பூம்புகார் என்றாலே கடற்கரைதான் நினைவுக்கு வரும். அதே நேரத்தில் இது தமிழரின் வாழ்வியல் சொல்லும் நகரமும் கூட. கடற்கரை பகுதியில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் உலாவித்திரிவதற்கு மிகவும் ஏற்ற கடற்கரையாக பூம்புகார் கடற்கரை அமைந்துள்ளது. நகரச்சந்தடியிலிருந்து விலகி காணப்படுவதும் ஒரு கூடுதல் விசேஷம்.இருப்பினும் அலைகள் கடுமையாக இருக்கும் என்பதால் இக்கடற்கரையில் நீச்சல் விளையாட்டுகளை தவிர்ப்பது அவசியம். ஒரு காலத்தில் கிரேக்கம், பாரசீகம் போன்ற நாடுகளிலிருந்து கப்பல்கள் வந்து நின்ற தமிழர் நாகரிகத்தின் தொன்மையான துறைமுகத்தினை மனக்கண்ணில் கொண்டு வந்தால் அந்த ஸ்தலத்தில் நிற்கின்றோம் என்ற சிலிர்ப்பை நிச்சயம் நம்மால் அனுபவிக்க முடியும். சுற்றுலாத்துறையிடமிருந்து வசதிகளையும் திட்டங்களையும் மேலும் எதிர்பார்க்கும் ஒரு பாரம்பரிய ஸ்தலமாக இந்த கடற்கரை காத்திருக்கிறது.
நகர நுழைவாயில்
பழமையான இந்த நகர நுழைவாயில் அமைப்பு தரங்கம்பாடியில் அமைந்துள்ளது. இது1792ம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் கட்டத்துவங்கப்பட்டு டேனிஷ் ஆட்சியாளர்களால் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது.
ஐரோப்பிய நகரங்களைப் போல
ஐரோப்பிய நகரங்களில் காணப்படும் நகர வாயில்களை போன்று இது வடிவமைக்கப்பட்டிருப்பதால் கட்டிடக்கலை ரசிகர்கள் விரும்பி ரசிக்கும் ஒரு அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாசிலாமணி நாதர் கோயில்
மாசிலாமணி நாதர் கோயில் எனப்படும் இந்த புராதனமான கோயில் 1305ம் ஆண்டில் மாறவர்ம குலசேகர பாண்டியன் எனும் பாண்டியகுல மன்னரால் கட்டப்பட்டிருக்கிறது. அக்காலத்திய தமிழ் மண்ணின் கோயிற்கலை மரபின் உன்னதமான சான்றாய் இக்கோயில் காலத்தே நீடித்து கடலை நோக்கியவாறு வீற்றிருக்கிறது.
பழமை
பூம்புகார் நகரை ஒட்டியே தரங்கம்பாடி எனும் மற்றொரு ஊரில் இந்த கோயில் உள்ளது. திருக்கடையூர், தில்லையாடி வழியாக பூம்புகார் செல்வதற்கு முன்னரோ அல்லது திரும்பும் வழியிலோ இக்கோயிலை தரிசிக்கலாம். இக்கோயிலின் முன்புற அமைப்பின் பெரும்பகுதி அலைகளால் சேதப்படுத்தப்பட்டுவிட்டாலும் இதன் பழமையை இன்றும் நாம் கண்டு ரசிக்கலாம்.
சிலப்பதிகார கலைக்கூடம்
7 அடுக்குகளை கொண்ட கோபுர அமைப்புடன் கலைநயத்துடன் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த சிலப்பதிகார கலைக்கூடம் மற்றும் அருங்காட்சியக வளாகம் பூம்புகார் சுற்றுலாத்தலத்தில் பிரதான கவர்ச்சி அம்சமாக பயணிகளை ஈர்க்கிறது. தமிழின் முக்கியமான பெருங்காப்பியமான சிலப்பதிகாரத்தை கௌரவிக்கும் வண்ணம் தமிழக அரசால் 1973ம் ஆண்டு இந்த அற்புதமான கலைக்கூடம் நந்தவனம் போன்ற வளாகத்தில் எழுப்பப்பட்டிருக்கிறது.
வரவேற்பது யார் என நினைக்கிறீர்கள்
காப்பிய நாயகன், நாயகியான கோவலன் மற்றும் கண்ணகி சிலைகள் வளாகத்தின் வாசலிலேயே நம்மை வரவேற்கின்றனர். கலைக்கூட மாளிகையின் கோபுர வடிவமைப்பு 50 அடி உயரம் கொண்டதாக காட்சியளிக்கிறது. 8 அடி உயரம் கொண்ட கலசங்களும் கோபுரத்தின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ளன.
புடைப்பு சிற்பங்கள்
சிலப்பதிகாரகாட்சிகள் இந்த கலைக்கூடத்தின் சுவர்களில் புடைப்புச்சிற்பங்களாக பொதிக்கப்பட்டுள்ளன. இவை மாமல்லபுரம் சிற்பக்கல்லூரி மாணவர்களால் வடிக்கப்பட்டவையாகும். இருபுறமும் கண்ணகி மற்றும் மாதவி சிலைகள் வீற்றிருக்க சிலம்பு வடிவத்தில் அமைக்கப்பட்ட ஒரு தடாகம் ஒன்றும் இந்த வளாகத்தில் உள்ளது.
மகரத்தோரணவாயில்
22 அடி உயரத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் மகரத்தோரணவாயில் அமைப்பு வளாகத்தின் வாசல்பகுதியில் கலையம்சத்துடன் காட்சியளிக்கிறது. சிலப்பதிகாரத்தின் பெருமையை பறை சாற்றும் இந்த கலைக்கூடம் நிதானமாக சுற்றிப்பார்த்து ரசிக்கவேண்டிய அம்சம் என்பதில் ஐயமில்லை.