கொடச்சத்ரி, கர்நாடகாவில் சிமோகா மாவட்டத்தில் இருக்கும் அழகு நிறைந்த மலைவாசஸ்தலமாகும். 'மலைகளின் மல்லிகை; என்ற புனைப்பெயருடன் அழைக்கப்படும் இந்த மலையை இயற்கை புராதன சின்னமாக அறிவித்து கர்னாடக அரசு பாதுகாத்து வருகிறது. இங்கு அருவிகள், கோட்டைகள், ட்ரெக்கிங் பாதைகள், அற்புதமான இயற்கை காட்சிகள் என ஏராளமான நிகழ்விடங்கள் உண்டு. இன்னும் வர்த்தக சுற்றுலாத்தலமாக மாறாமல் அசுத்தமற்று பேரழகுடன் திகழ்கிறது கொடச்சத்ரி மலை. வாருங்கள், அற்புதமான சுற்றுலா அனுபவத்தை உங்களுக்கு தரக்கூடிய இவ்விடத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.
சர்வஜன பீடம்:
புகைப்படம்: Rajeevvsm
ஹிந்து மதத்தின் முக்கிய ஆன்மீக குருக்களில் ஒருவராக பார்க்கப்படும் ஆதிசங்கரர் அமர்ந்து தியானம் செய்த இடம் தான் இந்த சர்வஜன பீடம். ஆதிசங்கரரின் பெரும் ஆன்மீக பயணத்தின் ஒரு பகுதியாக மூகாம்பிகை அம்மனை தரிசிக்க வந்ததாகவும் அப்போது இம்மலையின் மேல் அமர்ந்து தியானம் செய்தார் எனவும் கூறப்படுகிறது. சிறிய மண்டபம் போல அமைந்திருக்கும் இந்த இடத்திற்கு வரும் பக்தர்கள் சிறுது நேரம் அமர்ந்து தியானம் செய்துவிட்டு செல்கின்றனர். இந்த மண்டபத்திற்கு அருகில்தான் மூகாம்பிகை அம்மனின் ஆதி மூலஸ்தானம் அமைந்திருந்ததாகும் பின்னர் அது தற்போதுள்ள கோயிலுக்கு மாற்றப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.
ஹிட்லுமனே அருவி:
புகைப்படம்: Shrikanth n
இவ்வளவு அழகாக ஒரு அருவியை நம் வாழ்க்கையில் பார்த்திருக்கவே முடியாது. அற்புதமான இயற்கை சூழலுக்கு மத்தியில் அமைந்திருக்கும் இவ்வருவிக்கு அவசியம் சென்று பாருங்கள். பாறைகளின் மேல் இருந்து ஆர்ப்பரித்துகொட்டும் அருவியை சூரியக்கதிர்கள் ஊடறுத்துச்செல்கையில் அங்கு எட்டிப்பார்க்கும் வானவில் ஒளி வர்ணஜாலம் செய்யும். கொடச்சத்ரியில் ஐந்து கி.மீ தொலைவில் இவ்வருவி அமைந்திருக்கிறது. இந்த அருவிக்கு செல்லும் பாதை ட்ரெக்கிங் செல்ல ஏற்றது.
நகரா கோட்டை:
புகைப்படம்: Vedamurthy J
கொடச்சத்ரியில் இருந்து 25 கி.மீ தொலைவில் அமைந்திருகிறது 18 நூற்றாண்டில் கட்டப்பட்ட நகரா கோட்டை. 16ஆம் நூற்றாண்டில் இருந்து கர்நாடகாவை ஆண்ட 'கேளடி' அரசர்களின் கடைசி தலைநகராக இந்து திகழ்ந்திருக்கிறது. பின்னர் கடைசியாக மன்னர் ஹைதர் அலியால் கைப்பற்றப்பட்டது. சிறிய குன்றின் மேல் அமைந்திருக்கும் இந்த கோட்டையின் அருகில் நீலகண்டேஸ்வரர் கோயில், 'தேவகங்கா' என்னும் மிகப்பெரிய நீர்த்தொட்டி, குட்டே வேங்கடரமண சுவாமி கோயில் போன்றவையும் அமைந்திருக்கின்றன. மூகாம்பிகை அம்மன் கோயில் இவ்விடத்தில் இருந்து 40கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது.
சூரிய அஸ்தமனம்:
புகைப்படம்: Ashwin Kumar
கொடச்சத்ரி வரும் யாவரும் கட்டாயம் தவறவிடக்கூடாத ஒன்று இங்கிருந்து நமக்கு காணக்கிடைக்கும் சூரிய அஸ்தமனம் ஆகும். மேகமூட்டம் இல்லாத தெளிவான நாளில் இம்மலையின் மேல் இருந்து அரேபியக்கடலை நாம் காண முடியும். சூரிய அஸ்தமனத்தின் போது சூரியனின் பொன்னிறமான ஒளிக்கதிர்கள் கடலை தங்க பஸ்பம் போல தோன்றவைக்கும் அற்புதமான காட்சியை காண அதனை அற்புதமாக இருக்கும்.
கொடச்சத்ரியில் ட்ரெக்கிங்:
புகைப்படம்: Swaroop C H
கொடச்சத்ரியின் சாரலில் அமைந்திருக்கும் நகோடி கிராமத்தில் இருந்து ட்ரெக்கிங் பாதை ஆரம்பிக்கிறது. இம்மலையில் கூடாரம் அமைத்து இரவு தங்க வேண்டுமெனில் வணதுரயிடம் முன்னனுமதி பெற வேண்டும். இரவு உணவை நாமே எடுத்துச்செல்வது நல்லது. ஒருவேளை நமக்கு உணவு தேவையெனில் கர்நாடக அரசினால் நிர்வகிக்கப்படும் பங்களாவில் இருந்து எளிமையான உணவுகளை பெற்றுக்கொள்ளலாம். கொடச்சத்ரியில் தாங்கும் விடுதிகள் எதுவும் இல்லை. எனவே 21 தொலைவில் இருக்கும் கொல்லூரில் நல்ல தாங்கும் விடுதிகள் வாடகைக்கு கிடைக்கும்.
எப்படி அடையலாம்?
புகைப்படம்: Premnath Thirumalaisamy
பேகளுருவில் இருந்து 260 கி.மீ தொலைவில் இருக்கும் ஷிமொகாவை சாலை வழியாக அடைந்து அங்கிருந்து நகோடி கிராமத்தை அடையலாம். மேலே சொன்னது போல ட்ரெக்கிங் செய்ய விரும்புகிறவர்கள் அங்கிருந்து தொடங்கலாம். கொடச்சத்ரி மலை சிகரத்தை அடையவேண்டுமெனில் நகோடியில் இருந்து ஜீப் மூலம் மட்டுமே செல்ல முடியும்.
இயற்கையை மனதார ரசிக்க வேண்டும் என நினைப்பவர்கள் கொடச்சத்ரிக்கு கட்டாயம் சென்றுவாருங்கள்.