சென்னைக்கு அருகே கலாச்சார ரீதியாக மிகவும் வளமான நகரமாக அடையாளம் காணப்படும் மகாபலிபுரம் ஆண்டுதோறும் எண்ணற்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.
வங்காள விரிகுடாவில் ஒரு சிறிய நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த நகரம் வரலாறும் பாரம்பரியமும் கலாச்சாரமும் நிறைந்த ஒரு பார்க்க வேண்டிய அற்புதமான இடமாகும்.
மூன்று பக்கமும் கடற்கரைகள், பல்லவர் காலத்து குடைவரை கோவில்கள், தேர்கள், ஷாப்பிங், சர்ஃபிங் என மகாபலிபுரத்தில் உள்ள விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்! சுற்றிப் பார்ப்பதையும் தாண்டி இங்குள்ள சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன இருக்கின்றன என்பதை இங்கே பார்ப்போம்!
காலம் கடந்த பல்லவ காலத்து குகைகளும் கோவில்களும்
மகாபலிபுரம் என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவதும் 7 ஆம் நூற்றாண்டில் இருந்து நம்மை வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கும் பல்லவர் காலத்து சிற்பக்கலை தான்! அதைக் காணத் தான் ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் இங்கு குவிந்த வண்ணம் உள்ளனர். நீங்களும் முதலில் இவற்றை பார்த்து விட்டு தான் அடுத்த செயல்பாட்டில் இறங்க வேண்டும்.
கடற்கரை கோவில்கள், பஞ்ச ரதம், மகிஷாசுரமர்த்தினி மண்டபம், கிருஷ்ணா பட்டர்பால், கிருஷ்ணா குகைக் கோயில், அர்ஜுனா பெனன்ஸ், பஞ்ச பாண்டவர் குகைக் கோயில் மற்றும் வராஹ குகைக் கோயில் ஆகியவற்றைக் கண்டு களியுங்கள்.
கடற்கரைகளில் சர்ஃபிங், ஃபிஷிங், கேம்பிங் மற்றும் சைட்சீயிங்
கடலோர நகரம் என்பதால், மகாபலிபுரத்தில் செய்ய வேண்டிய விஷயங்களின் பட்டியலில் கடற்கரைகளை சேர்ப்பது இன்றியமையாத ஒன்றாகும். ஆனால் அது மட்டுமே காரணம் அல்ல, வெள்ளை மணல், தூய்மை, இயற்கை அழகு ஆகிய அனைத்தும் ஒரு சேர மகாபலிபுர கடற்கரைகள் பயணிகளுக்கு மிகவும் உற்சாகத்தை ஏற்படுத்துகிறது.
நீங்கள் சூரிய உதய காட்சிகளை நிச்சயம் காண வேண்டும். அது இங்கு மிகவும் விசேஷமாகும். கடற்கரையில் உட்கார்ந்து, எதுவும் செய்யாமல் சத்ரி நேரம் வேடிக்கை பார்ப்பது கூட நம் மனதை ஆசுவாசப்படுத்தும் அல்லவா! மேலும் நீங்கள் இங்கு உரிமத்துடன் நடத்தப்படும் ஆபரேட்டர்களுடன் சேர்ந்து சர்ஃபிங், உள்ளூர் ஆட்களுடன் சேர்ந்து ஃபிஷிங், இரவில் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து கேம்பிங் ஆகியவற்றில் ஈடுபடலாம்.
க்ரோகோடைல் பேங்க் மற்றும் கடும்பாடி கிராமம்
மகாபலிபுரத்தில் செய்ய வேண்டிய விஷயங்களில் முதலை பண்ணை மற்றொரு சுவாரஸ்யமான அம்சமாகும். அது சரியாக மகாபலிபுரத்தில் இல்லை. மகாபலிபுரத்தில் இருந்து சென்னை நோக்கிச் செல்லும் வழியில் கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 15-17 கிமீ தொலைவில் உள்ளது.
இந்தியாவில் உள்ள ஒரு சில பெரிய முதலைப் பண்ணைகளில் இதுவும் ஒன்றாகும். மேலும் மகாபலிபுரத்திற்கு அருகில் உள்ள கடும்பாடி கிராமம் மிகவும் அழகிய ஒரு கிராமம் ஆகும். அங்கு சென்று கிராம மக்களுடன் கலந்துரையாடி, அழகிய கிராமத்தை சுற்றி பார்ப்பதும் ஒரு அருமையான யோசனை தான்.
ஆலம்பரை கோட்டைக்கு பைக் ரைடு
நீங்கள் மகாபலிபுரத்தில் தங்கி இருக்கும் போது பைக் வாடகைக்கு எடுத்து அங்கிருந்து 5௦ கிமீ தூரத்தில் இடைக்கழிநாடு என்ற அழகிய கிராமத்தில் அமைந்திருக்கும் 17 ஆம் நூற்றாண்டை சார்ந்த ஆலம்பரை கோட்டைக்கு ரைடு செல்லலாம்.
போகும் வழியெல்லாம் மரங்கள், செடிகள், கடற்கரை என பைக் ரைடு அட்டகாசமாக இருக்கும். ஆலம்பரை கோட்டையின் இடிபாடுகள், அழகிய கடற்கரை ஆகியவற்றை ரசித்துவிட்டு மீண்டும் மகாபலிபுரம் திரும்பலாம்.
விழாக்கள் மற்றும் திருவிழாக்களில் பங்கேற்பது
மகாபலிபுரத்தில் ஆண்டுதோறும் ஏதோ ஒரு விழா நடந்துகொண்டே தான் இருக்கிறது. நீங்கள் செல்லும் போதெல்லாம் ஏதோ ஒரு நிகழ்வில் கலந்துக் கொள்ள உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
குறிப்பாக நீங்கள் டிசம்பர் முதல் ஜனவரிக்கு இடைப்பட்ட காலத்தில் செல்கிறீர்கள் என்றால், தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்யும் பரதநாட்டியம், கதக், குச்சிப்புடி மற்றும் கதகளி போன்ற பல்வேறு வகையான நடனங்கள் அடங்கிய நடன திருவிழாவில் கலந்துக் கொள்ளலாம்.
சீஷெல் மற்றும் கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியகம்
இந்த தனித்துவமான அருங்காட்சியகத்தில் 40,000 க்கும் மேற்பட்ட அரிய கடல் ஓடுகளின் மாதிரிகள் உள்ளன. கடல் ஓடுகள் தவிர, முத்துக்கள், மீன்வளம், டைனோசர் படிமங்கள் போன்ற பல்வேறு சேகரிப்புகளுக்காக இங்கு மேலும் நான்கு அருங்காட்சியகங்கள் உள்ளன.
நீர்மூழ்கிக் கப்பல் முன்னாள் வாக்லி, தமிழ்நாடு சுற்றுலா வாரியத்தால் கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியகமாக மாற்றப்பட்ட இந்த அருங்காட்சியகத்தையும் நீங்கள் பார்வையிட வேண்டும்.
ஒட்டுமொத்தமாக, இந்த சேகரிப்புகள் அனைத்தும் முற்றிலும் பார்வையிடத்தக்கது,இதனால் மகாபலிபுரத்தில் செய்ய வேண்டிய சிறந்த விஷயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
ஷாப்பிங்
ஷாப்பிங் செய்ய யாருக்கு தான் பிடிக்காது, அதுவும் குறிப்பாக இந்த தனித்துவமான பொருட்கள் என்றால் யாருக்கு தான் வாங்க பிடிக்காது? ஆம்!
கடல் ஓடுகளால் செய்யப்பட்ட நினைவுப் பொருட்களால் மாமல்லபுரம் நிரம்பி வழிகிறது. நகைகள், பொத்தான்கள், உடைகள், வீட்டு அலங்காரப் பொருட்கள், கற் சிற்பங்கள் என தனித்துவமான ஒவ்வொன்றும் இங்கு கிடைக்கிறது. நீங்கள் வந்து சென்றதற்கு நியாபகார்த்தமாக ஏதாவது நிச்சயம் வாங்கி செல்லலாம்.
ஆகவே அடுத்த முறை நீங்கள் மகாபலிபுரத்திற்கு திட்டமிடும் போது மறக்காமல் இவையனைத்தும் திட்டமிட்டு செய்து விட்டு பாருங்கள். அந்த ட்ரிப் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்!