கலாச்சாரங்களின் சங்கமமான இந்தியாவில் சொல்லப்படும் கதைகளுக்கு அளவே இல்லை. சில விஷயங்களை பற்றிய நம்பிக்கைகள் எங்கிருந்து தோன்றின, எப்படி தோன்றின என்பதை யாராலும் கண்டுபிடிக்கவே முடியாது . அதிலும் சில இடங்களைப்பற்றி சொல்லப்படும் கதைகள் உண்மையாகவே பயமுறுத்துபவை. அப்படி அமானுஷ்ய கதைகள் சொல்லப்படும் சில அழகிய சுற்றுலாதளங்களுக்கு ஒரு திகில் பயணம் செல்லலாம் வாருங்கள்.
டுமாஸ் பீச், குஜராத்
புகைப்படம்: Keith Tyler
பொன்னிறத்தில் மின்னும் கடற்க்கரை மணல், தெள்ளத்தெளிவாக நீல நிறத்தில் கடல் நீர் , சில்லென வீசும் தென்றல் இவை எல்லாம் சுற்றுலாப்பயணிகளை இங்கு சுண்டி இழுத்தாலும் இந்த கடற்கரையை பற்றி சொல்லப்படும் கதை அப்படி இருக்காது. இது முன்னொரு காலத்தில் சுடுகாடாக இருந்ததாகவும். அந்தி சாய்ந்த பிறகு பேய்களின் நடமாட்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் சூரியன் மறைந்த பிறகு சுற்றுலாப்பயணிகள் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை.
பங்கார்க்ஹ் கோட்டை, ராஜஸ்தான்
புகைப்படம்: Arindambasu2
கோட்டைகளின் நகரம் என்று அழைக்கப்படும் ராஜஸ்தானில் உள்ள ஒரு அழகிய கோட்டை தான் பங்கார்க்ஹ் கோட்டை. இதன் கலைவேலைப்படுகளை காண ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். ஆனால் அந்தக்காலத்தில் இந்த கோட்டை ஒரு மாந்த்ரீகனால் சபிக்கப்பட்டதாகவும் அதனால் இது கைவிடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இரவு நேரங்களில் இங்கு அமானுஷ்ய சக்திகளின் நடமாட்டம் இருப்பதாக நம்பப்படுவதால் சுற்றுலாப்பயணிகள் அப்போது கோட்டைக்கு உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை.
குல்தாரா, ராஜஸ்தான்
புகைப்படம்: Tomas Belcik
குல்தாரா, ராஜஸ்தானத்தின் செழிப்பான கிராமங்களில் ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. ஆனால் திடீரென ஒரே இரவில் கிராமவாசிகள் குல்தாரா கிராமத்தை மொத்தமாக காலிசெய்துவிட்டு சென்றுவிட்டார்களாம். எதனால் அப்படி செய்தார்கள், எது அவர்களை அப்படி செய்ய வைத்தது என்று இதுவரை யாருக்கும் தெரியாது. ஒருவேளை நீங்கள் ராஜஸ்தானுக்கு சுற்றுலாச்செல்ல நேர்ந்தால் இந்த கிராமத்துக்கு சென்று ஏதாவது காரணத்தை கண்டு பிடிக்க முடிகிறதா என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்.
ஆக்ராசென் கி பவோலி, புது டில்லி
புகைப்படம்: Ankit.malhotra2011
மகாபாரத காலத்தில் ஆக்ராசென் என்னும் பேரரசனால் கட்டப்பட்டதாகவும் பின்னர் 14ஆம் நூற்றாண்டில் புனரமைக்கப்பட்டதாகவும் கூறப்படும் இந்தக்கட்டிடம் காலப்போக்கில் அதன் முக்கியத்துவத்தை இழந்திருக்கிறது. கிணறு போன்ற இந்த இடத்தில் என்னவென்று தெரியாத கருப்பு நிறமான நீர் ஊறியதாகவும், இந்த வழியாக வரும் பயணிகள் அதை அருந்திய போது மயங்கி தற்கொலை செய்துகொண்டதாகவும் இந்த இடத்தைப்பற்றிய ஒரு கதை உலாவுகிறது. என்னவொரு பயங்கரம்.
குக்கரஹல்லி ஏரி, மைசூர்
புகைப்படம்: Pratheepps
நடுச்சாமத்தில் இருட்டான ஏரியின் அருகே வண்டியில் தனியாக சென்று கொண்டிருக்கையில் திடீரென நமக்கு பின்னல் ஒருவர் உட்கர்ந்து இருப்பது போல தோன்றினால் எப்படி இருக்கும். குக்கரஹல்லி ஏரிக்கு அருகில் தனியாக பயணிப்பவர்கள் அப்படி ஒரு அமானுஷ்யத்தை உணருகிறார்களாம். அருமையான இயற்க்கை காட்சிகளை கொண்ட இந்த ஏரியை காண பல சுற்றுலாப்பயணிகள் வந்தாலும் அவர்கள் யாரும் சூரியன் மறைந்த பிறகு இங்கு இருப்பதில்லையாம். நீங்கள் செல்கையிலும் கொஞ்சம் கவனமாக இருங்கள்.