கேரளாவின் பதினான்கு மாவட்டங்களான காசர்கோட், கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு, திரிசூர், எர்ணாக்குளம், இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கொல்லம், திருவனந்தபுரம் என்று அனைத்துமே தன்னளவிலே அற்புதமான சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகின்றன. அதோடு இந்த மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் கண்களுக்கும், உள்ளத்துக்கும் அறுசுவை விருந்து படைக்கும் எண்ணற்ற சுற்றுலா மையங்கள் கொடி போல படர்ந்து வண்ண வண்ணப்பூக்களை சொரிந்துகொண்டிருக்கின்றன.கேரளாவின் மணற்பாங்கான கடற்கரைகளும், பேரின்பத்தை தரும் உப்பங்கழிகளும், இயற்கை எழிலால் போர்த்தப்பட்ட மலைவாசஸ்தலங்களும், பக்திமணம் கமழும் இடங்களும் சுற்றுலாப் பயணிகளை உற்சாகமூட்டி அவர்களின் வாழ்நாளெல்லாம் மறக்க முடியாத இன்பச் சுமையை சுமக்கச் செய்யும் பேரற்புதங்கள். இங்குள்ள பறவைகள் சரணாலயத்தை பார்க்க போகலாமா?
மங்களவனம் பறவைகள் சரணாலயம்
பறவை ரசிகர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் பிடித்தமான இடம் இந்த மங்களவனம் பறவைகள் சரணாலயம் ஆகும். இது எர்ணாகுளத்தில் உயர்நீதிமன்றத்துக்கு பின்புறம் உள்ளது. பல அரிய வகை புலம்பெயர் பறவைகள் மற்றும் வசிப்பிட பறவைகளை இந்த சரணாலயத்தில் காணலாம்.
பறவைகள் மட்டுமன்றி புதர்க்காடுகளால் ஆன இந்த சரணாலயத்தில் பலவகை தாவரவகைகள் மற்றும் காட்டுயிர்களையும் பார்க்கலாம். இப்பகுதி கொச்சி உப்பங்கழிப்பகுதியுடன் ஒரு கால்வாய் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
பல அரிய வகை தாவரங்களையும் பறவையினங்களையும் கொண்டுள்ளதால் 2004ம் ஆண்டில் இது பாதுகாக்கப்பட்ட வனச்சரகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பசுமையான சதுப்பு நிலப்பகுதியான இது எர்ணாகுளம் பகுதியின் சுவாசப்பை என்றே அழைக்கப்படுகிறது.
எப்போது செல்லலாம்
ஜனவரி மாதத்திலிருந்து மார்ச் மாத பாதி வரை இங்கு அதிக அளவில் புலம்பெயர் பறவைகள் வருகை தருவதால் அப்பருவத்தில் இந்த சரணாலயத்திற்கு விஜயம் செய்வது சிறந்தது.
அருகிலுள்ள ரயில் நிலையம் : தெற்கு எர்ணாகுளம் 4கிமீ தூரம்
அருகிலுள்ள விமான நிலையம் : நெடும்பசேரி விமான நிலையம் 34கிமீ
சரணாலயம் திறந்திருக்கும் நேரம்:
வாரநாட்கள் - காலை 5.30மணி முதல் மாலை 6 மணி
வாரஇறுதி நாட்கள் - காலை 6 மணி முதல் மாலை 6 மணி
Augustus Binu
கடலுண்டி பறவைகள் சரணாலயம்
மலப்புரம் மாவட்டத்தில் அழகிய சிறு சிறு தீவுகளுக்கு மத்தியில் அமைந்திருக்கும் கடலுண்டி பறவைகள் சரணாலயம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய சுற்றுலாப் பகுதி. இந்த பறவைகள் சரணாலயம் கடலுண்டி எனும் எழில் கொஞ்சும் குக்கிராமத்தில், கடலுண்டி ஆறு அரபிக் கடலோடு சங்கமிக்கும் இடத்தில் அமைந்திருக்கிறது.
கடலுண்டி சரணாலயம் கடல் மட்டத்திலிருந்து 200 மீட்டர் உயரத்தில், பிரம்மாண்ட குன்றுகள் சூழ அமையப்பெற்றிருப்பது பறவை காதலர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்கும். இந்த சரணாலயம் ஏராளமான புலம்பெயர் பறவையினங்களுக்கு பருவ கால வசிப்பிடமாக இருந்து வருகிறது.
வருகை தரும் பறவையினங்கள்
இங்கு மலபார் இருவாய்க்குருவி, சதுப்பு நிலக் கொக்கு, கடற்பறவை, மரங்கொத்தி, மீன்கொத்தி, பிராமினி பருந்து, விம்ப்ரேல், டார்டர், சாண்ட்பைப்பர் போன்ற பறவையினங்களை நீங்கள் கண்டு ரசிக்கலாம்.
இவைதவிர இந்த சரணாலயத்தில் மீன், ஆமை, நண்டு உள்ளிட்ட கடல் வாழ் பிராணிகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. கடலுண்டி சரணாலயத்துக்கு அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களில் சுற்றுலா வருவது சிறந்த அனுபவமாக இருக்கும். இந்தக் காலங்களில் நீங்கள் இங்கு வந்தால் பறவைகளை ரசிப்பதோடு படகுப் பயணம் சென்றும் பொழுதை கழிக்கலாம்.
எப்போது செல்லலாம்
காலை 5 மணி முதல் மாலை 7 மணி வரை வாரம்முழுவதும் திறந்திருக்கும்.
அனுமதி கட்டணம் - நபருக்கு 25 ரூ வீதம் வசூலிக்கப்படுகிறது.
PC: Dhruvaraj
பரம்பிக்குளம் காட்டுயிர் சரணாலயம்
இயற்கை ரசிகர்களுக்கு திகட்டாத விருந்து தர காத்திருக்கும் பரம்பிக்குளம் காட்டுயிர் சரணாலயமானது தமிழ்நாட்டிலுள்ள ஆனைமலைக்கும், கேரளாவிலுள்ள நெல்லியம்பதி மலைத்தொடருக்கும் இடையில் அமைந்துள்ளது. செழுமையான தாவரப்பசுமையுடன் காட்சியளிக்கும் இந்த பள்ளத்தாக்குப்பகுதி அவசியம் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு பிரதேசமாகும்.
ஏராளமான காட்டுயிர் அம்சங்கள், பலவகை தாவர இனங்கள் போன்றவற்றை கொண்டுள்ள இந்த சரணாலயம் 285 ச.கி.மீ பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. உலகிலேயே பல்லுயிர் சூழலியல் அம்சம் காணப்படும் 34 இடங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த வனப்பகுதியில் தனியார் வாகனங்கள் நுழைய அனுமதியில்லை.
சஃபாரி
வனவிலங்குகளை பார்த்து ரசிக்க ‘சஃபாரி' எனப்படும் காட்டுச்சுற்றுலா வாகனங்கள் மூலம் சுற்றுலாப்பயணிகள் காட்டுக்குள் செல்லலாம். புலிகள், சிறுத்தைகள், காட்டு நாய்கள், யானைகள், காட்டெருமைகள் போன்ற விலங்குகளை இந்த காட்டுச்சுற்றுலாவின் போது தரிசிக்க வாய்ப்பிருக்கிறது. 134 அரிய வகைப்பறவைகளும் இங்கு வசிப்பதாக ஆய்வாளர்களால் சொல்லப்படுகிறது.
உயிரினங்கள்
பலவிதமான பூச்சிகள், ஊர்வன மற்றும் நீர்-நில வாழ்வன, மீன்கள், பட்டாம்பூச்சிகள், மூலிகைச்செடிகள் போன்றவற்றை இந்த வனப்பகுதியில் பார்க்கலாம். சுற்றுலாப்பயணிகளுக்காகவே கூடாரங்கள் முதல் மரவீடு வரை பல வகையான தங்குமிட வசதிகளும் இந்த சரணாலயத்தில் செய்யப்பட்டுள்ளன.
எப்படி செல்லலாம்
சாலை மார்க்கமாக மட்டுமே பாலக்காடு அல்லது கோயமுத்தூரிலிருந்து இந்த சரணாலயத்துக்கு பயணம் செய்ய முடியும். பொள்ளாச்சியிலிருந்தும் பஸ் வசதிகள் உள்ளன. காலை 7 மணி முதல் மாலை 6 மணி முதல் இந்த பரம்பிக்குளம் காட்டுயிர் சரணாலயம் பயணிகளுக்கு திறக்கப்படுகிறது.
PP Yoonus
குமரகம் பறவைகள் சரணாலயம்
குமரகம் பறவைகள் சரணாலயம் அல்லது வேம்பநாட் ஏரி பறவைகள் சரணாலயம் என்று அழைக்கப்படும் இந்த சரணாலயம் வேம்பநாட் ஏரியில் கிழக்குக்கரையில் அமைந்துள்ளது. உப்பங்கழி ஏரியை பின்புலமாக கொண்டு காட்சியளிக்கும் இந்த இயற்கைப்பிரதேசத்தின் அழகு பார்வையாளர்களை பரவசமூட்டும் இயல்புடையதாகும்.
பலவிதமான புலம்பெயர் பறவைகள் வருகை தரும் பகுதி என்பதால் பறவை ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இந்த சரணாலயத்தை விரும்பி தேடி வருகின்றனர் 14 ஏக்கர் பரப்பளவில் பரந்துள்ள இந்த சரணாலயப்பகுதிக்கு இமாலயம் மற்றும் சைபீரியா போன்ற தொலைதூரங்களிலிருந்தும் புலம்பெயர் பறவைகள் குறிப்பிட பருவங்களில் வருகை தருகின்றன.
பறவையினங்கள்
குயில், நீர்க்கோழி, நீர்க்காகம், கொக்கு, ஆந்தை, நாரை, கானாங்கோழி, வானம்பாடி, பாம்புத்தாரா, தாழைக்கோழி, சைபீரிய நாரை, கிளி மற்றும் ஈப்பிடிப்பான் போன்ற பறவைகள் இந்த சரணாலயத்தில் அதிகமாக வசிக்கின்றன.
எப்போது செல்லலாம்
பார்வை நேரம்: காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை
நுழைவுக்கட்டணம்: 5 ரூபாய் (இந்திய பயணிகளுக்கு)
45 ரூ வெளிநாட்டுப் பயணிகளுக்கு)
சுற்றுலா வழிகாட்டி கட்டணம்: 10 - 200 ரூபாய்
படகுச்சவாரி கட்டணம்: 200 -250 ரூ (இரண்டு மணி நேரத்துக்கு)
உகந்த நேரம்: அதிகாலை நேரம் மற்றும் பொழுது சாயும் நேரம்
சலிம் அலி பறவைகள் சரணாலயம்
சலிம் அலி பறவைகள் சரணாலயம் என்றும் அழைக்கப்படும் இந்த தட்டேக்காட் பறவைகள் சரணாலயம் எர்ணாகுளம் பகுதியில் அமைந்துள்ளது. பறவை ஆர்வலர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் இது மிகவும் பிடித்த இடமாக பிரசித்தி பெற்றுள்ளது.
பல இந்திய வகை ஊர்வன ஜந்துகளும், விலங்குகளும் இங்கு வசிக்கின்றன. நவம்பர் முதல் ஜுன் மாதம் வரை இங்கு பலவகை புலம்பெயர் பறவைகளும் வந்து செல்கின்றன. இவற்றைப்பார்ப்பதற்காகவே இக்காலத்தில் அதிகமான பறவை ஆராய்ச்சியாளர்கள் இந்த சரணாலயத்துக்கு வருகை தருகின்றனர்.
பறவையினங்கள்
தட்டேக்காட் பறவைகள் சரணாலயத்தில் கிழக்கு வளைகுடா ஆந்தை எனப்படும் ஒரு அழிந்து வரும் ஆந்தை இனம், மலபார் சாம்பல் இருவாட்சி, இளசிவப்பு மூக்கு பனங்காடை, சிவப்பு தொண்டை குக்குறுவான், பாம்புப்பருந்து, இந்திய மலை இருவாட்சி மற்றும் நீலச்சிட்டு போன்ற அரிய வகை பறவைகள் வசிப்பதால் பார்வையாளர்கள் விசேஷமாக இவற்றைத் தேடி வருகின்றனர்.
அரிய பறவை வகைகள் மட்டுமல்லாமல் இங்குள்ள தோல்பதன அருங்காட்சியகம் மற்றும் வனவிலங்கு மறுவாழ்வு மையம் போன்றவற்றுக்கும் பயணிகள் வருகை தரலாம்.
எப்போது செல்லலாம்
பயணிகளின் வாகனங்களுக்கு இந்த சரணாலயத்தில் அனுமதி இல்லை. உள்ளூர் வழிகாட்டிகளும் இந்த சரணாலயத்தை சுற்றிப்பார்த்து ரசிப்பதில் உதவுகின்றனர். தட்டேக்காட் பறவைகள் சரணாலயம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்கப்படுகிறது.
Lip Kee Yap