இந்தியா பல அதிசயங்கள் நிறைந்த நாடு! வரலாறு, பாரம்பரியம், கலாச்சாரம், இயற்கை வளங்கள், கோவில்கள், அரண்மனைகள், கோட்டைகள், கடற்கரைகள், வனவிலங்குகள் என ஒவ்வொரு மாநிலத்திலும் ஏதோ ஒன்று சிறப்புமிக்கதாகவும், தனித்துவமானதாகவும் திகழ்கிறது.
அதைப்போல, இந்தியாவில் அத்தனை மாநிலங்கள் இருந்தும், எண்ணற்ற தேசியப் பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள் இருந்தும், மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்த குறிப்பிட்ட தேசியப் பூங்காக்களில் மட்டுமே நீங்கள் இரவு நேர சஃபாரி செய்யலாம்! அதற்கான காரணம் என்ன? இரவு நேர சஃபாரியின் விசேஷங்கள் என்ன என்பதையெல்லாம் இங்கே காண்போம்!
மத்திய பிரதேச மாநிலம் தனது ஐந்து தேசிய பூங்காக்களில் சமீபத்தில் இரவு சஃபாரிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மற்ற மாநிலங்களுடன் அளவில் ஒப்பிடும் போது மத்திய பிரதேச மாநிலத்தில் காடுகளின் அடர்த்தி மற்றும் அதன் தன்மை காரணமாக மிகப் பெரிய தேசிய பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்த ஐந்து தேசிய பூங்காக்களில் இரவு நேர சபாரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கன்ஹா தேசியப் பூங்கா
மத்தியப் பிரதேசத்தின் சத்புரா மைகல் மலைத்தொடரில் அமைந்துள்ள கன்ஹா தேசியப் பூங்கா, உலகெங்கிலும் உள்ள சிறந்த வனவிலங்கு மண்டலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்குள்ள முக்கி இடையக மண்டலத்தில் இரவு சஃபாரி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், புலிகள் மற்றும் பாரசிங்கங்கள் உள்ளிட்ட சில காட்டு உயிரினங்கள் காடுகளில் சுதந்திரமாக சுற்றித் திரிவதைக் காணலாம். எனவே, சூரியன் மறைந்த பிறகு இந்த தேசிய பூங்காவின் வனப்பகுதியை நீங்கள் காண ஆர்வமாக இருந்தால், கன்ஹா தேசிய பூங்காவில் இரவு சஃபாரி மேற்கொள்ளுங்கள். இங்கே கேம்பிங் செய்யவும் அனுமதி உண்டு.
பாந்தவ்கர் புலிகள் காப்பகம்
உமரியா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த தேசியப் பூங்கா, புலிகளின் பெரும் எண்ணிக்கைக்கு பெயர் பெற்றது மற்றும் இந்தியாவில் புலிகள் சுற்றுலாவிற்கு சிறந்த இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. திறந்த புல்வெளிகள், செங்குத்தான முகடுகள், மூங்கில், சால் மற்றும் பிற காடுகளுடன் இந்த நிலப்பரப்பு நம்மை வியக்க வைக்கிறது.
எனவே, பகலில் ஜீப் மற்றும் யானை சஃபாரிகளை ரசிப்பது மட்டுமல்லாமல், இரவிலும் சுற்றிப் பார்க்க செல்லுங்கள். சஃபாரியின் போது உங்கள் வாகனத்தின் அருகில் புலிகள் கம்பீரமாக நடப்பதை நீங்கள் ஆச்சர்யப்படாமல் இருக்க முடியாது.
பென்ச் தேசியப் பூங்கா
மத்தியப் பிரதேசத்தின் சியோனி மற்றும் சிந்த்வாரா மாவட்டங்களில் அமைந்துள்ள பென்ச் தேசியப் பூங்கா, இரவு நேர சஃபாரிகளுக்கு பெயர் பெற்ற ஒரு இடமாகும்.
இரவு நேரத்தில் இங்கே நீங்கள் சஃபாரி செய்யும்போது காட்டுப்பன்றிகள், வங்கப்புலிகள், இந்திய ஓநாய், ஹைனா மற்றும் காட்டு நாய்கள் ஆகியவற்றை காணலாம்.
பன்னா தேசிய பூங்கா
பன்னா தேசிய பூங்கா, வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் பறவை ஆர்வலர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு இடமாகும்.
பீடபூமிகள் மற்றும் பள்ளத்தாக்குகள், ஆற்றங்கரை, திறந்த புல்வெளிகள், முட்கள் நிறைந்த வனப்பகுதிகள், நீர்வீழ்ச்சி நிறைந்த இந்த பூங்காவில் நைட் சஃபாரி செய்வது உற்சாகமாக இருக்கும். புலிகள், காட்டு ஓநாய்கள், நரிகள் ஆகியவற்றை நீங்கள் கண்டு களிக்கலாம்.
சத்புரா தேசிய பூங்கா
குறுகிய பாதைகள், பள்ளத்தாக்குகள், மணற்கல் சிகரங்கள் மற்றும் அடர்ந்த காடுகளுடன் அற்புதமான நிலப்பரப்பைக் கொண்டுள்ள சத்புரா தேசிய பூங்கா மத்திய பிரதேசத்தில் உள்ள மிகவும் மாறுபட்ட மற்றும் அழகான தேசிய பூங்காக்களில் ஒன்றாகும்.
ரீசஸ் குரங்கு, ராட்சத அணில், பறக்கும் அணில் மற்றும் இலை மூக்கு வௌவால் போன்ற பல அரிதான விலங்குகளை நீங்கள் நைட் சஃபாரியில் காணலாம்.
எந்தவொரு பார்வையாளருக்கும் அல்லது விலங்குக்கும் எந்த வகையிலும் தீங்கு விளைவிக்காதபடி சரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்கப்பட்டு கவனமான வழியில் இரவு சபாரிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆகவே அடுத்த முறை நீங்கள் மத்திய பிரதேசம் செல்லும்போது கட்டாயம் இந்த நைட் சபாரியில் ஈடுபடுங்கள்! நிச்சயம் அது ஒரு வாழ்நாள் அனுபவமாக இருக்கும் எனதில் ஆச்சர்யம் இல்லை!