சத்திஸ்ஹர் மாநிலத்தில் உள்ள பஸ்தர் மாவட்டத்தின் தலைநகரமே இந்த ஜக்தல்பூர். ரம்மியமான இயற்கைக்காட்சிகள், பசுமையான மலைப்பகுதிகள், ஆழமான பள்ளத்தாக்குகள், அடர்ந்த காடுகள், ஓடைகள், நீர்வீழ்ச்சிகள், குகைகள், இயற்கைப்பூங்காக்கள், கம்பீரமான வரலாற்றுச்சின்னங்கள், கனிம வளம், உல்லாசமான வாழ்க்கை முறை மற்றும் ஆன்மீக அமைதி போன்ற எல்லா சிறப்பம்சங்களையும் இந்த ஜக்தல்பூர் தன்னுள் கொண்டிருக்கிறது.
ஜக்தல்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலா கவர்ச்சிகள்
எல்லையற்ற இயற்கை எழிலையும், பரந்து காணப்படும் காட்டுயிர் பூங்காக்களையும், பிரசித்தமான நீர்வீழ்ச்சிகளையும் கொண்டுள்ள இந்த ஜக்தல்பூர் பாரம்பரிய நாட்டுப்புற கலையம்சங்களுக்கும் புகழ் பெற்றுள்ளது. குறிப்பாக தம்தரி எனும் இடம் பல்வேறு சுற்றுலா அம்சங்களுடன் பயணிகளை வரவேற்கிறது. கங்கேர் வேலி நேஷனல் பார்க், இந்திரவதி நேஷனல் பார்க், சித்ரகொடே நீர்வீழ்ச்சி, தீரத்கர் நீர்வீழ்ச்சி, தல்பட் சாகர் ஏரி(இங்கு ஒரு இசை நீரூற்று உள்ளது)என்று இங்குள்ள பல சுற்றுலா அம்சங்களை பட்டியலிடலாம்.
கலை மற்றும் கைவினைப்பொருட்கள்!
ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குரிய கலாச்சாரம், நாகரிகம், பாரம்பரிய போன்றவற்றை ஆவணப்படுத்தும் அம்சங்களே கலை மற்றும் கைவினைப்படைப்புகள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இப்பகுதியை சேர்ந்த பழங்குடி மற்றும் நாட்டுப்புற கைவினைக்கலைஞர்கள் தங்களது கற்பனை, எண்ணம், அழகுணர்ச்சி போன்றவற்றை கலந்து கைவினைப்பொருட்களை படைக்கின்றனர். அலங்காரத்துக்காகவே உருவாக்கப்படும் கைவினைப்பொருட்கள் மட்டுமன்றி வீட்டு உபயோகப்பொருட்களையும்கூட இவர்கள் கலையம்சத்துடன் கூடிய அலங்காரப்பொருட்கள் போன்று உருவாக்குவது பார்வையாளர்கள் அனைவரையுமே கவரும் ஒரு அம்சமாகும்.
கடவுள்களை வணங்குவதற்கு இவர்கள் பின்பற்றும் சடங்குமுறைகள் மற்றும் அதற்கான பொருட்கள் போன்றவையும் ஒரு தனி அழகுணர்ச்சியுடன் மிளிர்கின்றன. மொத்தத்தில் இவர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சங்களிலும் கலைப்பார்வை என்பது இரண்டற கலந்துள்ளது. ஜக்தல்பூரின் பழங்குடி மற்றும் நாட்டார்கலை பற்றி விரிவாக நோக்கும்போது இவர்களின் நெடிய பாரம்பரியம் பற்றிய அறிமுகம் நமக்கு கிடைக்கிறது. இந்த கலைஞர்கள் பின்பற்றும் முறைகள் யாவுமே திடீரென்று உருவாக்கப்பட்டவை அல்ல என்பதை புரிந்து கொள்வது நமக்கு சிரமமாக இல்லை. காலங்காலமாக, தலைமுறையாக மாறி மாறி வந்திருக்கும் ஒரு 'இன அடையாளமாக' அல்லது 'சொத்தாக' இந்த கலைத்திறன்கள் இவர்களுக்கு வாய்த்திருக்கின்றன.
களிமண்ணையும், மரத்தையும், கல்லையும், உலோகத்தையும் பிசைந்து, குடைந்து, செதுக்கி, உருக்கி - அசர வைக்கும் படைப்புகளாக மாற்றும் இவர்களது கைத்திறனை இங்கு நேரிலும் பார்க்கலாம் அல்லது அப்படி உருவாக்கப்பட்ட கலைப்படைப்புகளில் தரிசிக்கலாம். ஜக்தல்பூர் நகர கலைஞர்கள் உலோக வேலைப்பாடுகளில் கை தேர்ந்தவர்களாக உள்ளனர். தலைமுறை தலைமுறையாக அவர்கள் இந்த தொழிலில் சிறந்து விளங்குகின்றனர். பாரம்பரிய பாணியில் மட்டும் அல்லது நவீன அம்சங்களை பயன்படுத்தியும் இவர்கள் அற்புதமான உலோகச்சிலைகள் மற்றும் இதர கலைப்படைப்புகளை உருவாக்குகின்றனர். உலோகத்தால் ஆன நாட்டுப்புற தெய்வச்சிலைகள், ஆயுதந்தாங்கிய போர்வீரர்கள், குதிரைகள்,பன்றிகள் மற்றும் பலவித பறவைகள் போன்ற உருவங்கள் இவர்களால் செய்யப்படுகின்றன. பெரும்பாலும் இவை உள் அலங்காரத்துக்கோ, பூஜைகளுக்கோ அல்லது அடையாளப்பொருளாகவோ பயன்படுத்தப்படுகின்றன.
மக்கள் நாகரிகம் மற்றும் கலாச்சாரம்!
ஜக்தல்பூரின் மக்கள் பல்வேறு பழங்குடி இனப்பிரிவுகளை சேர்ந்தவர்களாக உள்ளனர். கோண்ட், முரியா, ஹல்பா மற்றும் அபுஜ்மரியா பொன்ற இனத்தவர்கள் இங்கு வசிக்கின்றனர். இந்தியாவிலேயே மிகப்பெரிய பழங்குடி இனமாக கருதப்படும் கோண்ட் இனத்தார் ஜக்தல்பூரில் அதிகம் எண்ணிக்கையில் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கோய்டோரியா என்றும் அழைக்கப்படும் இவர்கள் ஒரு காலத்தி நாடோடி மக்களாக வாழ்ந்திருக்கின்றனர்.
முரியா எனும் உட்பிரிவையும் இந்த கோண்ட் பழங்குடி இனம் உள்ளடக்கியிருக்கிறது. இந்த முரியா இன மக்கள், நாடோடிகளாக வாழ்ந்த கோண்ட் இன மக்களைப்போல் அல்லாது நிரந்தர ஊர்களில் வசித்தவர்கள் ஆவர். இவர்கள் விவசாயம், வேட்டை மற்றும் காட்டு உணவு போன்றவற்றை நம்பி வாழ்ந்துள்ளனர். பெரும்பாலும் ஏழைகளான இந்த முரியா இனத்தவர் மண் பூசப்பட்ட மூங்கில் குடிசை வீடுகளில் வசிக்கின்றனர். ஹல்பா எனப்படும் மற்றொரு பழங்குடி இன மக்கல் செல்வந்தர்களாகவும், நிலச்சுவான்தாரர்களாகவும் வாழ்கின்றனர்.
ஹல்பா இனத்தவர்கள் உள்ளூர் சமூகத்தில் முக்கிய அந்தஸ்து வாய்க்கப்பட்டவர்களாக உள்ளனர். அதற்கேற்ப இவர்களது உடை, மொழி மற்றும் கலாச்சாரம் போன்றவை நேர்த்தியான இயல்புகளை கொண்டவையாக உள்ளன. அபுஜ்மாரியா எனும் மற்றொரு பழங்குடியினர் ஜக்தல்பூர் மாவட்டத்திலுள்ள அபுஜ்மார் மற்றும் குத்ருமார் மலைகளில் வசிக்கின்றனர்.
எப்படி செல்வது ஜக்தல்பூருக்கு?
ரயில் மற்றும் சாலை மார்க்கமாக எல்லா முக்கிய நகரங்களுடனும் ஜக்தல்பூர் நல்ல முறையில் இணைக்கப்பட்டிருக்கிறது.