ராஜஸ்தான் மாநிலத்தில் தலைநகரான ஜெய்ப்பூரில் இருந்து 575 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது ஜெய்சால்மர் நகரம். தங்கத்தில் தான் கட்டப்பட்டதோ என நம்மை வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் இந்நகரத்தில் இருக்கும் எல்லாப் பழமையான கோட்டைகளும், கட்டிடங்களும் மஞ்சள் நிற மணல் கற்களால் கட்டப்பட்டுள்ளன. எல்லா முக்கியமான ராஜஸ்தான நகரங்களைப்போலவே இதுவும் தொன்மையான வீர வரலாற்றைக் கொண்டுள்ளது. இதன் ஆயிரம் ஆண்டு கால வரலாற்றில் கணக்கட்ட்ற படைஎடுப்புக்களையும், வெற்றிக்களிப்பையும், மன்னர்களையும் பார்த்திருக்கும் இந்நகரம் இன்று சுற்றுலாப்பயணிகளை நாள்தோறும் இன்முகத்தோடு வரவேற்று மகிழ்விக்கிறது. வாருங்கள் தங்க நகரத்திற்கு சென்று வரலாம்.
ஜெய்சால்மர் கோட்டை:
ஜெய்சால்மர் கோட்டை புகைப்படம்: Adrian Sulc
உலகில் இருக்கும் மிகப்பெரிய கோட்டை வளாகங்களுள் ஒன்றான ஜெய்சால்மர் கோட்டை கி.பி. 1156 ஆண்டு கட்டப்பட்டிருக்கிறது. ஜெய்சால்மர் நகரத்தின் நடுவில் திரிகுட மலையின் மேல் கம்பீரமாக இது வீற்றிருக்கிறது. இக்கோட்டையினுள் ராஜ் மஹால் என அழைக்கப்படும் ராஜ அரண்மனை உள்ளது. அரச குடும்பத்தினர் வசித்து வந்த இந்த அரண்மனையினுள் அற்புதமான வேலைப்பாடுகள் நிறைந்த அரச கட்டில், சிம்மாசனம், அரச குடும்பத்தினர் பயன்படுத்திய பொருட்கள் போன்றவற்றை இன்றும் நாம் காணலாம். அது தவிர லட்சுமிநாதர் ஆலயமும் பெரும் செல்வம் படைத்த வணிகர்கள் ஓய்வெடுப்பதற்காக கட்டிய ஹவேளிக்களும் இந்தனுள் உள்ளன.
புகைப்படம்: Daniel Mennerich
இங்கிருக்கும் ஹவேளிக்களுள் ஒன்றான வியாஸ் ஹவேளி 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கிறது அதில் இன்றும் அதை கட்டியவரின் வம்சா வழியினர் வசித்துவருகின்றனர். நுணுக்கமான வெளிப்பாடுகள் உள்ள கற்தூண்கள், மரக்கதவுகள், அலங்கார வளைவுகள் என ராஜஸ்தானின் கட்டிடக்கலையின் சான்றாக இந்த ஹவேளிக்கள் திகழ்கின்றன.
படா பாக்:
படா பாக் புகைப்படம்: Ankit khare
பெரிய தோட்டம் என அர்த்தப்படும் இந்த இடம் ஜெய்சால்மர் நகரத்தில் இருந்து 6கி.மீ தொலைவில். அமைந்திருக்கிறது. ஜெய்சால்மர் நகரத்தை தோற்றுவித்த மகாராஜா ஜெய்சால் சிங்கின் வழிவந்தவரான மகாராஜா இரண்டாம் ஜெய் சிங் பாலைவனத்தின் நடுவே ஒரு நந்தவனத்தை உருவாக்க விரும்பி ஓரிடத்தில் மிகப்பெரிய ஏரி ஒன்றையும் அதனைசுற்றி சத்த்ரிக்கள் எனப்படும் ஓய்வரைகளையும் கட்டியுள்ளார். அவரது கனவான அழகிய தோட்டம் அவரின் மறைவுக்கு பின் சரியான பராமரிப்பின்றி அழிந்து விட்டாலும் இன்றும் படா பாக்கை சுற்றி சத்த்ரிக்கள் நிலைத்து இருக்கின்றன. மாலை நேரத்தில் இதமான வெயில் நிலவும் வேலையில் இங்கே சென்று பாலைவனத்தின் அழகை ரசிக்கலாம்.
சலீம் சிங் ஹவேளி:
சலீம் சிங் ஹவேளி புகைப்படம்: Ashwin Kumar
18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த சலீம் சிங் ஹவேளியானது அதன் தனித்துவமான வடிவமைப்பினால் நம்மை ஆச்சர்யம் கொள்ளசெய்கிறது. இதன் முதல் தளம் குறுகியதாகவும் இரண்டாம் தளம் மிகப்பெரியதாகவும் நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட அலங்கார வளைவுகளை கொண்டதாகவும் இருக்கிறது. இதில் மண்ணை மேலும் ஆச்சரியம் கொள்ள வைக்கும் செய்தி என்னவென்றால் இதன் மொத்த கட்டுமானத்திலும் கான்கிரெட் கலவையோ, சிமேண்டோ பயன்படுத்தப்படவே இல்லை. நம்பவே முடியாத அளவு நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த இந்த இடத்தை ராஜஸ்தான் பயணத்தின் கட்டாயம் சென்று பாருங்கள்.
குல்தாரா-சபிக்கப்பட்ட கிராமம்:
புகைப்படம்: Suman Wadhwa
ஜெய்சால்மர் நகரத்தில் இருந்து 15 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது குல்தாரா என்ற கைவிடப்பட்ட கிராமம். நேரான, அகலமான வீதிகள், தெளிவான திட்டமிடலுடன் கட்டப்பட்ட கட்டிடங்கள் என நாகரீகம் வளர்த்த ஒரு நகரமாகவே வரலாற்று காலத்தில் இந்த குல்தாரா திகழ்ந்திருக்கிறது. குல்தாரா கிராமத்தின் தலைவரின் மகள் மீது மோகம் கொண்டு ராஜஸ்தான் தீவான் அவளை அடைய திட்டமிட்டதாகவும் அப்படி நடக்காமல் இருக்க ஒரே இரவில் குல்தாரா கிராமத்தை சேர்ந்தவர்களும் அதனை சுற்றியுள்ள 84 குக்கிராமங்களையும் சேர்ந்த அனைவரும் ஒரே இரவில் ஊரை காலி செய்துவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. வேறுயாராவது தங்கள் கிராமத்தை ஆக்கிரமிக்க நினைத்தால் அவர்கள் இறப்பை சந்திப்பார்கள் என கிராம மக்கள் குல்தாராவை சபித்து விட்டு சென்றதாகவும் நம்பப்படுகிறது. 18ஆம் நூற்றாண்டில் அவர்கள் காலி செய்தபிறகு இன்றும் வசிப்பார் யாரும் இன்றி அமானுஷ்யமாக காட்சியளிக்கிறது குல்தாரா.
கதிசிசார் ஏரி:
கதிசிசார் ஏரி புகைப்படம்: Terry Presley
1367ஆம் ஆண்டு ராவல் கதிசி சிங் என்பவரால் உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த கதிசிசார் ஏரி. பாலைவனத்தின் நடுவே அமைத்திருக்கும் ஜெய்சால்மர் நகரத்தின் முக்கிய நீர் ஆதராமாகவும் இருக்கும் இந்த ஏரியை சுற்றிலும் நிறைய குட்டிகுட்டி கோயில்கள் மற்றும் மண்டபங்கள் உள்ளன. ராஜஸ்தானில் பறவைகளை புகைப்படம் எடுக்க சிறந்த இடங்களில் ஒன்றாக இந்த ஏரி பார்க்கப்படுகிறது. குளிர்காலத்தில் இந்த ஏரிக்கு அதிகமான பறவைகள் வருகின்றன. சூரிய உதயத்தின் போது தங்கக்குலம் போல காட்சியளிக்கும் இந்த ஏரியின் அழகு மண்ணை மெய்மறக்கச்செய்யும்.
எப்படி அடையலாம் ஜெயசால்மரை?:
ஜெய்சால்மர் நகரம் ரயில் மூலமாக ஜெய்பூர், டெல்லி, மும்பை போன்ற நகரங்களுடன் நேரடியாக இணைக்கப்பட்டிருக்கிறது. இங்கிருக்கும் விமான நிலையம் ராணுவத்திற்கு சொந்தமானது என்பதால் தனியார் விமானங்களுக்கு அனுமதி இல்லை. எனினும் ஜெய்பூர் வரை விமானம் மூலம் வந்து அங்கிருந்து பேருந்து அல்லது கார் மூலம் ஜெய்சால்மர் நகரத்தை அடையலாம்.