கல்லணை. இந்தியாவின் பெருமைகளுள் ஒன்று முக்கியமாக சோழர்களின் வரலாற்றில் அன்றும் இன்றும் என்றும் நீடித்து விளங்குவது இந்த கல்லணை. இந்த கல்லணையின் கட்டுமான ரகசியம் இன்றளவும் வெளியில் தெரியாத புதிராகவே இருக்கிறது. ஆனால், அதில் மணல் அரிப்பு, மிகப் பெரிய கற்கள் பயன்பாடு உள்ளிட்ட ஒரு சிலவிசயங்கள் நமக்கு தெரிய வருகின்றன. இப்படி ஒரு பிரம்மாண்ட அணையைப் பற்றி தெரிந்ததும் இங்கிலாந்து ராணியே வியந்தாராம். ஆங்கிலேயர் காலத்தில் கல்லணைக்கு மட்டுமே தனி நிர்வாகம் இருந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பல சாதனைகளை கொண்டுள்ள இந்த கல்லணைக்கு எப்படி செல்வது, அருகில் என்னவெல்லாம் காண்பது உள்ளிட்ட தகவல்களை இந்த பதிவில் தொடர்ந்து காண்போம். அதோடு கல்லணையின் ரகசியங்கள் சிலவற்றையும் தெரிந்து கொள்வோம்.
எங்குள்ளது
கிராண்ட் அணைக்கட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கல்லணை சோழர்களின் முக்கிய மன்னராகிய கரிகால் சோழரால் கட்டப்பட்டது என்பது வரலாற்று தகவல். இது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காவிரிக்கு குறுக்கே கட்டப்பட்ட அழகிய அணை.
திருச்சி மாநகரத்திலிருந்து 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த அணை.
அணைக்கு செல்லும் முன் தெரிந்துகொள்ள வேண்டியவை
➫ கல்லணை வாரத்தின் எல்லா நாட்களிலும் கண்டு களிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது.
➫ காலை 10 மணியிலிருந்து மாலை 7 மணி வரைக்கும் சுற்றுலாப் பயணிகள் இங்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
➫ அணையைப் பார்வையிட அனுமதிக் கட்டணம் என எதுவும் இல்லை.
➫ பூங்காவுக்கு கட்டணம் பெறப்படுகிறது.
➫ வரலாற்று ஆர்வமுள்ளவர்களும், இயற்கை விரும்பிகளும் இங்கு செல்லலாம்.
சரி கொஞ்சம் வரலாற்றையும் காண்போம்
சோழ மன்னர்களில் மாவீரன் கரிகால் சோழன். அவர்தான் இந்த கல்லணையைக் கட்டினார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தவிசயம்தான்.
இது உலகின் மிகப் பழமையான அணை என்பதும், இன்று வரை புழக்கத்தில் இருக்கிறது என்பதும் இதன் புகழை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்துள்ளது.
1900 ஆண்டுகள் இதன் வயது என்றால் அது கொஞ்சம் பிரம்மிப்பாகதான் இருக்கிறது. நீங்கள் நேரடியாக சென்று இதைப் பார்க்கும்போது உங்களுக்குள் ஒரு இனம் புரியாத உணர்வு ஏற்படும். அதே உணர்வு உலகையே அடக்கி ஆண்ட இங்கிலாந்து பரம்பரையின் ராணிக்கும் ஏற்பட்டது.
பழமை
இந்த அணை கரிகாலனால் 2ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. மேலும் இது மிகவும் அழகானதாக இருக்கிறது. சுற்றுலாத் தளமாக இன்று வரை இயங்கிக்கொண்டிருக்கிறது. உலகின் மிகப் பழமையான அணை இது.
தொழில்நுட்பம்
இந்த அணையை கண்டு இங்கிலாந்து மகாராணியே வியந்த கதை நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்போது இந்தியாவின் வளங்களை கொள்ளையடித்து தங்கள் நாட்டுக்கு கொண்டு சென்றனர் இங்கிலாந்து நாட்டினர். அப்படி கொண்டு செல்லும்போது ஒவ்வொரு பிரம்மாண்டத்தையும் இங்கிலாந்து ராணி கேட்டுத் தெரிந்துகொண்டுள்ளார்.
அறிவியலிலும் மேம்பாடு
இந்தியாவின் அறிவியல் மேம்பாட்டைக் கண்டு வியந்துள்ளார் ராணி. ஆனால் இவர்கள் ஏன் இப்படி தங்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் இருக்கிறார்கள் என்றும் நினைத்துக் கொண்டுள்ளார். அருமை தெரியாதவர்களுக்கு எவ்வளவு சொல்லியும் பயனில்லை. நாம் அந்த அணையின் தொழில்நுட்பத்தை தெரிந்துகொள்ளவேண்டுமென்று திருச்சி சுற்றுவட்டாரத்தை நிர்வகிக்கும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் ராணி.
உலகையே வியக்கச் செய்த அணை
ஆனால் மாதங்கள் பல கடந்தும் இது பற்றிய விவரங்கள் தெரியவே இல்லை. அப்படி ஒரு ஆங்கிலப் பொறியாளருக்கு இதன் பிடி கிடைத்தது. அவர்தான் சர் ஆர்தர் காட்டன். இவர்தான் இந்திய நீர் பாசனத்தின் தந்தை எனப் போற்றப்படுகிறார்.
ஆங்கிலேயர்களின் கண்டுபிடிப்பு
ஆங்கிலேயர்கள் பல இன்னல்களை இந்தியர்களுக்கு கொடுத்தாலும், அவர்களால் இன்றைய இந்தியாவுக்கு மிக அதிக அளவில் பயன் கிடைத்துள்ளதையும் மறுக்க முடியாது. அப்படி ஒரு அற்புதத்தைதான் ஆர்தர் காட்டன் கல்லணைக்கு செய்தார்.
இடிக்கப்பட்டிருக்க வேண்டிய கல்லணை
ஒருவேளை கல்லணை நீர் பாசனத்துக்கு பயன்படவில்லை என்றால் இன்று இப்படி ஒரு விசயம் இருந்திருக்கவே இருந்திருக்காதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. பயனற்று கிடந்த பல இடங்களை நீர் வழித்தடங்கள் மூலம் இணைத்தவர் அப்போதைய காவிரி பாசன பகுதியின் தனிப் பொறுப்பாளரான ஆர்தர் காட்டன்.
உலகுக்கு உணர்த்திய ஆர்தர்
ஆர்தர் எனும் பொறியாளர்தான் இந்த அணையின் மகிமையை உலகுக்கு உணர்த்தியவர். இதன் தொழில்நுட்பம் எப்படி பெரிய விசயம் என்பதை இந்தியர்களாகிய நமக்கு உணர்த்தியவரும் இவர்தான்.
தொழில் நுட்பம்
அதிக எடையுள்ள கற்களை அடுக்கி அடுக்கி இந்த அணையைக் கட்டியுள்ளனர். அடடே. கல்லிலா என ஆச்சர்ய படுவீர்கள் தானே.. அதைவிட ஆச்சர்யம் கல்லைத் தாங்கி நிற்பது மண். எந்தவித பிடிப்பும் இல்லாமல் அவ்வளவு எடை கொண்ட கற்கள் எப்படி நிற்கிறது என்ற கேள்வி எழுகிறதா?
பிடிப்பு இருக்கிறது
பிடிப்பு இல்லாமல் இல்லை. அது மணலினுள் புதைந்துள்ள கற்களில் மறைந்துள்ளது. அந்த ஒரு விசயத்தை மட்டும்தான் ஆங்கிலேயர்கள் கண்டுபிடிக்கவில்லை. இப்போது கற்களை ஒட்டச் செய்யும் வேதிப் பொருள்கள் பல இருக்கின்றன. ஆனால், 2000 வருடங்களுக்கு முன்பு... இதனால்தான் சொல்கிறோம். சோழர்கள் விஞ்ஞானத்தை வென்றவர்கள் என்று. சரி வரலாற்றை மட்டும் தெரிந்துகொண்டு இதன் அழகை காண மறந்துவிடப் போகிறீர்கள்.. வாருங்கள்..
முக்கொம்பு
ஒரு நாள் முழுவதும் குழந்தைகளுடன் ஜாலியாக சுற்றித் திரிய திருச்சியில் ஏற்ற இடம் முக்கொம்பு தான். காவிரி ஆறானது காவிரி, கொள்ளிடம் என இரண்டாக பிரியும் இடம் தான் முக்கொம்பு.
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த முக்கொம்புவில் சிறுவர் பூங்கா அமைந்திருப்பது, அழகிய மீன்களை காணும் நிகழ்வு என நிறைய பொழுது போக்கும் அம்சங்கள் இருக்கின்றன். நேரம் போவதே தெரியாத வகையில் இந்த பயணம் அமையும்.
அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்
➫ மலைக்கோட்டை கோவில்
கல்லணையிலிருந்து 1 கிமீ தொலைவில் அமைந்துள்ளது
➫ ஜம்புகேஸ்வரர் கோவில்
கல்லணையிலிருந்து 2 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.
➫ ரங்கநாத சுவாமி கோவில்
கல்லணையிலிருந்து 3 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. திருச்சி நகரிலிருந்து 7 கிமீ தொலைவு ஆகும்.