நர்மதா நதியின் கரையோரத்தில் அமைந்துள்ள ஜபல்பூர், மத்தியப்பிரதேசத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்றாகும். பல்வேறு காரணங்களால் முக்கியத்துவம் பெற்றுள்ள இந்நகரம், மாநிலத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறது. பளிங்குக்கல் பாறைகள் அதிக அளவில் காணப்படும் பேடகாட் என்ற இடம் இங்கு அமைந்துள்ளதனால், ஜபல்பூர் இந்தியாவின் பளிங்குக்கல் நகரமாக அறியப்படுகிறது. இது, ஜபல்பூரை தனித்துவத்தோடு விளங்கச் செய்து, உலகப்பிரசித்தி பெற்ற நகரமாகவும் புகழ் பெறச் செய்துள்ளது.
இந்த இடம், அதிகமான மக்கள் விருப்பத்தோடு நாடி வரும் இடமாகவும், காலப்போக்கில் ஜபல்பூர் நகர் என்றாலே பேடகாட் தான் நினைவுக்கு வரும் என்ற அளவிலும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. அனைத்து வசதிகளும் நிறைந்த காஸ்மோபாலிட்டன் நகரமாக விளங்கும் ஜபல்பூர், அதன் இராணுவம் மற்றும் தொழிற்சாலைகளின் செயல்பாடுகளினால் பொருளாதார ரீதியிலும் வளர்ச்சியடைந்து வரும் நகரமாகவும் விளங்குகிறது. முதலில் கோண்ட்ஸ் மற்றும் காளிச்சூரி இராஜ்யங்களாலும், இடைப்பட்ட காலத்தில் மராட்டியர்கள் மற்றும் மொகலாயர்களாலும், பின்னர் ஆங்கிலேயர்களாலும் ஆளப்பட்டு வந்த ஜபல்பூர், சரித்திர கோணத்திலும் அதீத முக்கியத்துவத்தைக் கொண்டு விளங்குகிறது.
ஜபல்பூர் மற்றும் அதன் அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்
இங்கு வருகை தரும் பயணிகளுக்கு, கட்டாயம் பார்க்க வேண்டிய, மிகவும் பிரசித்தி பெற்ற ஏராளமான சுற்றுலாத் தலங்களை ஜபல்பூர் விருந்தாக்குகிறது. சௌஸாத் யோகினி கோயில், பிஸான்ஹரி கி மடியா மற்றும் திரிபுரசுந்தரி கோயில் ஆகியன இந்நகரில் காணப்படும் முக்கியமான சில கோயில்களாகும். மற்றுமொரு பிரபலமான சுற்றுலாத் தலமான தூம்னா இயற்கை சரணாலயம், விலங்குகள் மேல் அபிமானம் கொண்டோரை வருடம் முழுவதும் ஈர்க்கக்கூடியதாகத் திகழ்கிறது.
இதே போல், ஜபல்பூரின் பார்கி அணைக்கட்டு, பறவை விரும்பிகளை இந்தியா மற்றும் அயல்நாடுகளிலிருந்தும் ஈர்க்கக்கூடியதாகத் திகழ்கின்றது. அணைக்கட்டுக்கு அருகில் உள்ள பகுதி மற்றும் துவாந்தர் நீர்வீழ்ச்சி ஆகியவை நகரின் பிரபலமான இதர சுற்றுலா ஸ்தலங்களாகும். தில்வாரா படித்துறை, அழகிய இயற்கைக் காட்சிகளை உடைய ஹனுமான் தல், மற்றும் மகிழ்ச்சி தரக்கூடிய சங்ராம் சாகர் ஏரி ஆகியவை சுற்றுலா ஆர்வத்தைத் தூண்டக்கூடிய மற்றும் சில சுற்றுலாத் தலங்களாகும்.
மதன் மஹால் கோட்டை மற்றும் ராணி துர்காவதி நினைவு அருங்காட்சியகம் ஆகியவை இந்த இடத்தின் மேன்மைமிகு கடந்த காலப் பெருமையை பறைசாற்றுவது போல் கம்பீரமாக நிற்கின்றன. கடந்து போன யுகத்தின் எச்சங்கள் நகரின் பழங்காலக் கோட்டைகளிலும், கோயில்களிலும் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சமநிலைப் பாறைகள் தங்களைக் காண வருமாறு சுற்றுலாப் பயணிகளுக்கு அறைகூவல் விடுத்து, பல வருடங்களாக ஜபல்பூரின் சுற்றுலாத்துறைக்கு விளம்பரம் தேடித் தருகின்றன. புகைப்படக்கலையில் ஆர்வம் கொண்டோர் மிக விரும்பும் இடமான பேடகாட்டின் பளிங்குக்கல் பாறைகள், புதிதாக திருமணம் முடித்த ஜோடிகளின் அபிமான இடமாகவும் விளங்குகிறது.
ஜபல்பூர் அதன் விருந்தினர்களை நாவூறும் தின்பண்டங்கள் மூலம் திணறடிக்கிறது. இவற்றுள், சாட்கள் மற்றும் கோவா ஜிலேபிகள் கட்டாயம் சுவைக்க வேண்டியவையாகும். ஜபல்பூரில் உள்ள சாட் கலி, பல வகையான சாட்கள் ஓரே தெருவில் கிடைக்கக்கூடிய பெருமை பெற்றதாகும். ஜபல்பூரின் சாட்கள், ராப்ரி மற்றும் கோவா ஜிலேபிகள் மாலை வேளையை நிறைவானதாக்கக்கூடிய ஓர் உன்னத கலவையாகும்.
மத்தியப்பிரதேசத்தின் சன்ஸ்கர்தானி!
ஜபல்பூர் மத்தியப்பிரதேச மாநிலத்தின் சன்ஸ்கர்தானி, அதாவது கலாச்சார தலைநகரமாக அறியப்படுகிறது. இந்நகரின் கலாச்சார சங்கம், கலை மற்றும் பண்பாட்டுத் துறைகளில் பிரபலமாக இருக்கும் பெரும்பாலான முக்கிய பெயர்களோடு வலுவான தொடர்புடையதாகக் காணப்படுகிறது. இந்தியாவின் அரசியல் சாசனத்துக்கான அசலான முகவுரையின் வடிவமைப்பு மற்றும் அலங்காரத்தில் பெரும் பங்கு வகித்தவரும், சர்வதேச அளவில் அறியப்பட்ட கலைஞருமான பியோஹர் ராம்மனோகர் சின்ஹா, ஜபல்பூரைச் சேர்ந்த பிரசித்தி பெற்ற பிரமுகர் ஆவார்.
ஸ்நூக்கர் விளையாட்டின் தாய்மண்!
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் போது ஜபல்பூரில் கண்டுபிடிக்கப்பட்டு மிகப் பிரபலமடைந்த ஸ்நூக்கர் விளையாட்டு, ஜபல்பூரின் வியக்க வைக்கும் சரித்திர நிகழ்வுகளுள் ஒன்றாகும். 1875 ஆம் ஆண்டு ஆங்கிலேய இராணுவ அதிகாரிகளின் உணவு விடுதியில் உருவாக்கப்பட்ட இந்த ஸ்நூக்கர் விளையாட்டு, ஆங்கிலேயரிடையே மிகப் பிரபலமாக இருந்த பில்லியர்ட்ஸ் விளையாட்டையே தன் மூலமாகக் கொண்டுள்ளது.
ஜபல்பூரை நோக்கிய பயணம்!
ஜபல்பூரை, வான், இரயில் மற்றும் சாலை வழி போக்குவரத்து சேவைகள் மூலம் எளிதாக அடையலாம். தனக்கென ஒரு இரயில் நிலையத்தை சொந்தமாகக் கொண்டுள்ளது இவ்வூர். மும்பை, இந்தூர் மற்றும் தில்லி ஆகிய நகரங்களிலிருந்து சீரான இடைவெளிகளில் இயக்கப்படும் விமானங்கள் வந்திறங்கும், தூம்னா விமான நிலையம் என்ற பெயரில் வழங்கப்பட்டு வரும், ஒரு விமான தளத்தையும் இங்கு காணலாம். சிறப்பான வானிலை நிலவக்கூடிய குளிர்காலமே, ஜபல்பூருக்கு பயணம் மேற்கொள்ள உகந்த காலகட்டம் ஆகும்.