ஒரிசாவின் பெரும்பாலான மக்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு விழா ஜகன்னாத் ரத யாத்திரை திருவிழா ஆகும்.
இது ஜூலை மாதங்களில் வழக்கமாக கொண்டாடப்படும். இந்த வருடத்தின் ரத யாத்திரை விழா இன்று கொண்டாடப்படுகிறது. இது பகவான் ஜகன்னாதன், அவரது தங்கை சுபத்ரா, அண்ணன் பாலபத்ரா ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்படும் ஒரு திருவிழா ஆகும்.
இதன் வேறு பெயர்கள் - குன்டிச்சா யாத்ரா, தேர்த்திருவிழா, தசாவதார, நவதின யாத்திரை.
ஏன் கொண்டாடப்படுகிறது?
ஜகன்னாதர் அவரது பிறந்த ஊரான மதுராவிற்கு வருடத்துக்கு ஒரு முறை சென்று வருவார். அந்த தினத்தை நினைவாகக் கொண்டு அவரை கொண்டாட்டத்துடன் வரவேற்பதே இந்த விழாவாகும்.
பூரியின் பிரம்மாண்ட தேர்த்திருவிழா!
இங்கு நடைபெறும் ரத யாத்திரை என்றழைக்கப்படும் தேர்களின் திருவிழாவில் கலந்து கொள்ளும் பொருட்டு ஒவ்வொரு வருடமும் ஏராளமான பக்தர்கள் பூரிக்கு வருகை புரிகின்றனர்.
இத்திருவிழாவின் போது, ஜகன்னாதர், பாலபத்ரா மற்றும் சுபத்ரா ஆகிய தெய்வங்களின் உற்சவமூர்த்தி சிலைகள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட தேர்களில் அமர்த்தி வைக்கப்பட்டு கண்டிச்சா கோயிலுக்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு, ஜகன்னாதர் கோயிலுக்கு மீண்டும் கொண்டு வரப்படுகின்றன. வழக்கமாக ஜூலை மாதத்தின் போது நடைபெறும் இத்திருவிழா, பூரி சுற்றுலா நாட்காட்டியின் மிக முக்கிய ஈர்ப்பாகும்.
பூரி மற்றும் அதன் அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்
பூரி சுற்றுலாத் துறை அதன் வருகையாளர்கள், சென்று வழிபட்டு தெய்வ அருள் பெரும் வண்ணம் எண்ணிலடங்கா கோயில்களை விருந்தளிக்கிறது. மிகப் புனிதமானதாக இந்துக்களால் கருதப்படும் இந்தியாவின் ஏழு முக்கிய வழிபாட்டு ஸ்தலங்களுள் பூரியும் ஒன்றாகும்.
உலகப்புகழ் பெற்றுள்ள ஜகன்னாதர் கோயில் தவிர்த்து, சக்ர தீர்த்தா கோயில், மௌஸிமா கோயில், சுனாரா கௌரங் கோயில், ஸ்ரீ லோக்நாத் கோயில், ஸ்ரீ கண்டிச்சா கோயில், அலர்நாத் கோயில் மற்றும் பலிஹார் சண்டி கோயில் ஆகியவையும் இந்துகளின் முக்கிய வழிபாட்டு ஸ்தலங்களாக விளங்குகின்றன.
கோவர்த்தன் மடம் போன்ற மடாலயங்கள் ஆன்மாவிற்கு பெரும் ஆறுதலை வழங்கக்கூடிய தெய்வீகத்தனமையுடன் திகழ்கின்றன. இங்குள்ள பேடி ஹனுமான் கோயில், உள்ளூர் தலப்புராணங்கள் பலவற்றைக் கொண்டிருக்கிறது.
பூரி கடற்கரை மற்றுமொரு முக்கிய சுற்றுலாத் தலமாகும். இங்கு நடைபெறும் வருடாந்தர பூரி கடற்கரை திருவிழா, பூரியின் சுற்றுலாத் துறைக்கு மிகுந்த ஊக்கமளிக்கிறது.
இந்துக்களால் மிகப் புனிதமானதாகக் கருதப்படும் இந்த கடற்கரையின் மனோகரமான காட்சி மனதை வசியப்படுத்தக்கூடியதாகும். சூரியோதயக் காட்சியை கண்டு களிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் சூரிய அஸ்தமனத்தைப் பார்ப்பதோடு தங்கள் யாத்திரையை முடித்துக் கொள்ள விரும்பும் பயணிகள் ஆகியோர் பூரி கோனார்க் கடற்கரை சாலையில் அமைந்துள்ள பாலிகாய் கடற்கரைக்குச் சென்று தங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
பூரியில் ஆன்மீக சுவாரஸ்யம் மிகுந்த மற்றொரு இடம், இந்துக்களின் சுடுகாடாக விளங்கும் சுவர்கத்வார் ஆகும். பூரியிலிருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ள ரகுராஜ்பூர், இந்தியாவின் கலாச்சார தலைநகரமாக அழைக்கப்படக்கூடியதாகும்.
ஒரிஸ்ஸாவின் மிகப் பிரபலமான யாத்ரீக ஸ்தலமாகிய ஷகிகோபால், பூரியிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது. நீரோடு உறவாடி மகிழ்வதில் அலாதி விருப்பம் உடையவர்கள் மற்றும் நீர்ச்சறுக்கு விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களை வெகுவாக ஈர்க்கக்கூடியதான சதபடா, பூரியிலிருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் அமையப்பெற்றுள்ளது. பூரியிலிருந்து சதபடாவுக்கு ஏராளமான பேருந்துகள் மற்றும் டாக்ஸிக்கள் இயக்கப்படுகின்றன.
பூரியின் கைவினைப்பொருட்கள்
பூரியின் கைவினைப்பொருட்கள் மற்றும் குடிசைத்தொழில் நிறுவனங்கள் உலகம் முழுவதும் பிரபலமாக அறியப்படுகின்றன. இவர்கள் படைப்பில் உருவான ஜகன்னாதர் கோயில் மிகப் பிரசித்தி பெற்றதொரு கலைப்படைப்பாகத் திகழ்கிறது.
கல் பதிப்பு, மேலணி வேலைப்பாடுகள், பட்டா சித்திரம், மர செதுக்கல்கள், நவீன ஒட்டு வேலைப்பாடுகள், மண்பாண்டங்கள், வெண்கலப்பொருட்கள் மற்றும் கடற்சிப்பிகளால் செய்யப்பட்ட கலைப்பொருட்கள் ஆகியவை, பூரியின் தொன்று தொட்டு வரும் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துக்கு மேலும் அணி சேர்ப்பதாகத் திகழ்கின்றன.
ஏராளமான சிறுதொழில் நிறுவனங்களை இப்பகுதியில் காணலாம். அழகிய கைவேலைப்பாடுகளைக் கொண்டிருக்கும் கலைப்பொருட்கள் சிலவற்றையேனும் மறக்காமல் வாங்கிச் செல்லுங்கள்.
மேலணி வேலைப்பாடுகள் கொண்ட கைவினைப் பொருட்களை வாங்க விரும்புவோர்க்கு, பூரியிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள பிப்பிலியைக் காட்டிலும் சிறந்த இடம் வேறொன்றில்லை.