கர்நாடகாவின் சிக்மகளூர் மாவட்டத்தில் பாபா புதன் கிரி குன்றுகளுக்கு மத்தியில் கெம்மனகுண்டி நகரம் அமைந்துள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கெம்மனகுண்டியை சூழ்ந்து காணப்படும் அழகிய அருவிகள், அடர்ந்த காடுகள், பசுமையான பச்சை புல்வெளிகள் யாவற்றையும் கண்டு சொக்கிப் போவது நிச்சயம். இங்குதான் அந்த அருவி அமைந்துள்ளது.
இந்த கட்டுரையில் ஹெப்பி அருவி பற்றியும், அங்கு எப்படி எப்போது செல்வது என்பது பற்றியும் தரப்பட்டுள்ளது. மேலும் சிறந்த வழி, அருகில் காணவேண்டிய இடங்கள், செல்லும் வழியில் காணவேண்டிய இடங்கள், அருவிக்கு அனுமதிக்கும் நேரம், சிக்மகளூரிலிருந்து எவ்வளவு தூரம், பெங்களூரிலிருந்து செல்லும் பயணவழிகாட்டி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
எப்படி செல்வது
சிக்மகளூரிலிருந்து 65 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த அருவி. இந்த அருவி அமைந்துள்ள இடம் பொதுவாக கெம்மணகுண்டி என்றே அழைக்கப்படுகிறது. மிகவும் பசுமையான அமைப்புகளுடன் கூடிய இந்த அருவியை நாம் அடைவது மிக எளிமையானதாகும்.
பெங்களூரிவிலிருந்து 8 மணி நேர பயணத்தில் நாம் கெம்மணகுண்டி மலைப் பகுதியை அடைய லாம். கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள 35 நீர்வீழ்ச்சிகளில் மிகவும் கவர்ச்சியான நீர்வீழ்ச்சி இந்த ஹெப்பி தான்.
இந்த அருவி மட்டுமில்லாமல், இந்த அருவிக்கு வருகை தரும் பாதைகளும் அழகுற காட்சியளித்து, உங்களை வரவேற்கும். அதிகாலைப் பனிச் சாரல் உங்கள் மேல் விழும் போது சிலிர்ப்பதை போல் உங்களுக்கு ஒரு உணர்வு தோன்றும் இந்த சாலையில் பயணிக்கும்போது. உங்கள் மன ஓட்டத்தை இந்த பயணம் மிகவும் சுறுசுறுப்பாக்கும். உங்கள் இளமை காலத்தை திரும்பி பார்க்க, உங்கள் இளமையை அனுபவிக்க கட்டாயம் செல்லுங்கள் இந்த இடத்துக்கு.
அழகே நீதான் அருவியா....
நீங்கள் கவிதை எல்லாம் எழுத தேவையில்லை அருவி போல உங்கள் மனதிலிருந்து தானாகவே கொட்டும். அழகை வர்ணிக்க சொற்களில்லை. தமிழோடு கலந்த சமக்கிருதமும் அழகுற ஒலிப்பதைப் போல, இங்கு சற்று ஏற்படும் சிரமங்களைக் கூட நீங்கள் பொருட்படுத்தமாட்டீர்கள். காதலி அல்லது காதலனுடன் செல்லுங்கள் இந்த இடத்துக்கு, திரும்பி வர மனசே இராது. உங்களை மெய்சிலிர்க்கச் செய்யும் இந்த நீர்வீழ்ச்சியின் அழகை சொல்லிக்கொண்டே போகலாம். உங்களின் முதல் முத்தத்தை போன்றதொரு அனுபவத்தை பெறுங்கள். மென்மையான காற்று முகத்தில் உரசிச் செல்வது கூட காதலின் கவிதைப்போல உங்களை மயங்கச் செய்யும். மயங்கிவிடுங்கள்.. இயற்கையின் அழகே அதுதானே...
திறந்திருக்கும் நேரம் - காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை
கால நிலை - சராசரியாக 28டிகிரி செல்சியஸ்
நேரமேலாண்மை - அருவி அருகில் 2 மணி நேரம் வரை அசராமல் நேரம் செலவிடலாம்
கட்டணம் - இல்லை
எப்போது செல்லலாம் - ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் வரையிலும் செப்டம்பர் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் செல்லலாம்
டிரெக்கிங் - உள்ளது
பெங்களூரிலிருந்து தரிக்கரே பேருந்தில் பயணிக்கவேண்டும்
தரிக்கரே முதல் லிங்கடஹல்லி வரை வாடகை வண்டி மூலமாக செல்லலாம் எப்போதாவது பேருந்து வசதி உள்ளது. அல்லது பெங்களூரிலிருந்தே வாடகை வண்டியில் வரலாம்.
அங்கிருந்து கெம்மணகுண்டி வந்து பின் டிரெக்கிங்கை தொடங்கவேண்டும்.
அருவியின் பார்வை கோணம்
அருவி நீங்கள் செல்ல செல்ல அழகைக் கூட்டிக்கொண்டே செல்வதைப் போன்றதொரு மன நிலையைத் தரும். ஆம். ஒவ்வொரு கோணத்திலும் சிறப்பானதாக காட்சி தரும்.
நீல வான ஒளியில் பசுமையைச் சேர்த்தார்போல மலைப்பகுதியில் பயணிக்கும்போது வெள்ளி உருகி ஓடி வருவதுபோல உங்கள் கண்ணுக்கு ஒரு ஃபுல் மீல்ஸ் ரெடி..
551 அடி உயரமான இந்த அருவி, மேலிருந்து பெரிய ஹெப்பி, சின்ன ஹெப்பி எனும் இரண்டு பகுதியாக விழுகிறது. நீங்கள் அருவியை நேரில் பார்க்கும்போது ஒன்றை நினைத்துக்கொள்ளுங்கள். இது மகராஜா கிருஷ்ணராஜ உடையார் கோடையில் குளித்து குதூகலித்த இடம்.
சுற்றுலாத் தளங்கள்
கெம்மனகுண்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் காப்பித் தோட்டத்துக்கு மத்தியில் அமைந்திருக்கும் ஹெப்பி அருவியின் அழகை கண்டிப்பாக மறக்க மாட்டார்கள். இந்த அருவி இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன் பெரிய பகுதி தொட்டா ஹெப்பி என்றும், சிறியது சிக்கா ஹெப்பி என்றும் அழைக்கப்படுகிறது.இதில் நீராடுபவர்களுக்கு தோல் நோய் சம்பந்தமான நோய்கள் குணமாகுமேன்று சொல்லப்படுகிறது.
கெம்மனகுண்டி நகரம் எண்ணற்ற சுற்றுலாத் தலங்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது. அவை அனைத்தையும் நீங்கள் ஒரே நாளில் காண்பதென்பது முடியாத காரியம். செங்குத்தான குன்றின் உச்சியில் அமைந்திருக்கும் இசட் முனையை அடைய 30 நிமிடங்கள் ஆகும். இதன் உச்சியிலிருந்து கெம்மனகுண்டி நகரை சுற்றியுள்ள பகுதிகளின் அழகிய காட்சிகளை பரிபூரணமாக கண்டு ரசிக்கலாம். ஹெப்பே அருவி, காலஹஸ்தி மற்றும் கல்லதிகிரி என்ற பெயர்களில் அறியப்படும் கல்ஹட்டி நீர்வீழ்ச்சி போன்றவை கெம்மனகுண்டிக்கு வரும் பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள். அதோடு விஜயநகர காலத்தில் கட்டப்பட்ட கோயில் ஒன்றும் இங்கு உள்ளது. முல்லயநாகிரி மற்றும் பத்ரா புலிகள் பாதுகாப்பு காடுகள் ஆகியவையும் கெம்மனகுண்டியின் முக்கிய சுற்றுலாத் தலங்கள்.
கல்ஹட்டி நீர்வீழ்ச்சி
கெம்மனகுண்டிக்கு வரும் பயணிகள் நேரம் இருந்தால் கல்ஹட்டி நீர்வீழ்ச்சிக்கும் செல்லலாம். இது காலஹஸ்தி என்றும் கல்லதிகிரி அருவி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு அகஸ்திய முனிவர் தவம் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த அருவிக்கு அருகில் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட வீரபத்திர ஆலயம் என்னும் தொன்மையான கோயில் ஒன்று உள்ளது. இதன் வாயிலில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய மூன்று யானை சிற்பங்கள் ஆகியவை இருக்கின்றன. இவை அழகியலின் மொத்த உருவமாக உள்ளது.
பாறைப் பூங்கா
கெம்மனகுண்டிக்கு வரும் பயணிகள் கண்டிப்பாக பாறைப் பூங்காவுக்கு செல்லவேண்டும். இங்கு வரும் பயணிகள், ஏராளமாக பூத்துக் குலுங்கும் வண்ண வண்ண பூக்கள், பசுமையான காடுகளுக்கு இடையில் தெரியும் சூரிய அஸ்த்தமனக் காட்சி ஆகியவற்றில் மனதை பறிகொடுப்பது உறுதி. மேலும், பூங்காவின் எல்லையில் நீங்கள் பத்ரா அணையின் பிரம்மாண்டத்தை கண்டு ரசிக்கலாம்.
இசட் முனை
கெம்மனகுண்டிக்கு வரும் பயணிகள் நேரம் இருந்தால் இசட் முனைக்கு செல்லலாம். இந்தப் பகுதியை நடைபயணம் மூலம் அடைவது சிறப்பானது. அப்போது வழியெங்கும் கொட்டிக்கிடக்கும் இயற்கை அழகை பயணிகள் கண்டு ரசிக்கலாம். இசட் முனையை நெடுந்தூர நடைபயனத்துக்கு பின் நீங்கள் அடைந்த பிறகு அற்புதமான சூர்ய அஸ்த்தமனத்தின் எழில் மிகும் காட்சியை காணலாம். அதோடு மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் கிறங்கடிக்கும் ஷோலா புல்வெளியின் பேரழகை இசட் முனையிலிருந்து பார்க்கும் எவருமே அந்த காட்சியை அவ்வளவு விரைவில் மறந்து விட மாட்டார்கள்.
கவின்மிகு காட்சிகள்
கெம்மனகுண்டியில் மலைகளாலும், அழகிய பள்ளத்தாக்குகளாலும் சூழ அமைந்திருக்கும் சாந்தி அருவியின் கவின்மிகு காட்சி காண்போர் கண்களை விட்டு அவ்வளவு விரைவில் விலகாது. இதன் அருகில் உள்ள கிறங்கடிக்கும் ஷோலா புல்வெளியும், இசட் முனையும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள். இசட் முனை செங்குத்தான குன்றின் உச்சியில் இருப்பதால் இங்கிருந்து நீங்கள் சாந்தி அருவியின் மாசில்லாத அழகை எந்த தடையுமில்லாமல் ரசிக்கலாம்.அதோடு கெம்மனகுண்டி வரும் பயணிகள் நேரமிருந்தால் முல்லயனாகிரி மற்றும் பத்ரா புலிகள் காப்பகம் போன்ற இடங்களுக்கும் சென்று சுத்தமான காற்றை சுவாசித்துவிட்டு வாருங்கள்.