவம்பர் 16 முதல் 27 வரை திறந்து இருக்கும். மறுபடியும் டிசம்பர் 27 ஆம் தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்படும்.
சபரிமலை தரிசனத்துக்குச் செல்லும் பக்தர்கள் அனைவருக்கும் முன் பதிவு செய்வது அவசியம். https://sabarimalaonline.org/#/login என்ற இணையத்தளத்தில் நீங்கள் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் செய்ய வேண்டும்.