தலைப்பை படித்தவுடன் சற்று வியப்பாக இருக்கிறது அல்லவா? ஆனால் இது உண்மைதான். தாஜ்மஹாலைக் காண வெளி நாடுகளில் இருந்தும், உள் நாட்டிலும் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். முகலாய வம்சத்தின் கலை, கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கத்தின் செழுமையான பாரம்பரியத்தை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் மிகவும் பிரமாண்டமான முறையில் கொண்டாடப்படும் தாஜ் மஹோத்சவ் கொண்டாடப்படுகிறது. இந்த பிரமாண்டமான திருவிழாவில் நீங்களும் கலந்துக் கொள்ள ஆசையா? இப்போதே திட்டமிடுங்கள். 2023 ஆம் ஆண்டிற்கான தாஜ் மஹோத்சவ் நடைபெறும் நேரம், தேதி, நிகழ்ச்சிகள், பொழுபோக்கு அம்சங்கள், கட்டணம் ஆகிய தகவல்கள் கீழே!
தாஜ் மஹோத்சவ் என்றால் என்ன?
தாஜ் மஹோத்சவ் திருவிழா என்பது உற்சாகம், திறமை மற்றும் களியாட்டங்கள் நிறைந்த ஒரு அழகான மற்றும் ஆற்றல்மிக்க 10 நாள் நிகழ்வு ஆகும். இந்தியா முழுவதிலும் உள்ள கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களின் கைவினைத்திறன், கலை மற்றும் படைப்புகளைக் காண இங்கு நாம் வருகை தர வேண்டும். நாடு முழுவதிலுமிருந்து பிராந்திய உணவுகளையும் இங்கு நீங்கள் சுவைக்கலாம். இசை, நடனம், கலை, கலாச்சாரம், உணவு வகைகள் மற்றும் பலவற்றின் கலாட்டாவாக இருக்கும் இந்த திருவிழா 1992 ஆம் ஆண்டு முதல் முறையாக நடைபெற்று பெரும் வரவேற்பை பெற்றது. அன்றிலிருந்து இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் மிக உற்சாகமாக தாஜ் மஹோத்சவ் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
தாஜ் மஹோத்சவ் 2023 நடைபெறும் இடம்
தாஜ் மஹோத்சவ் 2023 ஆக்ரா நகரத்தில் உள்ள புகழ்பெற்ற கைவினைக் கிராமமான ஷில்ப்கிராமில் கொண்டாடப்படும். சில்ப்கிராம் கிராமம் தாஜ்மஹாலில் இருந்து ஒரு மைல் தூரத்தில் தாஜ் மஹாலின் கிழக்கு வாசலில் அமைந்துள்ளது.
தாஜ் மஹோத்சவ் 2023 நடைபெறும் தேதி மற்றும் நேரம்
பிப்ரவரி 18 முதல் பிப்ரவரி 27 வரை மிக கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இந்த பத்து நாட்களும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திருவிழா உற்சாகம் குறையாமல் இருக்கும்.
தாஜ் மஹோத்சவில் நீங்கள் என்னவெல்லாம் செய்யலாம்
கலை மற்றும் கைவினை - ஏறக்குறைய நாட்டின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த கைவினைஞர்கள், கல் மற்றும் மரத்தால் செதுக்கப்பட்ட பொருட்கள், கையால் செய்யப்பட்ட தரைவிரிப்புகள், பளிங்கு அலங்காரப் பொருட்கள், மூங்கில் மற்றும் பித்தளைப் பொருட்கள், கைத்தறி ஆடைகள், லக்னோவி சிக்கன் ஆடைகள், பெனாரஸின் ஜரி வேலைகள் மற்றும் பலவற்றைக் காட்சிபடுத்துக்கின்றனர். இந்த தனித்துவமான பொருட்களை நீங்கள் வாங்கி மகிழலாம்.
பாரம்பரிய ஆடல், பாடல் - நாடு முழுவதிலும் இருந்து பிரபலமான மற்றும் பிரபலமான கலைஞர்களின் அற்புதமான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும். குமார் சானு, உஷா உதுப், ஜஸ்பிர் ஜஸ்ஸி போன்ற பிரபல கலைஞர்கள் மற்றும் பல புகழ்பெற்ற நாட்டுப்புற பாடகர்கள் மற்றும் நடன கலைஞர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள்.
வித விதமான உணவுகள் - கண்களை மகிழ்விக்கும் கட்டிடக்கலை அதிசயமான தாஜ்மஹாலைத் தவிர, ஆக்ராவில் பல சுவையான தெரு உணவுகள் நீங்கள் சுவைக்கலாம். அதோடு திருவிழாவில் இந்தியாவின் பல பகுதிகளின் உணவு பொருட்களின் ஸ்டால்கள் போடப்பட்டு இருக்கும். அவற்றை சுவைக்க மறக்காதீர்கள்.
கேளிக்கை - தாஜ் மஹோத்சவில் உங்களுக்கு நிறைய வேடிக்கையான செயல்பாடுகள் காத்திருக்கின்றன. திருவிழாவில் ஒட்டகம் மற்றும் யானை சவாரியை தேர்வு செய்து சென்று வாருங்கள். அல்லது ரோலர் கோஸ்டர்கள், பெர்ரிஸ் வீல்கள் மற்றும் ஊஞ்சல்கள் என பலவும் இங்கு இருக்கிறது.
தாஜ் மஹோத்சவிற்கான நுழைவுக்கட்டணம்
தாஜ் மஹோத்சவ் டிக்கெட் விலை பெரியவர்களுக்கு ரூ.50, 5 முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ரூ.10, மற்றும் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவசம். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் திருவிழாவை இலவசமாகக் கண்டுகளிக்க முடியும், அதேசமயம் பள்ளி சீருடையில் 100 மாணவர்கள் கொண்ட பள்ளிக் குழு பார்வையிட திட்டமிட்டால், அதற்கு ரூ.500 செலுத்த வேண்டும். திருவிழாவில் கலந்துகொள்ள தாஜ் மஹோத்சவ் டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்து, நீண்ட நேரம் வரிசையில் நிற்பதைத் தவிர்க்கவும்.
எப்படி செல்வது?
வரலாற்று வளம் மிக்க நகரமான உத்தரபிரதேசத்தின் ஆக்ராவில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இந்த நகரம் பல்வேறு போக்குவரத்து முறைகள் மூலம் நாடு மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
விமானம் - அருகிலுள்ள விமான நிலையம் (இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், டெல்லி)
ரயில் - ஜெய்ப்பூர் போன்ற டெல்லியைச் சுற்றியுள்ள முக்கிய மெட்ரோ நகரங்களிலிருந்து ஆக்ராவை அடைய இரண்டாவது சிறந்த வழியாகும்.
சாலை - சாலைகள் வழியாக ஆக்ராவுக்குச் செல்ல நீங்கள் திட்டமிட்டால், மாநிலங்களுக்கு இடையேயான சுற்றுலாப் பேருந்தில் செல்லலாம் அல்லது உங்கள் தனிப்பட்ட வாகனத்தில் நகரத்திற்குச் செல்லலாம். குவாலியர், ஜெய்ப்பூர், டெல்லி, கான்பூர் மற்றும் லக்னோவிலிருந்து வழக்கமான பேருந்துகள் உள்ளன.