நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி வந்ததிலிருந்தே, புதிய இந்தியா பிறக்கவுள்ளதாக கூறி பல அதிரடி திட்டங்களை அவசரமாக கொண்டுவந்துகொண்டிருக்கின்றனர். அதன்படி, இந்தியாவில் முதன்முறையாக 200 மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
முன்னதாக நவம்பர் 8, 2016 இல் ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாததாக அறிவிக்கப்பட்டு, பின் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுக்கள் கொண்டுவரப்பட்டன. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மிகக்கடுமையான பணப்புழக்கத் தட்டுப்பாடு நிலவியது.
இதன் காரணமாக, 200 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டு, அறிமுகப்படுத்தப்பட்டது. அதோடு, 50 ரூபாய் நோட்டுக்களும் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டன. இதற்கு முன்பாக அறிமுகப்படுத்தப்பட்ட 500 ரூபாய் நோட்டில் டெல்லி செங்கோட்டையும், 2000 ரூபாய் நோட்டில் மங்கள்யான் விண்கலம் படமும், 200 ரூபாய் நோட்டில் சஞ்சி ஸ்தூபியும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், 50 ரூபாய் நோட்டில் இருக்கும் படம் எதனுடையது என்று பலருக்கு தெரிந்திருக்கவில்லை. அது ஒரு வரலாற்று சிறப்புமிக்க இடம். அதுகுறித்து பார்க்கலாம் வாருங்கள்.
50 ரூபாய் நோட்டில் இடம்பெற்றிருக்கும் இடம்
50 ரூபாய் நோட்டில் இடம்பெற்றிருக்கும் இடம் கருநாடக மாநிலத்தில் உள்ள உலக சிறப்பு பெற்ற ஹம்பி ஆகும். இது வரலாற்று சிறப்புமிக்க பகுதி. வரலாற்று ஆர்வமுடைய சுற்றுலாப் பயணிகள் பலர் வந்து குவியும் சுற்றுலாத் தளமாகும்.
ஹம்பி
ஹம்பி என்றாலே அதன் பிரசித்தி பெற்ற விஜய நகரின் சிதிலமடைந்த வரலாற்று சின்னங்களும், அதை சுற்றிலும் விரிந்து கிடக்கும் நகரின் கட்டிடக்கலை அம்சங்களும் தான் நினைவுக்கு வரும். விஜயநகர சாம்ராஜயத்தின் தலைநகராக விளங்கி, ஹொய்சள கட்டிடக்கலை பாணியின் அழகை பறைசாற்றிக் கொண்டிருக்கும் இந்த ஹம்பி அல்லது விஜயநகர் என்று அழைக்கப்படும் சுற்றுலா ஸ்தலத்தை பொன்கற்களில் எழுதிய கவிதை என்றாலும் மிகையாகாது. அதற்கான காரணங்களை பின்வரும் பதிவுகளில் தெரிந்துகொள்ளுங்கள்.
Hawinprinto
தொன்மை
ஹம்பி தொன்மை வாய்ந்த நகரமாக விளங்குகிறது. இது புராண காலத்திலேயே ராமாயண காவியத்தில் கிஷ்கிந்தா என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், 13ம் நூற்றாண்டு மற்றும் 14 ம் நூற்றாண்டுகளில் இது விஜய நகர அரசர்களின் தலைநகரமாக சிறந்து விளங்கியது.
Srikar.agnihotram
எங்குள்ளது
கர்நாடக மாநிலத்தின் வடபகுதியில் பெங்களூரிலிருந்து 350 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள ஹம்பியை சில மணி நேர பயணத்தில் அடைந்திடலாம். யுனெஸ்கோ அமைப்பினால் சர்வதேச பண்பாட்டு மையமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஸ்தலம் வருடம் தோறும் லட்சக்கணக்கான யாத்ரீகர்களை ஈர்க்கின்றது.
IM3847
ஹம்பியை சுற்றிப்பார்க்க சைக்கிள் பயணம்
ஹம்பி இடுபாடுகளின் உன்னதத்தை முழுக்க ரசிக்க விரும்பினால் ஒரு வாடகை சைக்கிளில் ஓய்வாக ஹம்பியை சுற்றி வந்து பார்த்து ரசிக்கலாம். அதற்கு வசதியாக சைக்கிள்களும் மொபெட்களும் வாடகைக்கு கிடைக்கின்றன. பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இந்த சைக்கிளில் சுற்றிப் பார்க்கும் அனுபவத்தினை விரும்புகின்றனர். போதும் போதும் எனும் அளவுக்கு நம் கண்களுக்கு திகட்டாத ஒரு விருந்தை ஹம்பியின் வரலாற்று இடிபாடுகள் அளிக்கின்றன.
ShivaRajvanshi
ஏன் சுற்றுலா பயணிகள் ஹம்பியில் குவிகின்றனர்?
ஹம்பியிலுள்ள வரலாற்று இடிபாடுகளின் கட்டிடக்கலை அம்சங்களுக்காக மட்டுமின்றி அதன் ஆன்மீக வரலாற்று பின்னணிக்காகவும் ஹம்பி புகழ் பெற்று விளங்குகிறது. இங்கு பல பிரசித்தி பெற்ற கோயில்களும் உள்ளன. விருபாக்ஷா ஆலயம் விட்டலா ஆலயம் மற்றும் ஆஞ்சனேயத்ரி போன்ற கோயில்கள் இங்கு உள்ளன. கர்நாடகாவின் முக்கிய ஆறுகளில் ஒன்றான துங்கபத்திரா இந்த நகரின் வழியே ஓடுகிறது. இடிபாடுகளும் அதன் பின்னணியில் துங்கபத்திரை ஆற்றின் அழகும் சேர்ந்து இந்த பிரதேசத்தின் இயற்கை எழில் நம்மை பிரமிக்க வைக்கிறது.
விஜயநகர பேரரசின் கட்டடக்கலை
ஹம்பி பிரதேசத்தை சுற்றிலும் காணப்படும் மலைகளிலிருந்தே விஜயநகர மன்னர்கள் தாங்கள் எழுப்பியுள்ள கோயில்களின் சிற்ப வேலைப்பாடு கொண்ட கல் தூண்களுக்கான பாறைகளை பெற்றுள்ளனர் என்பதை நம்மால் கண்கூடாக காண முடிகிறது. இங்குள்ள நந்தி சிலையின் பின்னால் காணப்படும் பிரம்மாண்ட பாறைகளுக்கும் பாறையினால் ஆன அந்த சிலைக்கும் உள்ள தொடர்பை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது.
Tania Dey
நகர மேலாண்மை
இயற்கை அழகு மற்றும் கோயில்கள் மட்டும் அல்லாமல் ஹம்பியில் அழகாக கட்டப்பட்டுள்ள பல தடாகங்களும் சமுதாய கட்டிடங்களும் அன்றைய விஜயநகர அரசின் ஆட்சி மேன்மைக்கும் நகர மேலாண்மை அறிவுக்கும் சான்றாய் விளங்குகின்றன. இங்கு காணப்படும் நிலத்தடி தண்ணீர் பாதைகளும் மற்றும் கால்வாய்களும் 13ம் மற்றும் 15ம் நூற்றாண்டு காலத்திலேயே எந்த அளவுக்கு நம் மக்கள் நீர் மேலாண்மை தொழில் நுட்பத்தில் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பதற்கான சாட்சியமாய் விளங்குகின்றன.
Dey.sandip
பாறைச்சிற்பங்கள்
ஹம்பியில் 500 க்கு மேற்பட்ட இடங்கள் நாம் பார்த்து ரசிப்பதற்கு உள்ளன. இவற்றில் 100 இடங்கள் ஆயிரக்கணக்கான பயணிகளை வருடம் தோறும் ஈர்க்கும் அளவுக்கு மிகுந்த பிரசித்தி பெற்றவை ஆகும். விட்டலா ஆலயத்தில் உள்ள கல் தேர் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பாறைச்சிற்ப வேலைப்பாட்டிற்கு ஒரு தலைசிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்த கல் தேர் சிற்பமே கர்நாடக மாநில அரசாங்கத்தின் சுற்றுலாத்துறை சின்னமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tania Dey
அகழ்வாராய்ச்சி
இன்றும் ஹம்பி ஸ்தலத்தில் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் பல விதமான சரித்திர கலைப்பொருட்கள் தொடர்ந்து கிடைத்தவாறே உள்ளன என்பது ஒரு வியப்பான விஷயம். இப்படி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள் மற்றும் வரலாற்று சின்னங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள தொல்பொருள் அருங்காட்சியகமும் சுற்றுலா பயணிகள் தவறாமல் பார்க்க வேண்டிய இடமாகும்.
Dharani.prakash
பாதுகாப்பு அரண்
ஒரு புறத்தில் துங்கபத்திரை நதியாலும் மற்ற மூன்று பகுதிகளிலும் மலைகளாலும் சூழப்பட்டு இயற்கையான அரணுடன் விளங்கிய இந்த ஹம்பி அல்லது விஜயநகரத்தினை அப்போதைய மன்னர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காகவே விவேகத்துடன் தங்கள் தலைநகராக கொண்டிருந்தனர் என்பது புலனாகிறது.
LennartPoettering
சுற்றுலாப் பயணிகள் தவறவிடக்கூடாதது
எப்படியும் எதிரிகளுக்கு விஜயநகரை தாக்குவது என்பது சற்று சிரமமான ஒன்றாகத்தான் இருந்திருக்க முடியும். அப்படிப்பட்ட அந்த விஜய நகரம் இன்று சுற்றுலா பயணிகளுக்கு இயற்கை வனப்பையும் தொல்லியல் வளத்தையும் கண்களுக்கு விருந்தாக அளிக்கின்றது. ஹொய்சள வம்ச கட்டிடக்கலையின் சிகரமாக விளங்கும் இந்த ஸ்தலம் தென்னிந்தியாவுக்கு வருகை தரும் எந்த ஒரு சுற்றுலா பயணியும் தவற விடக்கூடாத ஒன்று என்றால் அது மிகையில்லை.
Hawinprinto
ஆனேகோண்டி
ஆனேகுண்டி என்ற கிராமம் ஹம்பியிலிருந்து 10 கி.மீ தொலைவில் துங்கபத்திரை நதியின் வடக்கு கரையில் அமைந்துள்ளது. அக்காலத்தில் விஜய நகர சாம்ராஜ்யத்தின் உள்ளூர் தலைநகரமாக திகழ்ந்திருக்கிறது. ஆனேகுண்டி எனும் பெயருக்கு கன்னடத்தில் யானைக்குழி என்பது பொருள். இந்த ஊர் ஹம்பியை விடவும் பழமை வாய்ந்த ஊர் என்பதற்கு புராண ஆதாரங்கள் உள்ளன.
:Indiancorrector
ராமாயணம்
ராமாயண காவியத்தின் படி சுக்ரீவன் என்ற வானர அரசனால் ஆளப்பட்ட கிஷ்கிந்தா எனும் சாம்ராஜ்யமாக இது திகழ்ந்தது என்று நம்பப்படுகிறது. இங்கு ஹனுமான் பிறந்த இடமாக நம்பப்படும் அஞ்சநாத்ரி மலை உள்ளது. பயணிகள் இந்த ஆனேகுண்டி ஸ்தலத்தை பார்ப்பதற்கென்று முன்கூட்டி திட்டமிட்டுக் கொள்வது அவசியம்.
Indiancorrector
அமைதியான சூழல்
சந்தடி நிறைந்த ஹம்பி கடைத்தெருக்களை போல் அல்லாது இந்த ஆனேகுண்டி கிராமம் சலனமற்ற அமைதியான சூழலுடன் காட்சியளிக்கிறது. தற்சமயம் துங்கபத்திரை ஆற்றின் குறுக்கே இருக்கும் புதிய பாலம் பயணிகள் ஆனேகுண்டி பகுதிக்கு செல்வதற்கான சௌகரியத்தை இன்னும் மேம்படுத்தும்.
மேலும், ஆனேகுண்டி பகுதிக்கு வரும் பயணிகள் இங்குள்ள ஷீ கவி ரங்கநாத் பஹவான் ஆலயம், கணேஷ் கோயில், சிந்தாமணி சிவபெருமான் கோயில், ஹுச்சையப்பனா மடம் மற்றும் ஒரு ஜைன கோயில் போன்றவற்றையும் பார்த்து மகிழலாம்.
Indiancorrector
அஞ்சநாத்ரி மலைகள்
ராமாயாண புராணத்தின் படி பார்த்தால் இந்த அஞ்சநாத்ரி மலை ஹனுமான் பிறந்த இடம் என்று நம்பப்படுகிறது. வானரக் கடவுளான ஹனுமானுக்கென்று இங்கு ஒரு அழகான கோயில் உள்ளது. இந்த கோயில் அஞ்சநாத்ரி மலையின் உச்சியில் உள்ளது. 570 படிகளை ஏறித்தான் மலை உச்சியில் உள்ள இந்த கோயிலுக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த படிகளில் ஏறிச்செல்லும் போது ஏராளமான குரங்குகளை வழியில் பார்க்க முடிகிறது. நாம் அவற்றுக்கு தொல்லை தராதபோது அவை நம்மை தொல்லைப் படுத்துவதில்லை. ஹனுமான் பக்தர்கள் தவறாமல் தரிசிக்க வேண்டிய இடம் இந்த அஞ்சநாத்ரி மலைக்கோயில் ஆகும்.
Indiancorrector
தண்ணீர்ப்பாதைகளும் கால்வாய்களும்
அரண்மனைகள், கோயில்கள், நீர் தடாகங்கள் மற்றும் விவசாய நிலங்கள் போன்றவற்றின் நீர் தேவைக்காக ஹம்பி பகுதியில் பல கால்வாய்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ராயா கால்வாய் (ராஜ வாய்க்கால்) துர்த்து கால்வாய் (விரைவு வாய்க்கால்), கமாலபுரம் குளம், பசவன்னா கால்வாய் போன்றவை விஜயநகர மன்னர்களால் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில கால்வாய்கள் குறிப்பாக பள்ளத்தாக்கு பகுதியில் ஓடும் கால்வாய்கள் இன்றும் விவசாய பாசனத்துக்கு பயன்படுகின்றன
எண்ணற்ற நீர்வழிப்பாதைகள் பாறைகளால் அமைக்கப்பட்டு அரண்மனையின் பல பகுதிகளையும் இணைத்திருப்பதை நாம் ஹம்பியில் காணலாம். குறிப்பாக ஹம்பியில் விருப்பாபூர் கட்டே என்ற இடத்தில் உள்ள பெரிய நீர்வழிப் பாலம் அவசியம் பார்க்க வேன்டிய ஒன்றாகும்.
Dharani.prakash
தொல்பொருள் அருங்காட்சியகம்
கமலாபுரத்திலுள்ள அருங்காட்சியகத்தில் ஹம்பி நகரத்தின் இரண்டு மாதிரி வடிவங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரி வடிவங்களை பார்ப்பதன் மூலம் பயணிகளால் ஹம்பி நகரின் வடிவமைப்பு, திசைகள் மற்றும் முக்கியமான ஸ்தலங்களின் இருப்பிடம் மற்றும் அவை குறித்த தகவல்கள் போன்றவற்றை மிக எளிமையாக அறிந்து கொள்ள முடியும். அருங்காட்சியகத்தின் கடைசி காலரியில் வைக்கப் பட்டுள்ள இந்த மாதிரி வடிவம் அரண்மனைப் பகுதி பற்றிய துல்லியமான விபரங்களை அளிக்கிறது.
இந்த தொல்பொருள் அருங்காட்சியகம் வெள்ளிக்கிழமைகளிலும் அரசு விடுமுறைகளிலும் மூடப்படுகிறது. மற்ற எல்லா நாட்களிலும் காலை 10மணியிலிருந்து மாலை 5 மணி வரை திறக்கப்படுகிறது. ஹம்பி வரும் சுற்றுலா பயணிகள் இந்த அருங்காட்சியகத்தை பார்ப்பது மிக அவசியம்.
Lyon
படவ லிங்கம்
9 அடி உயரமுள்ள படவ லிங்கம் என்று அழைக்கப்படும் இந்த லிங்கமானது லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கருகில் உள்ளது. ஒரு நீர்வழிப் பாதையின் உள்ளே நீருக்குள் அமிழ்ந்திருக்கும்படி இந்த லிங்கம் வடிவமைக்கப்பட்டிருப்பது இதன் நூதனமான சிறப்பம்சமாகும். ஒற்றைக் கருங்கல்லில் வடிக்கப்பட்டுள்ள இந்த லிங்கத்தில் மூன்று கண்கள் செதுக்கப்பட்டுள்ளன. இது சிவனின் மூன்று கண்களாக கருதப்படுகின்றன. தெய்வீகமும் புரதான கட்டிட மற்றும் சிற்பக்கலை அம்சமும் கலந்து மிளிரும் இந்த அமைப்பை பார்க்கும் போது தோன்றும் உணர்வு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.
ஐதீகக் கதைகள் எப்படி இருப்பினும் ஒரே கல்லில் வடிக்கப்பட்டுள்ள இந்த லிங்கத்தின் கட்டுமானமும் அதை சூழ்ந்துள்ள சிற்ப கட்டிட வேலைப்பாடுகளும் பிரமிக்க வைக்கும் இயல்பை கொண்டுள்ளன.
Ashwin Kumar
சந்திரமவுளீஸ்வரர் ஆலயம்
15 ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த கோயில் பல யாத்ரீக பக்தர்களை கவரும் ஆன்மீக ஸ்தலமாகும். ஹம்பியின் மத்தியில் அமைந்துள்ள இந்த கோயில் விட்டலா கோயில் கட்டப்பட்டுள்ள அதே நேர் கோட்டில் அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.
Dr Murali Mohan Gurram