கண்ணூர் அல்லது கண்ணனூர் எனும் கேரளத்தின் அழகிய தளத்துக்கு போயிருக்கீங்களா? அப்படியானால் கண்ணூரின் செழுமை நிறைந்த பகுதிகளை கண்டிருப்பீர்கள்தானே. அங்கு இருக்கும் கடற்கரைகள், கலாச்சார பண்பாட்டு நிகழ்வுகள் என அனைத்தையும் தெரிந்திருக்குமல்லவா. சரி கீழுண்ண ஏழரா பீச் பற்றி தெரியுமா? சரி வாங்க பார்க்கலாம்.
ஒன்றல்ல இரண்டு கடற்கரைகள்
கீழுண்ண எழரா பீச் எனும் பெயரானது கீழுண்ண பீச் மற்றும் எழரா பீச் ஆகிய இரண்டு அடுத்தடுத்துள்ள அழகிய கடற்கரைகளை சேர்த்தே குறிப்பிடுகிறது. இவை இரண்டும் அருகில் அமைந்துள்ளதும், இதன் அழகும் காண்போரை எளிதில் ஈர்க்கும் தன்மையுடையது. அழகியல் தாண்டி இங்கு செய்யவேண்டியவற்றையும் சிறப்புடன் காண தொடர்ந்து இந்த கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
தனிமையில் இனிமை காண
அதிக கூட்டமில்லாத, அமைதியான, ஆழமில்லாத அலைப்பகுதியுடன் காட்சியளிக்கும் ரம்மியமான இந்த கடற்கரைகள் கண்ணூர் பகுதியில் பிரசித்தமான பொழுதுபோக்கு கடற்கரைகளாக புகழ்பெற்றுள்ளன. இந்த அழகு நிறைந்த கடற்கரை தனிமையில் இனிமை காண நினைக்கு காதல் இணைகள் அல்லது தம்பதிகளுக்கு மிக ஏதுவானதாக இருக்கும். மேலும் இங்கு கிடைக்கும் திண்பண்டங்களை கொறித்த வண்ணம் காதல் இசையை தொடரலாம்.
கண்ணூருக்கு மிக அருகில்
இந்த இரட்டை கடற்கரைகள் கண்ணூர் நகரத்திலிருந்து 12 கி.மீ தூரத்தில் சாலைமார்க்கமாக சுலபமாக சென்றடையும்படி அமைந்துள்ளன. கண்ணூர் மட்டுமல்ல இதன் அருகிலுள்ள இடங்களுக்கு பயணிக்கும் மக்களும் சமீப நாட்களில் அதிக அளவில் இந்த கடற்கரைகளுக்கு வருகை தருகின்றனர். சுற்றுலா வாய்ப்புகள் அதிகப்பட்டுள்ளதும் ஒரு காரணம் என்றாலும் இதன் சிறப்பு இன்னும் பலருக்கு சென்றடைய வேண்டும்.
என்னென்ன செய்யலாம்
பரந்து காணப்படும் மணற்பாங்கான கடற்கரைகளும், ஆங்காங்கு சிற்பங்கள் போன்று காட்சியளிக்கும் பாறைகளும், ஆழமில்லாத தங்க மணற்பரப்பில் வந்து கால்களை ஸ்பரிசிக்கும் அலைகளும் இந்த கடற்கரைகளின் சுவாரசியமான அம்சங்களாகும். இந்த கடற்கரைகளில் நண்பர்களுடன் செல்பவர்களுக்கு ஒரு முழு பொழுதுபோக்கு நிறைந்த சிறப்பான கொண்டாட்டம் காத்திருக்கிறது.
ஆழம் குறைந்த அற்புத கடல்
குறைந்த ஆழத்தையும் நிசப்தத்தையும் கொண்டிருக்கும் இந்த வளைகுடாப்பகுதி நீந்தி மகிழ்வதற்கும் சூரியக்குளியலில் ஈடுபடுவதற்கும் ஏற்ற இடமாக உள்ளது.
மனதை உற்சாகப்படுத்துங்கள்
பரபரப்பான வாழ்க்கை முறையிலிருந்து சற்றே விலகி இயற்கை எழில் மிகுந்த கடற்கரையில் மனதை உற்சாகப்படுத்திக்கொள்ளவேண்டும் என்று எண்ணுபவர்கள் யோசிக்காமல் இந்த கடற்கரைகளுக்கு வந்து சேரலாம்.
மழைக்காலங்களில் இந்த இடத்தை தவிர்ப்பது சிறந்தது
ஒரு மாலை நேரத்தை இங்கு கழித்தாலே போதும் நம் மனம் லேசாகி விட்ட உணர்வைப்பெறலாம். மழைக்காலம் தவிர்த்து மற்ற எல்லா நாட்களிலும் இந்த கடற்கரைப்பகுதிக்கு சென்று குதூகலிக்கலாம்.