இந்திய சுற்றுலா, அதன் தன்னிகரில்லா கலாச்சரம், பழம்பெருமை, இயற்கைத்தன்மை மற்றும் அழகினால், தனிச்சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது. எவ்வித பயணியாக இருப்பினும், ஆசுவாசமான மனோபாவம் கொண்ட ஒரு சுற்றுலாப் பயணியோ, அல்லது பயணத்தின் அனைத்து அம்சங்களையும் எடை போடக் கூடிய கூரிய திறனாய்வு கொண்ட ஒரு ஆர்வலரோ, யாராக இருப்பினும், அப்பயணியின் கற்பனைகள் மற்றும் உவகைகளுக்கு ஈடு கொடுக்கக்கூடியதாய் உள்ளது. இந்தியா , தன் தனிச்சிறப்பு வாய்ந்த புராதனப் பெருமையினால், சுற்றுலாப் பயணிகளின் மிக விருப்பமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. அப்படி இருக்கும் இந்தியாவின் 4 முக்கிய புராதான கலாச்சார பொக்கிஷங்கள் என்று அழைக்கப்படும் இடங்களுக்கு இப்போது நாம் செல்லலாம். அங்கு நீங்கள் காணத்தவற விடக்கூடாத இடங்களைப் பற்றி பார்ப்போம் வாருங்கள்.
மூணாறு
தமிழ்நாட்டுக்கு அருகில்தான் இருக்கிறதா என்று சுற்றுலா செல்வோர்களை மலைக்க வைக்கும் அளவுக்கு இயற்கை எழிற்காட்சிகளைக் கொண்டுள்ள இந்த ‘மூணார் மலைவாசஸ்தலம்' கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. பிரமிக்க வைக்கும் அடுக்கடுக்கான பசுமையான மலைப்பிரதேச அமைப்புகளுடன் வீற்றிருக்கும் இந்த சுற்றுலாப்பிரதேசம் இந்தியாவின் முக்கிய புவியியல் அடையாளமான மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உள்ளது.
மூணார் என்னும் பெயருக்கு மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடம் என்பது பொருளாகும். மதுரப்புழா, நல்லதண்ணி மற்றும் குண்டலி எனும் மூன்று ஆறுகள் கூடும் ஒரு வித்தியாசமான புவியியல் அமைப்பில் இந்த மலைப்பிரதேசம் அமைந்திருப்பதால் இப்பெயர் வந்துள்ளது. கேரளாவின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளதால்
மூணார் மலைவாசஸ்தலம் பல விதத்திலும் தமிழ்நாட்டுக் கலாச்சாரங்களுடன் காட்சியளிக்கிறது. சுற்றுலாப்பயணிகள் மத்தியில் பெரிதும் விரும்பப்படும் மலைவாசஸ்தலமாக மட்டுமல்லாமல் மூணார் சர்வதேச அளவிலும் புகழ் பெற்று விளங்குவது குறிப்பிடத்தக்கது. ஓய்வையும், இயற்கையின் அரவணைப்பையும் நாடி லட்சக்கணக்கான பயணிகள் இந்தியா மட்டுமின்றி தூரதேசங்களிலிருந்தும் மூணாருக்கு பயணம் செய்கின்றனர். நாமும் ஒரு எட்டு பாத்துவிட்டு வரலாமா?
Arshad.ka5
நீங்கள் மூணாறில் கட்டாயம் செய்யவேண்டியவை
மூணாறில் மரவீட்டில் தங்கிய அனுபவம் இருக்கிறதா?
இல்லையா.. நிச்சயமாக ஒரு நல்ல அனுபவத்தை இழந்துவிட்டீர்கள். ஏறுமாடம் என உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் இது மூணாற்றின் முக்கியமான சுற்றுலா தளமாகும்.
உங்கள் கவனத்திற்கு: இங்கு தங்குவதற்கு பத்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் கொண்ட தம்பதிகளுக்கு மட்டுமே அனுமதி.
கட்டணம் - இ்ந்திய மதிப்பில் 13 ஆயிரம் (ஏறக்குறைய)
கொளுக்குமலையில் உல்லாசப் பயணத்தை அனுபவித்திருக்கிறீர்களா?
எப்போது செல்லலாம்
ஞாயிறு தவிர்த்து அனைத்து நாட்களிலும் மிகச் சுவையான தேயிலைகளை அருந்தலாம். மிகக் குறைந்த கட்டணத்தில் தேநீரும் கிடைக்கிறது.
அனுமதி கட்டணம் - 75ரூபாய் வரை இருக்கலாம்
மூணாறில் டிரெக்கிங் செய்திருக்கிறீர்களா
மூணாறில் இருந்து 15கிமீ தூரத்தில் இருக்கும் மலை உயரம் வரை டிரெக்கிங் செய்து அந்த அனுபவத்தை உணருங்கள்.
உங்கள் கவனத்திற்கு - ஷோலா தேசிய பூங்காவில் கேம்ப்பிங்க் செய்யலாம்
அரிய வகை விலங்குகளை கண்டு களியுங்கள்
இங்கு இரவிகுளம் தேசிய பூங்கா, சின்னார் காட்டுயிர் சரணாலயம், சலிம் அலி பறவைகள் சரணாலயம் ஆகியன அருகாமையில் அமைந்துள்ளன. இங்கு சென்று அரிய வகை விலங்குகளை காணலாம்.
எப்போது செல்லலாம்
காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
அனுமதி கட்டணம்
இரவி குளம் தேசிய பூங்காவுக்கு 90 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. மற்ற சரணாலயங்களுக்கு 10ரூபாய் ஏறக்குறைய இருக்கலாம்.
பைக் ரைடர்களே
சைக்கிளிலோ பைக்கிளோ சிட்டாக பறந்து திரிய ஏற்ற இடம். ஆனால் கவனம் உங்களால் மற்றவர்களுக்கு ஏதும் ஆகிவிடக்கூடாது எச்சரிக்கை.
ஆனமுடி சோலை, குண்டலா, மரயூர், வண்டன்மேடு போன்ற இடங்கள் பைக்கில் செல்ல ஏற்ற இடங்களாகும்.
நீர்வீழ்ச்சிகள்
லக்கம், ஆட்டுக்கல், தூவானம் உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகள் அருகாமையில் அமைந்துள்ளன. இவைகளுக்கு ஒரு சூப்பர் பயணம் செய்து மகிழ்ந்திருங்கள்.
சாகச நிகழ்வுகள்
பாறையேற்றம், படகு சவாரி, நீர் விளையாட்டுக்கள், யானை சவாரி உள்ளிட்ட சாக நிகழ்வுகளுக்கு நீங்கள் முந்திக்கொண்டு செல்வீர்களா. அப்படியானால் இதை விட சிறந்த இடம் வேறெங்கே இருக்கிறது சொல்லுங்கள்.
மேலும் ஆயுர்வேத மசாஜ், ஷாப்பிங்க், தேயிலை அருங்காட்சியகம், உணவகங்கள் என எக்கச்சக்க எண்டர்டெய்ன்மெண்டுகளை உள்ளடக்கியது இந்த பயணம். வாருங்கள் கொண்டாடுவோம்.
Amal94nath
சென்னை
கலை மற்றும் கைவினைப்பாரம்பரியம், இசை மற்றும் நடனம் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய எல்லா கலையம்சங்களும் சென்னை மாநகரத்தில் தழைத்தோங்கி வளர்ந்துள்ளன. குறிப்பாக கர்நாடக இசை மரபு சென்னையின் ஒரு முக்கிய கலாச்சார அடையாளமாகவும் அங்கமாகவும் பரிணமித்துள்ளது. சங்கீத சீசன் எனப்படும் டிசம்பர் மாதத்தில் இங்குள்ள இசைஅரங்குகள் மற்றும் சபாக்களில் சென்னை மற்றும் தென்னிந்தியாவின் எல்லா பிரபல மற்றும் வளரும் கலைஞர்களின் நேரடி இசை நிகழ்ச்சிகளை கண்டும் கேட்டும் ரசிக்கலாம். புலம் பெயர்ந்து வாழும் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டு ரசிகர்கள் இக்காலத்தில் கர்நாடக இசைப்பாரம்பரியத்தை ரசித்து ருசிக்க சென்னையை முற்றுகையிடுகின்றனர். கிறிஸ்துமஸ் காலம் என்பதோடு நகரின் சீதோஷ்ண நிலையும் இதமாக இனிமையாக இருக்கும் என்பதால் டிசம்பர் மாதத்திய சென்னை மாநகரம் மிகவும் விரும்பத்தக்கதாக இருக்கும். இனிமையான கிறிஸ்துமஸ் கரோல் இசை கீதங்களும் டிசம்பர் மாதத்தில் சென்னை நகரமெங்கும் இசைக்கப்படுவதை காணமுடியும். பரதக்கலை அல்லது பரத நாட்டியம் எனப்படும் நடன வடிவமும் சென்னை நகரின் அடையாளமாக வளர்ச்சி பெற்றுள்ளது. இந்தியாவின் பழமையான நடன வடிவங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. உலகளாவிய அளவில் இன்று பரதநாட்டியம் அறியப்படுகிறது என்றால் அதற்குக்காரணம் சென்னை மாநகரத்தில் உதித்த உன்னதமான கலைஞர்கள் மற்றும் அவர்களது முயற்சிகள்தான் என்பதில் ஐயத்திற்கே இடமில்லை.
ganramar
சென்னை மாநகரில் நீங்கள் கட்டாயம் தவறவிடக்கூடாத இடங்கள்
சென்னை மெரினா பீச்சில் காற்றின் சத்தத்துக்கு இடையே கடலின் அழகை ரசித்திருக்கிறீர்களா
கடற்கரை மணலில் அங்கேயே பிடித்து சுட்டு தரும் சுவை மிகுந்த மீன் வறுவலை சாப்பிட்டு அனுபவித்திருக்கிறீர்களா
சென்னை தியாகராய நகரில் கூடும் கூட்டத்துக்குள் அங்குமிங்கும் அலைந்து திரிந்து கடைகளில் ஷாப்பிங் செய்த அனுபவம் உண்டா
கத்திப்பாரா மேம்பாலத்தில் எல்லா திசைகளிலும் பைக்கில் சென்ற அனுபவம் இருக்கிறதா
எழும்பூர் ரயில் நிலையத்தில் தண்டவாளங்கள் பிரிந்து சேரும் அழகிய நிகழ்வுகளை அனுஅனுவாய் ரசித்திருக்கிறீர்களா
தீப்பொறியில் சுட்டு தரும் சோளப்பொரியை உப்பும் புளிப்பும் சுவைக்கூட்டி சுவைத்த நினைவு இருக்கிறதா
வடபழனி முருகன் கோயில், சாந்தோம் சர்ச், கபாலீஸ்வரர் கோயில் போன்ற அற்புத கோயில்களுக்கு போய் அமைதியை உணர்ந்திருக்கிறீர்களா
எழும்பூர் மியூசியத்தில் ஒரு விசிட் அடித்து பார்த்த அனுபவம் உண்டா?
இப்படி எக்கச்சக்க அனுபவங்கள் சென்னையில் நீங்கள் தவறவிட்டிருக்கலாம். கட்டாயம் அடுத்த முறை தவற விடாதீர்கள்.
Sriram Jagannathan
வாரணாசி
பனாரஸ் என்றும் காசி என்றும் அழைக்கப்படும் வாரணாசி, தொடர்ச்சியாக மக்களின் வசிப்பிடமாக விளங்கும் உலகின் பழமையான நகரங்களுள் ஒன்றாகும். படைப்பு மற்றும் அழிவுக் கடவுளாக இந்துக்களால் போற்றப்படும் சிவபெருமானின் நகரமாக அறியப்படும் இது அனைத்து இந்து நகரங்களுள் புனிதமாகக் கருதப்படும் மிகச் சில நகரங்களுள் முக்கியமானது. இங்கு ஒருவர் இயற்கை எய்தினாலோ அல்லது அவரது இறுதிச்சடங்கு இங்கு நிறைவேற்றப்பட்டாலோ அவர் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியிலிருந்து சாஸ்வதமாக விடுபட்டு, மோக்ஷத்தை அடைவார் என்று பெரிதும் நம்பப்படுகிறது.
அதனால் இது, விடுதலை அளிக்கக்கூடிய இடம் என்ற அர்த்தம் தொனிக்குமாறு ‘முக்தி ஸ்தலா' என்றும் அழைக்கப்படுகிறது. மேலும், கங்கை நதியில் ஒரு முங்கு முங்கி எழுந்தால் செய்த பாவங்கள் அனைத்திலிருந்தும் விமோசனம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. யாத்ரீகர்கள் பலர் சூரியோதயத்தின் போதும் சூரிய அஸ்தமனத்தின் போதும் இந்நதியில் புனித நீராடும் காட்சியானது, இங்கு வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளை வசியப்படுத்துவதாக உள்ளது.
வாரணாசியின் முக்கிய படித்துறையில், ஒவ்வொரு மாலை வேளையும் ஆராதனை செய்யப்படுகிறது. குளியல், ஆராதனைகள் மற்றும் பிணவெரிப்பு இத்யாதிகள் நிகழ்த்தப்பெறும் படித்துறைகளின் பக்கவாட்டுப் பகுதிகளில் செய்யப்படும் சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள், இந்த சூட்சுமமான நகரின் மிக முக்கிய வசீகரமாகத் திகழ்கிறது. இவை தவிர, யோகா, மசாஜ்கள், சவரம்; ஏன், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளும் கூட நதியோரங்களில் நடந்தேறுவதைக் காணலாம்.
orvalrochefort
வாரணாசியில் நீங்கள் செய்யவேண்டியவை
கங்கையில் மூழ்கி ஒரு புண்ணிய குளியல் போட்டுவிடுதல்தான் பெரும்பான்மை மக்களின் வாரணாசி பயணம் தொடங்கும். இந்துக்களுக்கு மிக புனித நதியாக கருதப்படும் இந்த ஆறு, சிவபெருமானுக்கு உகந்த ஆராக நம்பப்பட்டு வருகிறது.
payalam
ஜெய்ப்பூர்
கோட்டைகள் மற்றும் அரண்மனைகள் தவிர ஜெய்ப்பூர் நகரம் பலவிதமான திருவிழாச்சந்தைகள் மற்றும் திருவிழாக்கொண்டாட்டங்களுக்கு பிரசித்தமாக அறியப்படுகிறது. இவற்றில் ஜனவரி மாதத்தில் நடத்தப்படும் ‘ஜெய்ப்பூர் வின்டேஜ் கார் ராலி' எனும் நிகழ்ச்சி குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக இந்த நிகழ்வு அதிக அளவு பார்வையாளர்களையும் பயணிகளையும் ஈர்த்து வருகிறது. கார் ரசிகர்கள் பழைய அற்புதமான மெர்சிடிஸ், ஆஸ்டின் மற்றும் ஃபியட் மாடல்களை இந்த ‘ராலி'யில் பார்த்து ரசிக்கலாம். இவற்றில் சில மாடல்கள் 1900ம் வருடத்திய தயாரிப்புகள் என்பது ஆச்சரியமான தகவலாகும். ஹோலிப்பண்டிகை நாளில் கொண்டாடப்படும் யானைத்திருவிழா ஜெய்ப்பூர் மற்றொரு பிரசித்தமான திருவிழா ஆகும். வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் மற்றும் அழகிய யானை ஊர்வல நிகழ்ச்சிகள் போன்றவற்றை இந்நாளில் கண்டு களிக்கலாம்.
ஜெய்ப்பூர் நகரம் அதன் சுவையான, காரமான உணவு வகைகளுக்கும் புகழ் பெற்றுள்ளது. வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டு சேர்க்கப்பட்ட கார உணவு வகைகள் இங்கு பிரசித்தம். தால் பாடி-சூர்மா, பியாஸ் கி கச்சோரி, கெபாப், முர்க் கோ காட்டோ மற்றும் அச்சாரி முர்க் போன்றவை இங்கு கிடைக்கும் விசேஷமான உணவு வகைகளில் குறிப்பிடத்தக்கவையாகும். உணவுப்பிரியர்கள் இந்த உணவு வகைகளை நேரு பஜார் மற்றும் ஜோஹரி பஜார் போன்ற தெருவோர உணவகங்கள் நிறைந்த இடங்களில் சாப்பிடலாம். இவை தவிர கேவர், மிஷ்ரி மாவா மற்றும் மாவா கச்சோரி போன்ற சுவையான உள்ளூர் இனிப்புகளையும் ஜெய்ப்பூர் பயணத்தின்போது ருசிக்கலாம்.
pradeep kumar
ஜெய்ப்பூர் அருகே நாம் காண வேண்டியவை
தாஜ்மஹாலின் அழகில் மெய்சிலிர்க்க, சில்லென்ற காற்றை சுவாசித்து யமுனை நதியின் அழகை கண்டிருக்கிறீர்களா
நாகர்கர் கோட்டையில் வாடகை சைக்கிளில் அழகிய பாதுகாப்பான பயணத்தை ஒரு முறையாவது முயற்சித்தது உண்டா
அமெர் கோட்டையில் யானை மீதேறி உலகத்தை ரசித்து, யானையின் அசைவுகளை உங்கள் உள்ளத்தில் உணர்ந்ததுண்டா
சோக்கி தானியில் ராஜஸ்தான் உணவு பாரம்பரிய சுவைகளை அனுபவித்து ரசித்திருக்கிறீர்களா
வண்ணமயமான அலங்கார பொருள்களை வாங்கி அழகு பார்த்திருக்கிறீர்களா
ஜெய்ப்பூரின் இரவு கால உலகை ஒரு முறையாவது பயமின்றி அனுபவித்திருக்கிறீர்களா
பட்டம் விடும் திருவிழாவுக்கு நீங்கள் என்றாவது செல்ல ஆசைப்பட்டிருக்கிறீர்களா
ஜெய்ப்பூரின் விழாக்கோலத்தில் அவர்களின் பாரம்பரிய இசை நிகழ்ச்சிகளை கண்குளிர செவி கொடுத்து ரசித்த அனுபவம் இருக்கிறதா
ரணதம்போரில் இயற்கையை சுற்றிப் பார்த்த அனுபவம் இருக்கிறதா
ஒட்டக சவாரி, யானை சவாரி செய்ய ஆசைப்பட்டதுண்டா..
பலூனில் பறந்து வானை நோக்கி நடை போட்ட அனுபவம் உண்டா
இத்தனை மட்டுமல்ல இன்னும் எத்தனை எத்தனையோ அனுபவங்களை ஜெய்ப்பூரில் தவறவிட்டுவிடாதீர்கள்.
Abhinavmnnit