மகாவிஷ்ணு பல அவதாரங்களை எடுத்துள்ளார். அவற்றில் ஒன்றே கிருஷ்ண அவதாரம். தேவகியின் கருவில் உதித்தது முதல் குழந்தையாய் மண்ணில் பிறப்பது வரை பல போராட்டங்களை சந்தித்து இருக்கிறார். அவர் பிறக்கும் முன்பே அவரை காத்திருந்தார் அவரது தாய்மாமன் கம்சன். அதையும் மீறி ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்துடன் கூடிய அஷ்டமி திதியில் அவரது அவதாரம் நிகழ்ந்தது. இந்நிகழ்வு நடந்த தினமே கிருஷ்ண ஜெயந்தி என நாடுமுழுவதும் நாளை கொண்டாடப்படவுள்ளது. இந்நாளில் தென்னிந்தியாவிலேயே பெரிய கிருஷ்ணர் சிலை உள்ள கோவிலில் தரிசிக்கச் செல்வோம் வாங்க.
எங்கே உள்ளது ?
கன்னியாகுமரியில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தொலைவில் கொளச்சலுக்கு அடுத்து அமைந்துள்ளது திப்பிறமலை. மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு அங்கமான இத்தலத்திலேயே தென்னிந்தியாவில் பிரசிதிபெற்ற கிருஷ்ணர் கோவில் வீற்றுள்ளது. கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலில் இருந்து திப்பிறமலை அருகே உள்ள கருங்கல் செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.
தல சிறப்பு
இத்தல இறைவன் பாலகிருஷ்ணன் என்னும் நாமத்தில் அழைக்கப்படுகிறார். தென்னிந்தியாவிலேயே இங்குள்ள கிருஷ்ணர் சிலை மட்டுமே சுமார் 13 அடி உயரம் கொண்ட பெரிய சிலையாகும். இது தன்னை பெற்றெடுத்த தாய், தந்தையருக்கு கருவில் இருக்கும்போதே விஸ்வரூப காட்சி அளித்த தலமாக கருதப்படுகிறது. எனவே இத்தலம் கருமாணித்தாழ்வார் ஸ்ரீகிருஷ்ணன் கோவில் என்று அழைக்கப்படுகிறது.
தானாக வளரும் கிருஷ்ண பகவான்
திப்பிரமலை கிருஷ்ணர் தானாக வளர்வதாக பக்தர்களால் நம்பப்படகிறது. மேலும், கிருஷ்ணரின் வளர்ச்சிக்கு ஏற்ப இத்தலத்தின் கூறை மூன்று முறை இடித்து உயர்த்தப்பட்டதப்பட்டுள்ளது. தானாக வளர்ந்து கொண்டிருந்த இந்த சிலையை பூஜித்த முனிவர் ஒருவர் பின், அதனைக் கட்டுப்படுத்தியதாகவும் உள்ளூர் மக்களிடையே கருத்துள்ளது.
சேர நாட்டுக் கட்டிடக் கலை
திப்பிரமலை கிருண்ண பகவான் கோவில் சேர நாட்டுக் கட்டிடக் கலையுடன் கட்டப்பட்டுள்ளது. வட்ட வடிவிலான கோவில், கூட்பு வடிவ கோபுரம், நுழைவு வாசலுக்கு முன்பே பலிபீடம் என இத்தலம் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலின் அருகிலேயே கலிகண்ட மகாதேவர் சிவன் கோவிலும் உள்ளது.
வழிபாடுகள்
குழந்தை வரம் இல்லாதோர் இத்தல இறைவனை ஜெயந்தி தினத்தில் வழிபட்டு பிரார்த்தனை செய்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது தல நம்பிக்கை. பக்தர்கள், வெண்ணை, சீடை, முருக்கு உள்ளிட்டவற்றை படைத்து, நெய்வேத்தியம் ஏற்றினால் பலன் உண்டாகும்.
தலவரலாறு
கிருஷ்ண லீலைகள் குறித்து புராண இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்று கண்ணன் சிறுவயதில் வெண்ணையை திருடி உண்டதை அறிந்த தாய் யெசோதா கண்ணனை கண்டித்தார். அப்போது, கண்ணன், குழந்தையாகவே கையில் வெண்ணையுடன் விஸ்வரூபம் எடுத்து யெசோதாவிற்கு காட்சி அளித்தார். அதனை அடிப்படையாகக் கொண்டே இத்தலம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
திருவிழா
கிருஷ்ண ஜெயந்தி தினத்தை முன்னிட்டு இப்பகுதி மக்களால் மாபெரும் அளவிலான திருவிழா கொண்டாடுவது வழக்கம். புரட்டாசி சனிக்கிழமை, அமாவாசை தினங்களில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இங்கே வருகை தந்து பாலகிருஷ்ணரை வழிபட்டுச் செல்வர்.
எப்படிச் செல்வது ?
திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, கோவை, சென்னை என மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்ட மாநிலங்களுடனும் கன்னியாகுமரி மாவட்டம் போக்குவரத்தில் நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் இருந்து கருங்கல் திப்பிரமலை கோவிலுக்குச் செல்ல உள்ளூர் பேருந்துகள் உள்ளன.