கீழுண்ண எழரா பீச் எனும் பெயரானது கீழுண்ண பீச் மற்றும் எழரா பீச் ஆகிய இரண்டு அடுத்தடுத்துள்ள அழகிய கடற்கரைகளை சேர்த்தே குறிப்பிடுகிறது. அதிக கூட்டமில்லாத, அமைதியான, ஆழமில்லாத அலைப்பகுதியுடன் காட்சியளிக்கும் ரம்மியமான இந்த கடற்கரைகள் கண்ணூர் பகுதியில் பிரசித்தமான பொழுதுபோக்கு கடற்கரைகளாக புகழ்பெற்றுள்ளன. இந்த இடத்துக்கு ஒரு பயணம் செல்ல திட்டமிட்டு, அங்கு செல்ல ஏற்புடைய வழிகள், பொழுதுபோக்குகள், ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை, எப்படி செல்வது மற்றும் பல தகவல்களை இந்த பதிவில் காண்போம்.
ரெட்டை கடற்கரைகள்
கீழுண்ண ஏழரா கடற்கரைகள் என்பவை ரெட்டை கடற்கரைகள் ஆகும். கீழுண்ண என்ற கடற்கரையும், ஏழரா எனும் கடற்கரையும் ஒருமித்து சேர்ந்தே அழைக்கப்படுகின்றன. இரண்டும் அருகருகே ஒட்டியே காணப்படுகின்றன. கண்ணூரில் இன்னும் நிறைய கடற்கரைகள் இருந்தாலும் இந்த கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மிக அதிகம். அதிலும் இந்த இடத்துக்கு இன்னும் சில சிறப்பம்சங்களும் இருக்கின்றன.
தென்னை மரங்களின் அரசாட்சி
இந்த கடற்கரையின் ஒரு ஓரத்தில் மிக அழகிய தென்னை மரங்கள் சூழ்ந்து காணப்படும் . இவை காண்பதற்கு மிகவும் அழகாக காட்சி தரும். தென்னை மரங்களின் எண்ணிக்கையையும் நம்மை அசர வைக்கும். நீருக்குள் ஆங்காங்கே கருமை நிற பாறைகள் தலை தூக்கி நிற்கும். அவற்றில் நீர் வந்துரசி காதல் செய்வதற்கு சான்றாக ஏற்பட்ட துளைகளில் நீர் சென்று வந்துகொண்டிருக்கும். நீரைக் கண்டு ஏங்கிக்கொண்டிருக்கும் கடற்கரை மணலும், அதன் சிறு ஓரத்தில் நனைந்து பூரிப்படையும். அதில் நாம் ஒய்யார நடைபோட்டு, கால் நனைத்து மகிழவும் சிறப்பாக இருக்கும் இந்த கடற்கரை.
ஏழரா கடற்கரை
இது தெற்கு பக்கத்தில் இருக்கும் அழகிய கடற்கரையாகும். இங்கும் ஆங்காங்கே சில பாறைகள் தென்படும். அவை பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். அதன் ஓரத்தில் இருக்கும் தென்னை மரங்களின் அழகையும் சேர்த்து பார்க்கும்போது, அப்படி ஒரு இயற்கை காட்சி மனதை வருடும்.
முனம்பம்
இதன் தெற்கு முனைக்கு முனம்பம் என்று பெயர். இந்த இடத்தில் மேல் கூரையிட்ட ஒரு சிறிய கட்டிடம் உள்ளது. இது பச்சை நிறத்தில், பழைய கட்டிடம் போன்று காட்சியளிக்கும். இதன் ஒரு பக்கத்தில் நுழைவு வாயில் இருக்கிறது. இதன் அருகில் இருக்கும் கடற்கரையில் நீச்சல் அடித்து குளிக்க ஏதுவானதாக இருக்கிறது.
மழைக்காலத்தில் சென்றால்...
மழைக்காலத்தின் நடுவில் அல்லது சில நாட்கள் இடைவெளியில் இந்த இடத்துக்கு சென்றால், மிக அழகான தருணங்களும், அனுபவங்களும் காத்திருக்கின்றன. இங்கு பெரும்பாலும் மாலைகளில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். அவர்கள் இங்கு வருவதை இதயப்பூர்வமாக உணர்வதாகவும், போகும்போது இங்கேயே மனதை விட்டுவிட்டு செல்வதாகவும் நம்புகின்றனர்.
என்னெல்லாம் செய்யலாம்
நீச்சல், சூரிய குளியல் ஆகியவற்றுக்கு பெயர் பெற்றது இந்த கடற்கரை. நீங்கள் இங்கு வந்தால் சிறுவர் சிறுமியர் உட்பட எல்லாரும் நீச்சலடித்து குதூகலிக்கலாம். சூரிய குளியல் செய்வோரும் இங்கு வருகை தரலாம். இங்குள்ள கிராமத்தை சுற்றி வரலாம். அது மனதுக்கு இதமானதாக இருக்கும். இப்படி பல விசயங்கள் இந்த கடற்கரையில் நீங்கள் செய்யவேண்டியவையாகும்.
எங்கு தங்குவது
இந்த கடற்கரைக்கு அருகிலேயே நிறைய விடுதிகள் கட்டணத்துக்கு ஏற்ப வசதிகளுடன் காணக்கிடைக்கின்றன. அங்கு சென்று நீங்கள் தங்க முடியும். மேலும் கொஞ்ச தூரம் பயணித்தால், உங்களுக்கு தேவையான வசதிகளுடன் நிறைய விடுதிகளை காணமுடியும்.
எப்படி செல்வது
கண்ணூரிலிருந்து வெறும் 11 கிமீ தூரத்தில் இந்த கடற்கரை உள்ளது. இங்கிருந்து கடற்கரைக்கு செல்ல வாடகை வண்டிகள், ஆட்டோக்கள் கிடைக்கும். அதன் மூலம் எளிதில் நாம் கடற்கரையை அடையலாம். அதிக பட்சம் அரைமணி நேரத்தில் இந்த இடத்தை அடையமுடியும்.
மற்ற தகவல்கள் சுருக்கமாக
பரந்து காணப்படும் மணற்பாங்கான கடற்கரைகளும், ஆங்காங்கு சிற்பங்கள் போன்று காட்சியளிக்கும் பாறைகளும், ஆழமில்லாத தங்க மணற்பரப்பில் வந்து கால்களை ஸ்பரிசிக்கும் அலைகளும் இந்த கடற்கரைகளின் சுவாரசியமான அம்சங்களாகும். குறைந்த ஆழத்தையும் நிசப்தத்தையும் கொண்டிருக்கும் இந்த வளைகுடாப்பகுதி நீந்தி மகிழ்வதற்கும் சூரியக்குளியலில் ஈடுபடுவதற்கும் ஏற்ற இடமாக உள்ளது. பரபரப்பான வாழ்க்கை முறையிலிருந்து சற்றே விலகி இயற்கை எழில் மிகுந்த கடற்கரையில் மனதை உற்சாகப்படுத்திக்கொள்ளவேண்டும் என்று எண்ணுபவர்கள் யோசிக்காமல் இந்த கடற்கரைகளுக்கு வந்து சேரலாம். ஒரு மாலை நேரத்தை இங்கு கழித்தாலே போதும் நம் மனம் லேசாகி விட்ட உணர்வைப்பெறலாம். மழைக்காலம் தவிர்த்து மற்ற எல்லா நாட்களிலும் இந்த கடற்கரைப்பகுதிக்கு பயணம் செய்யலாம்